சோதனைகளைச் சந்தித்துப் பார்ப்போமே! | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
பிறப்பும் வளர்ப்பும் சரியில்லை என்றாலும், கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் சாதனையாளர்களே!
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறைத்தலைவராக இருப்பவர் இராதாபாய். இவர் ‘வள்ளுவன் பார்வை’ என்ற பார்வையற்றவர்களுக்கான இணையதளத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். இந்த நிலையை இவர் எப்படி எட்டினார்?
இராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலேயே அவருக்குப் பார்வையில் பிரச்சனை தொடங்கி விட்டது. நான்கு வயதானபோது இனிப் பார்வையே கிடையாது என்ற நிலைக்கு வரும்வரை, இராதாபாயின் தந்தை கிருஷ்ண மூர்த்தி, சங்க இலக்கியம் முதல் பாரதியின் கவிதைவரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். “மற்றவர்களால் | செய்ய முடிந்ததை உன்னால் செய்ய முடியும், ஆனால், உன்னால் செய்ய | முடிந்ததை மற்றவர்களால் செய்ய முடியாது” என்று சொல்லிச் சொல்லி தன்னம்பிக்கைப் பெண்ணாக உருவாக்கினார்.
பள்ளிப்படிப்பை முடித்த இராதாபாய், பிரியா என்பவரின் உதவியால் கல்லூரியில் சேர்ந்து, அனைவரும் வியக்கும் வகையில் பி. ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். படிப்பில் உள்ள தாகத்தால் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.
தென்னிந்தியாவிலேயே முனைவர் பட்டம் பெறும், பார்வையிழந்த முதல் பெண் என்ற புகழும் இராதாபாய் அவர்களுக்குக் கிடைத்தது."
சவால்களும் சோதனைகளும் வாழ்வை முன்னோக்கி நகர்த்துகின்றனவே தவிர, யாரையும் பின்னோக்கித் தள்ளுவதில்லை.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
