எல்லீஸ் நகர் பங்கில் வாசகர் வட்டம் தொடக்கம் இளைஞர் இயக்கத்தின் புதிய முயற்சி! | Veritas Tamil
எல்லீஸ் நகர் பங்கில் வாசகர் வட்டம் தொடக்கம் இளைஞர் இயக்கத்தின் புதிய முயற்சி!
மதுரை, நவ, 28: மதுரை உயர்மறைமாவட்டம், எல்லீஸ் நகர் பங்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் சார்பில் "இளைஞர் வாசகர் வட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. பங்குத்தந்தை அருள்பணி. ஜோக்கின் மற்றும் இளைஞர் இயக்கப் பெண்கள் பிரிவு வழிகாட்டி அருள்சகோதரி ஜென்னி அவர்களின் வழிகாட்டலில் தொடங்கப்பட்டுள்ள இந்த வாசகர் வட்டத்திற்கு அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களும் புதிய கருத்தியலைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுமான இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சியின்
முதல் கூட்டம், தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்கப் பாடலுடன் தொடங்கியது. பின்னர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் இக்கூட்டத்தில், ஒவ்வொருவரும் தான் வாசித்த ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்து, தங்களின் பார்வையைப் பகிரலாம் எனவும், பின்னர் கேள்விகள், தெளிவுகள், ஆழமான விவாதங்கள் ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கப்படும் எனவும் இளைஞர் இயக்க பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
அருள்பணி. நித்தின் பிரபு மற்றும் இளைஞர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி. சின்னதுரை ஆகியோர் புத்தக வாசிப்பிற்கான சில உத்திகளையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஜியோ டாமின் எழுதி பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள 'பிழைத்தல் அல்ல வாழ்தல்' என்ற தொடரின் 10 புத்தகங்களில் உள்ள கருத்துகளை இளைஞர் இயக்க உறுப்பினர்களான சுஜி, சுஜிதா, ஏஞ்சல், ஆண்டோ சுஸ்ருதா, பிஷோன் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.
ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, சொல்லாற்றல், சமூக அரசியல் தெளிவு எனப் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஓர் அரிய வாய்ப்பாக இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த வாசகர் வட்டத்தில், அருகில் உள்ள ஞான ஒளிபுரம் மற்றும் சமயநல்லூர் பங்குகளிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்