நம்பிக்கை வாழ்வில் பாறையாகுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

08 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 18ஆம் வாரம் -வியாழன்
எரேமியா 31: 31-34
மத்தேயு 16: 13-23
 

நம்பிக்கை வாழ்வில் பாறையாகுவோம்!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், எரேமியா இறைவாக்குகளின் நிறைவாக  புதிய உடன்படிக்கை இறையியல் அமைகிறது.  மோசேயின் கீழ் இஸ்ரேல் மக்களுடன் செய்துகொண்ட பழைய உடன்படிக்கையானது  சட்டம் மற்றும்  பலிகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னும், இஸ்ரயேல் மக்கள் தொடர்ந்து பாவம் செய்தமையால் இறை-மக்கள் உறவு சிதைந்தது, சீர்குலைந்தது. பழைய உடன்படிக்கை இஸ்ரயேலரால்  மீறப்பட்டது.  

எனவேதான், இந்தப் புதிய உடன்படிக்கையானது கற்களில் எழுதப்படாமல், கடவுள் தேர்ந்தெடுத்த மக்களின் இதயங்களில் எழுதப்படுவதாக எரேமியா அறிவிக்கிறார்.   ‘கடவுள் அவர்களின் தந்தையாகவும் யூதர்கள் அவரது  மக்களாகவும் இருப்பர்’ என்ற உறவுமுறையிலான என்றுமுள  உடன்படிக்கையை கடவுள் ஏற்படுத்துகிறார்.

இந்த உடன்படிக்கையானது அவர்களின் குற்றங்களை  நீக்கி, கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு புதிய உறவை வளர்க்கும் உடன்படிக்கையாக அமையும் என்று  ஏரோமியா இறைவாக்குரைக்கிறார். 


நற்செய்தி.


இயேசு கப்பர்நாகுமுக்கு வடக்கே ஏறக்குறைய 40 கி.மீ. தூரத்தில் உள்ள பிலிப்புச் செசரியாவுக்குச் செல்கிறார். அப்போதுதான் இயேசு இரு கேள்விகளைச் சீடர்கள் முன் வைக்கிறார். 

1.மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? 
2.நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்? 

முதல் கேள்விக்குப் பல்வேறு பதில்கள் கிடைத்தன. ஆனால், இரண்டாவது கேள்விக்கு சீமோன் அளித்த. ‘'நீர் மெசியா! வாழும் கடவுளின் மகன்' என்றதுதான் இயேசுவை மெய் சிலிர்க்க வைத்தது. இயேசுவுக்கு அவர் யார் என்பது தெரியாத ஒன்றல்ல. ஆனாலும் ஓர் ஆண்டியைப் போல் காட்சிதரும் இயேசு மக்கள் மனதில் யாராக இருக்கறார் என்பதற்கு கிடைத்த விடைதான் ‘மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்பதாகும். இயேசுவின் இந்தக் கேள்வி  யூதர்கள்  அவரை எப்படி காண்கிறார்கள் என்ற தேடலின் விளைவுக்கு தக்கப் பதிலாக  வெளிப்பட்டது.  

அவர்  மெசியா என்று   அறிக்கையிட்ட சீமோனிடம் விண்ணகத்தந்தையே இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்றதோடு, அவரது சீமோன் என்ற பெயரை பேதுரு (பாறை)  என்றும் அந்தப் பாறையின் மேல் இயேசு தனது திருஅவையைக்  கட்டுவார் என்றும் மொழிகின்றார். 

தொடர்ந்து, பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளாது என்று கூறியதோடு,  விண்ணரசின் திறவுகோல்களையும் அவரிடம் தருவதாக வாக்களித்தார்.  விண்ணரசின் திறவுகோல் பேதுருவிடம் இருப்பதனால், மண்ணுலகில் பேதுரு எதையெல்லாம்  தடைசெய்கிறாரோ அவை   விண்ணுலகிலும் தடை செய்யப்படும் என்றும், மண்ணுலகில் அவர் அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என்றும் ஓர் அழுத்தமான இறையியல் போதனையை அளிக்கிறார்.  

