மண்ணுலகில் வாழ்ந்தாலும், மேலுலகைச் சார்ந்தவற்றையே நாம் நாட வேண்டும் என்பது சீடத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத வேண்டுகோள். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே.
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டி வர ஆன்மீகப் பயிற்சி தேவை. இப்பயிற்சிக்குரிய காலம் இத்தவக்காலம். முயற்சி செய்வோம். முயல்வோரை கடவுள் கைவிடுவதில்லை.
ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வதே நமது முதல் கடமை என்பதை உணர்ந்து, பேதுருவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கத்தோலிக்கத் திருஅவையில் தொடர்ந்து நம் பங்கை ஆற்றுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் (synodality) நமது கொள்கை பயணம் என்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
‘நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்’ (எசா 1:27) என நமக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே, ‘வாழ்வு’ என்பது ஆண்டவர் கையில் அல்ல... நம் கையில் உள்ளது.
நமது சகோதரத்துவ உறவை அன்பியங்களில் அல்லது அ.தி.ச.-வில் வெளிப்படுத்தாமல் ஒதுங்கிப்போனால், நாம் தூய ஆவியாருக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
நமது நோன்பு:
1.நம்மை கடவுளோடு ஒன்றிக்க வேண்டும் (இறைவேண்டல்);
2.நமக்குள் அமைதி கொண்டு வரவேண்டும் (நோன்பு);
3.மற்றும் பிறரோடு நம்மை ஒன்றிக்க வேண்டும் (தர்ம செயல்கள்)
தவக்காலத்தில் பழையன கழிதல் வேண்டும். இல்லையேல் அனுசரிக்கும் தவக்காலம் பொருளற்றது. இந்த தவக்காலத்தில் நமது தேடல் வழக்கத்திற்கு மாறாக, பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவான் 15:8) என்கிறார் இயேசு.
உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ, தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.