திருத்தந்தையுடன் அல்பேனியா அரசுத் தலைவர் சந்திப்பு ! | Veritas Tamil

மே 25, திங்களன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அல்பேனியா அரசுத் தலைவர் பஜ்ராம் பெகாஜ் ( Mr Bajram Begaj) அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான இந்த சந்திப்பிற்கு பிறகு பஜ்ராம் பெகாஜ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து இந்த சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில்  இருதரப்புக்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்து இரு தரப்பினரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்றும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த துறைகளில் தங்களது ஒத்துழைப்பை மென்மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பமும் தெரிவிக்கப்பட்டது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு அனைத்துலக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தித் தொடர்பகம், குறிப்பாக மேற்கு பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் உள்ள சவால்கள் குறித்தும் இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.