இவ்வாறு இயேசு கூறி மூடிக்கும் தருவாயில், அவர்  தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் சீடர்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார்.  திடீரென்று, 'பேதுரு, இயேசுவிடம், 'ஆண்டவரே, இது வேண்டாம். உமக்கு இப்படி நடக்காது' என்று தடை செய்ய  முயல்கிறார்.  ஆனால், இயேசுவிடம்  'அப்பாலே, போ! சாத்தானே!' என்ற .திட்டுக்கு ஆளாகிறார்.

சிந்தனைக்கு.


இன்றைய வாசகங்களைப் பற்றி  சிந்திக்கும்போது, எனக்கு அவை  ஒரு சவாலாக உள்ளதை உணர்கிறேன்.  இயேசு இரத்தம்  சிந்தி நம்மோடு  ஏற்படுத்தியிருக்கும் புதிய உடன்படிக்கையின் வாக்குறுதிக்கு ஏற்ப வாழ முடிகிறதா என்ற உணர்வு என்னில் தோன்றி மறைகிறது. ஏனெனலில், புதிய  உடன்படிக்கையானது,  ஆண்டவர் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது.  இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தந்தார்  என்ற உண்மையை இந்த உடன்படிக்கைச்  சார்ந்துள்ளது.  

இயேசுவின் துன்பத்தில் கடவுள்  அவரது தெய்வீக அன்பை உலகிற்கு வெளிப்படுத்தினார்.  "ஒருவர் தன் உயிரை இன்னொருவருக்காகக் கொடுக்க விரும்புவதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை" (யோவான் 15:13) என்று இயேசு மொழிந்ததை நினைவில் கொள்வோம்.  அதிலும்  உயிரைக் கொடுப்பவர் கடவுளின் ஒரே மகனாக இருக்கும்போது, அதைவிடப் பெரிய தியாக அன்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

இயேசுவின் பக்கம் இருந்த பேதுருவை இயேசு உயர்த்திப் பேசி, பெரிய பொறுப்பை நிறைவேற்றும் கடமையை அவருக்கு அளித்தார். ஆனால், துன்பம் வேண்டாம் என்று இயேசுவுக்கு அறிவுரை வழங்கியபோது, சாத்தானுக்கு இணையாகக் கருதப்பட்டார்.  ஆகவே, கிறிஸ்தவத்தில் சீடத்துவம் என்பது, தலைமைப் பொறுப்பை வகிப்பதில் பெருமை கொள்வதல்ல. ஏற்ற பொறுப்பை இயேசுவின் உண்மை சீடராகப் பல துன்பங்களுக்கிடையில் நிறைவேற்றுதவதில் அடங்கியுள்ளது. 

பழைய உடன்படிக்கை மக்களாக இனியும் நமது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தால், இஸ்ரயேல் மக்களைப்போல் நாமும் சீர்குலைவோம். நமது எண்ணம் விண்ணகத்தை நோக்கியதாக இருந்தால்தான் நாம் இயேசு என்னும் பாறை மீது அடித்தளம் கொண்ட திருஅவையின் மக்களாக வாழ முடியும். மாறாக, இப்பூமியில் கிடைக்கும் புழு பூச்சிகளையே சிறந்த  இரை என்று எண்ணிக் கொண்டு இருந்தால் விண்ணக வாழ்வு கானல் நீராகிவிடும். எண்ணம் போல்தான் வாழ்வு. 


இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, உமது ஆட்சிக்கு முடிவு இராது என்பதையும், நான் உமது புதிய உடன்படிக்கைக்குரிய சீடர்  என்பதையும் நினைவல் கொண்டு வாழ அருள்புரிவீராக. ஆமென். 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452