மீனவர்களுக்காக ஒன்றிணைந்த கத்தோலிக்க இளைஞர்கள் ! | Veritas Tamil

தமிழ்நாட்டின் கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தினர், மார்ச் 1 அன்று தூத்துக்குடி மறைமாவட்டத்திலுள்ள தோமையார்புரம் மீனவக் சமூகத்துடன் ஒற்றுமை தெரிவிக்கும் வகையில் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அணுமின் நிலையம் அருகில் வாழும் அந்த மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை புரிந்துகொள்வதே இந்த முயற்சியின் நோக்கமாக இருந்தது.

இந்தப் பயணம் நோன்புக்கால திருப்பயணத்தின்  ஒரு பகுதியாக இளைஞர் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 46 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை சைமன், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறைத்தொழிலாளர்களும் கலந்து கொண்டு, மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு அறிந்தனர்.

தோமையார்புரம் பகுதி மக்கள் தற்போது கடுமையான கடற்கரை அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக உறுப்பினர்களின் தகவலின்படி, ஜனவரி 18 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பிப்ரவரி 26 முதல் உண்ணாவிரதப் போராட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. கடற்கரை அரிப்பைத் தடுக்க “க்ரோயின்” (groyne) என்ற கடற்கரை பாதுகாப்பு அமைப்பை அமைக்க வேண்டும் என்று அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்தப் பகுதியில் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணமாகக் காட்டி அரசு முன்பு அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டால் இந்த முடிவு நியாயமற்றது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கள ஆய்வின் போது இளைஞர்கள், அணுமின் நிலையம் அருகிலுள்ள கடற்கரைப் பகுதிகளையும் பார்வையிட்டு, வெளியேற்றப்படும் நீர் உள்ளூர் கடல் வளங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கவனித்தனர் மற்றும் பதிவுசெய்தனர்.

இந்தப் பிரச்சினையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மார்ச் 2 அன்று சமூக ஊடகங்களில் ஒரு காணொளியையும் இளைஞர் இயக்கம் வெளியிட்டது, அதில் தோமையார்புரம் மக்களின் போராட்டமும் சவால்களும் வெளிப்படுத்தப்பட்டன.

நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் கூறுகையில், கிராம மக்கள் தொடர்ந்து நடத்தும் போராட்டங்களும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவுகளும் காரணமாக, அரசு அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதியாக ,சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதும், சமூக பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் அவர்களை  மேலும் வலுப்படுத்துவதும் தொடரும் என்று கத்தோலிக்க இளைஞர் இயக்கம் உறுதியளித்துள்ளது.