ஆசியத் திருஅவையின் எதிர்காலப் பணிக்குப் புதிய திசைகாட்டும் FABC 12வது நிறைவிறுதிப் பேரவை | Veritas tamil
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப்பேரவை, ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில், "ஒன்றிணைந்த திருஅவையாக மாற்றம் பெற்று, ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான அழைப்பு" என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
இந்தப் பேரவையை முன்னிட்டு, FABC தலைவர் மற்றும் இந்தியாவின் கோவா-தமான் பேராயருமான கர்தினால் பிலிப்பே நேரி பெராவோ, ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (RVA)-விற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், ஆசியத் திருஅவையின் எதிர்காலப் பணி குறித்து தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிறைவிறுதிப்பேரவை, ஆசிய நாடுகளின் ஆயர்களை ஒன்றிணைத்து, கண்டம் எதிர்கொள்ளும் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் சமயச் சவால்களின் மத்தியில் திருஅவையின் பணியை ஆராயும் முக்கிய மேடையாக அமைகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள், புனித யோவான் நற்செய்தி 1:50-இல் இடம்பெறும், "நீங்கள் இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்கள்" என்ற இறைவார்த்தையை மையமாகக் கொண்டுள்ளது. கலாச்சார மாற்றங்கள், குடியேற்றம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் சமயப் பல்வகைமை நிறைந்த ஆசியாவில், அமைதி, நல்லிணக்கம் மற்றும் உரையாடலை வளர்க்கும் திருஅவையாக இருக்க வேண்டிய அவசியத்தை கர்தினால் பெராவோ அவர்கள் வலியுறுத்தினார்.
பொதுப்பேரவையின் ஐந்து முக்கிய முன்னுரிமைகள்
இந்தப் பேரவையில் கவனம் செலுத்தப்படும் ஐந்து முக்கிய அம்சங்களை கர்தினால் பெராவோ விளக்கினார்:
- ஆசியத் திருஅவையின் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் சவால்களை இறைவேண்டலோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் மதிப்பீடு செய்தல்.
- பகிர்ந்துகேட்டல் மற்றும் உரையாடல் வழியாக ஆசியத் திருஅவையின் அவசரமான மறைப்பணித் தேவைகளை இனங்காணுதல்.
- உறுப்பினர் ஆயர் பேரவைகளுக்கிடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவை வலுப்படுத்துதல்.
- ஆசியாவின் சமய மற்றும் கலாச்சாரப் பல்வகைமையின் மத்தியில் புரிந்துணர்வு, அமைதி மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் உறவுகளை உருவாக்குதல்.
- திருஅவையும் சமூகமும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு நற்செய்தியின் ஒளியில் மேய்ப்புப் பார்வையுடனும் நடைமுறை அணுகுமுறையுடனும் பதிலளித்தல்.
இந்த நிறைவிறுதிப் பேரவையின் நிறைவில், ஆசியாவில் ஒன்றிணைந்த திருஅவையாக வாழ்வதற்கான நடைமுறை வழிகாட்டி (Vademecum) ஒன்றை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசியத் திருஅவையின் எதிர்காலத்திற்கான மூன்று முக்கிய பங்களிப்புகள்
இந்தப் பேரவை ஆசியத் திருஅவையின் எதிர்கால வளர்ச்சிக்கும் மறைப்பணிக்கும் மூன்று முக்கிய வழிகளில் பங்களிக்கும் என்று கர்தினால் பெராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, ஆசியாவின் உள்ளூர் திருஅவைகளுக்கிடையே ஒன்றிணைந்த பயணத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினரின் பங்கேற்பை ஊக்குவிக்கும்.
இரண்டாவதாக, சமூக, கலாச்சார மற்றும் சமய மாற்றங்களுக்கு ஏற்ப புதிய உற்சாகத்துடனும் படைப்பாற்றலுடனும் நற்செய்தி அறிவிப்புப் பணியைப் புதுப்பிக்கும்.
மூன்றாவதாக, சமயங்களுக்கிடையேயான உரையாடல், நீதி, அமைதி மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதில் திருஅவை மேலும் வலிமையான சாட்சியாக விளங்குவதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
