“என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது” என்பதை ஏற்று, மனதோடு முழங்கியவாறு, அவரை நாடி வருவோம், .நம்மை நல்வழிபடுத்துவோம்... அவரது ஆற்றலிலும் குணப்படுத்துதலிலும் நம்பிக்கை கொள்வோம்.
நம்முடைய அன்பான தந்தையாம் கடவுள் நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது இத்தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்படும் செய்தியாகும். இரு கரங்களையும் விரித்தவராக அவர் காத்திருக்கிறார்.
நம் துன்பக் காலங்களில் நம்மை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர் அல்ல நம் கடவுள். உடுக்கை இழந்தவன் கைபோல (உடுத்தியுள்ள வேட்டி அவிழ்ந்து விழும்போது) உதவிக்கு வருபவர் போல நம் கடவுள் இருப்பார் என்பதை ஏற்று அவரோடு ஒப்புரவாகி ஒன்றிப்போம். ஏனெனில் அவரே நமது அடைக்கலப் பாறை.
நல்ல கிறிஸ்தவ இம்மை வாழ்வுக்கு நம்மை பயிற்றுவிக்கும் காலம். இன்பகரமான மறுமை வாழ்வுக்கு அடித்தளமிடும் உன்னத காலம். இன்று மனமாற்றத்திற்கு அழைக்கிறது இக்காலம்..
இத்தவக்காலப் பயணத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நாம், இறைப்பணியில் துன்பத் துயரங்களைச் சந்திக்கும் துணிவு மிக்கவர்களாக விளங்க அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டி வர ஆன்மீகப் பயிற்சி தேவை. இப்பயிற்சிக்குரிய காலம் இத்தவக்காலம். முயற்சி செய்வோம். முயல்வோரை கடவுள் கைவிடுவதில்லை.
‘நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்’ (எசா 1:27) என நமக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே, ‘வாழ்வு’ என்பது ஆண்டவர் கையில் அல்ல... நம் கையில் உள்ளது.
எருசலேம் ஆலயத்தை தமது உறைவிடமாகக் கொண்ட ஆண்டவரே நமது இல்லத்தின் தலைவராக இருந்திட வேண்டும். ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்’ (திபா 127:1) என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
நாமும் பல சமயங்களில் மற்றவர்கள் நம்மைக் கண்டித்துத் திருத்த முற்படும் போது அவர்களை ஏற்றுக்கொள்ளாமல்,அவர்களுடைய பிண்ணணி என்னவென்பதை ஆராயத் தொடங்குகிறோம். இப்படிப்பட்ட மனநிலையை அகற்ற இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.