இறையருள் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

இறையருள் 
நம் வலுவின்மையில் வல்லமையையும் அழுகையில் ஆறுதலையும் பயத்தில் துணிவையும் 
துன்பத்தில் தேற்றரவையும் தாராளமாய் தரும் தெய்வீக ஆற்றல்!

இறையருள் நம் ஆன்மாவின் விளக்கை எண்ணெய்யால் நிரப்பி, 
இருள் நிறைந்த இவ்வுலகில் ஒளிரும் சுடர்களாக 
நாம் ஒளிவீசச் செய்யும் 
ஒப்பிலா ஆற்றல்!

காலைக் கதிரவனைப் போல் 
கடவுளின் அருள் மெல்ல மெல்ல ஆன்மாவில் நுழைந்து, 
சுடர்வீசத் தொடங்கி, 
முழு ஆற்றலோடு ஒளி தந்து, வாழ்வை ஒளிரச் செய்யும் 
ஒண்புகழ் ஆற்றல்! 

இறையருள் என்னும் தோட்டத்தில் காய்ந்த மரங்களும் கனிதரும்; 
சருகான செடிகளும்
பூத்துக் குலுங்கும்;
வாடிய மலர்களும் மணம் வீசும்;
வறண்ட நீரோடைகளும் வற்றாமல் பாயும்!

இறையருளை 
வியப்பு மேலிட நீங்கள் நோக்குவதே உங்கள் ஆன்மீகத்தின் அளவுகோலாகும்.
'என் அருள் உனக்குப் போதும்' என்னும் இறைவனின் குரலே நம்மை நாளும் 
இயக்கும் ஆற்றல்!

இறையருள் 
நம் தவறுகளைக் காட்டிலும் பெரியது; 
நம் எதிர்பார்ப்புகளுக்கும் மேலானது;
நம் தகுதிக்கும் மேலாக இறைவனால் வழங்கப்படும் இலவசக் கொடை!

வாழ்க வளமுடன் நலமுடன் 🌹💐🌷🔥

எழுத்து

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.