அஞ்சாமை சீடத்துவத்தின் அணிகலன்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

2 ஜூன் 2025                                                                                                                  
பாஸ்கா 7-ம் வாரம் – திங்கள்
 
தொ.நூல் 19: 1-8
யோவான் 16: 29-33


அஞ்சாமை சீடத்துவத்தின் அணிகலன்!
 

திருத்தூதர் பணிகள் நூலில் உள்ள இப்பகுதியில், பவுல் எபேசு மக்கள் சிலரிடம் பேசுகிறார். அவர்கள் தங்களை இயேசுவின் சீடர்கள், நம்பிக்கையாளர்கள் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள்  யோவான் அளித்த திருமுழுக்கைதான்  பெற்றிருந்தனர். இயேசு கற்றுத் தந்ததுபோல ‘தந்தை , மகன், தூய ஆவியாரின் திருப்பெயரால் திருமுழுக்குப் பெற்றிருக்கவில்லை என்று அறிந்தார். 

தொடரந்து பவுல் அவர்களுக்கு ‘தந்தை , மகன், தூய ஆவியாரின் திருப்பெயரால் திருமுழுக்கு அளித்து   பவுல் அவர்கள் மீது கைகளை வைத்த பிறகு, தூய ஆவியானவர் அவர்களில் இறங்கினார் என்றும் அவர்கள் தூய ஆவியாரின் கொடைகளைப்  பெற்றனர் என்றும் லூக்கா குறிப்பிடுகிறா.

நிறைவாக, பவுல் அவர்களுடன் மூன்று மாதங்கள் தங்கி, அவர்களுக்குக் கற்பித்து, அதிகமான மக்களை விசுவாசத்திற்குக் கொண்டுவர முயன்றார் என்று அறிகிறோம்.

நற்செய்தி.


நற்செய்தியின் இராவுணவு மறையுரையின்போது,  சீடர்கள் இயேசுவிடம், ‘யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்றார்கள். 


அதற்கு, இயேசு அவர்களிடம், "நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?" என்று கேட்டதோடு,  அவர் துன்புறும் வேளையில் அவர்  தனியாய் இருப்பதில்லை. தந்தை அவரோடு இருக்கிறார் என்று கூறுகிறார்.  இயேசு தந்தையின் உடனிருப்பதைத் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உணர்ந்திருந்தார். அதனால்தான் அவரால் தமது பாடுகளை நேரில் சந்திக்க நேர்ந்தது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

 
சிந்தனைக்கு.

இயேசு தம் சீடர்களிடம், ஒருமுறை, “என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவான் 16:33) என்றுரைத்ததை வாசித்திருப்போம்.

ஆம்,  இயேசு ஏற்கனவே உலகை வென்றுவிட்டார்.  அவர் நம்மை தீயோனிடமிருந்து மீட்டுவிட்டார். இன்று தூய ஆவியாரின் கண்காணிப்பிலும், வழிநடத்துதலிலும் நாம் உள்ளோம்.  ஆதலால், நாம் இன்னும் மண்ணகத்தில் இருந்தாலும், தீயோனின் பிடியில் நாம் இல்லை என்ற நம்பிக்கை நம்மில் பெருக வேண்டும். 

இன்றைய வாசகங்கள் நமது  சொந்த நம்பிக்கையை இன்னும் கருத்தூன்றி  சீர்தூக்கிப் பார்க்கவும் தியானிக்கவும் அழைக்கின்றன.  மறைநூலை நன்கு அலசிப்பார்த்தால், இயேசு தம்முடைய சீடராக இருப்பது எளிதாக இருக்கும் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. உலகில் இயேசுவின் சிறந்த சீடராக இருப்போரை துன்புறுத்தும் அரசியல், சமய மற்றும் சமூக இயக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.  இது ஒரு தொடர் பயணம். ஏனெனில் சாத்தானின் ஆட்சி இன்னும் முழுமையாக முறியடிக்கப்படவில்லை. தொடக்க நூல் 3:15-ல்  உள்ளபடி திருஅவைகும் (அவளது வித்துக்கும்) சாத்தானுக்கும் (பாம்பின் வித்துக்கும்) போரட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதுதான் நமக்கான போதனை.

முதல் வாசகத்தில் உள்ளபடி, பவுல் அவர்கள் மீது கைகளை வைத்த பிறகு, தூய ஆவியானவர் அவர்களில் இறங்கினார் என்றும் அவர்கள் தூய ஆவியாரின் கொடைகளைப்  பெற்றனர் என்றும் அறிகிறோம். ஆம். தூய ஆவியாரின் கொடைகள் நம்மை தேற்றுபவை, நமக்கு  வாழ்வளிப்பவை. ‘அச்சம் தவிர்’ என்பது போல, அச்சம் களைந்து சாட்சிய வாழ்வில் தொடர்ந்து முன்னேற உதவுபவை. 

நம் சாட்சிய வாழ்வுக்குத் தேவை துணிவு. இங்கே துணிவு  என்பது உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்க நம்மில் எழும்  அச்சமற்ற நிலை. ‘அச்சம் என்பது மடமையடா…. அஞ்சாமை சீடரின உடமையடா’  என்றே நாம் ஒவ்வொரு நாளும் உரைக்க வேண்டும். 
 
இறைவண்டல்.

‘உள்ளம் கலங்க வேண்டாம், அஞ்சாதீர்’ என்று  உம் சீடர்களைத் தேற்றிய ஆண்டவரே, அஞ்சாமையும் உண்மையும் எனது அணிகலன்களாக அமைய அருள்புரிவீராக. ஆமென்.
  

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452