கிறிஸ்தவ ஒற்றுமைக்காக திருத்தந்தையின் அழைப்பு! | Veritas Tamil

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி உரோம் நகருக்கு வருகை தந்த கான்ஸ்டான்டினோபிள் திருஅவையின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கிறிஸ்தவர்களின் முழுமையான ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி உரோம் வந்திருந்த குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, இரு திருஅவைகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் சகோதரத்துவ உறவின் அடையாளமாக இந்த வருகைகள் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு புனித அந்திரேயா திருவிழாவையொட்டி இஸ்தான்புலிலுள்ள பனார் பகுதியில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் முதுபெரும் தந்தையர் ஆலயத்திற்கு மேற்கொண்ட தனது வருகையை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவுடன் நடைபெற்ற சந்திப்புகள் ஒருவருக்கொருவர் நல்லுறவை வலுப்படுத்தியதுடன், கிறிஸ்தவ ஒற்றுமை குறித்த பொதுவான விருப்பத்தையும் வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

கி.பி. 325ஆம் ஆண்டு நடைபெற்ற நிசேயா முதல் பொதுச்சங்கத்தின் 1700ஆம் ஆண்டு நினைவு கொண்டாட்டம், பல்வேறு திருஅவைகள் மற்றும் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முக்கிய நிகழ்வாக அமைந்ததாகக் கூறிய திருத்தந்தை, நிசேயா விசுவாச அறிக்கையே திருஅவை ஒற்றுமைக்கான அடித்தளமாகவும் வழிகாட்டும் கொள்கையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், 2033ஆம் ஆண்டு கிறிஸ்துவின் மீட்புப் பணியின் இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, உலகின் அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளும் ஒன்றிணைந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

போர்கள், பிளவுகள் மற்றும் சமூகப் பதற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில், ஒரே விசுவாசத்தில் ஒன்றுபட்ட கிறிஸ்தவர்கள் அமைதியின் நம்பகமான

அடையாளமாக விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, அமைதி, புதிய தொழில்நுட்பங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் படைப்பைப் பாதுகாத்தல் போன்ற இன்றைய சவால்களை எதிர்கொள்வதில் கிறிஸ்தவர்களிடையே அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, கிறிஸ்தவ ஒற்றுமையை முன்னெடுப்பதில் கான்ஸ்டான்டினோபிள் முதுபெரும் தந்தையர் திருஅவையின் அர்ப்பணிப்பிற்கும் பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, புனிதர்கள் பேதுரு மற்றும் அந்திரேயாவின் பரிந்துரையால் இறைவன் அனைவரையும் தனது ஆசீர்வாதத்தால் வழிநடத்துவாராக என்று இறைவேண்டல் செய்து தனது உரையை நிறைவு செய்தார்.