குடும்ப வாழ்வில் ஒருங்கிணைந்த சூழலியலை ஊக்குவிக்கும் மும்பை திருஅவை | Veritas tamil

மேற்கு இந்தியாவின் மும்பை புறநகர்ப் பகுதியான வக்கோலாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒருங்கிணைந்த சூழலியல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில், படைப்பைப் பாதுகாப்பதைத் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுமாறு குடும்பங்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

பங்கின் குடும்பப் பணிக்குழு, மும்பை உயர் மறைமாவட்டத்தின் சுற்றுச்சூழல் அலுவலகத்துடன் இணைந்து, ஆகஸ்ட் 1ஆம் நாள் “குடும்ப வாழ்வில் ஒருங்கிணைந்த சூழலியல்” என்ற தலைப்பில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தது.

திருத்தொண்டர் ஜெய்மி மற்றும் திருமதி லீஜியா பொன்சேகா ஆகியோர் நிகழ்வை வழிநடத்தினர். Laudato Si’, Fratelli Tutti, Amoris Laetitia, Gaudete et Exsultate உள்ளிட்ட திருஅவையின் முக்கிய ஆவணங்களின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருங்கிணைந்த சூழலியல் குறித்த பார்வையை அவர்கள் எடுத்துரைத்தனர்.

பங்கேற்பாளர்களை வரவேற்ற குடும்பப் பணிக்குழுவின் ஆன்மீக இயக்குநர் அருள்தந்தை ரயன் அலெக்ஸ், படைப்பைப் பாதுகாப்பதை கிறிஸ்தவக் குடும்ப வாழ்வுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடும் “பூமியின் கதறலுக்கு” குடும்பங்கள் நடைமுறையில் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதில் இந்நிகழ்வு கவனம் செலுத்தியது. நெகிழிப் பொருட்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், கழிவுகளை முறையாகப் பிரித்தல், மறுசுழற்சி மற்றும் உரமாக்கலை ஊக்குவித்தல், இயற்கைக்கு உகந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

தேவையற்ற நுகர்வு மற்றும் அதிகப்படியான செலவினங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர். பொறுப்பான பராமரிப்பு என்பது வீட்டில் மேற்கொள்ளப்படும் எளிய தேர்வுகளிலிருந்தே தொடங்குகிறது என்று வலியுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் நிலைத்த வாழ்வியல் முறைகளை ஊக்குவிப்பதிலும் இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

தனிநபர்களின் செயல்கள் சிறியதாகத் தோன்றினாலும், ஒன்றிணைந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பேச்சாளர்கள் நினைவூட்டினர். குடும்பப் பணிக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏறத்தாழ 27 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றதால், பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, நிலைத்த வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது குறித்து கேள்விகளை எழுப்பினர்.

இந்நிகழ்வு பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தது என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். இறைவனின் படைப்பைப் பராமரிக்க வேண்டும் என்ற விவிலிய அழைப்புடன் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை இணைத்துப் புரிந்துகொள்ளவும், தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துவதற்கான நடைமுறை வழிகளை அறிந்துகொள்ளவும் இந்நிகழ்வு உதவியதாக பலர் கூறினர்.

சிந்திக்கத் தூண்டும் வகையில் நிகழ்வை வழிநடத்திய பேச்சாளர்களுக்கு குடும்பப் பணிக்குழு நன்றி தெரிவித்தது. மேலும், பங்குத்தந்தை அருள்தந்தை பிரான்சிஸ் கார்வாலோ மற்றும் அருள்தந்தை ரயன் அலெக்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தது. படைப்பைப் பொறுப்புடன் பராமரிப்பதன் வழியாக நற்செய்தியை வாழ்வில் வெளிப்படுத்த குடும்பங்களை ஊக்குவிக்கும் இதுபோன்ற நம்பிக்கை உருவாக்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்ய விரும்புவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tamil Survey Popup Image