தன்னை தாழ்த்துவோரே உயர்த்தப்படுவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

31 மே 2025
பாஸ்கா 6-ம் வாரம் – சனி
புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்-விழா
செப்பானியா 3: 14-18
லூக்கா 1: 39-56
தன்னை தாழ்த்துவோரே உயர்த்தப்படுவர்!
செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகம், கடவுளின் உடனிருப்பையும் அவரது மக்கள் மீதான அன்பையும் வலியுறுத்துகிறது, துக்கத்தை வெல்வதிலும் மரியாதையை மீட்டெடுப்பதிலும் குறிப்பிட்ட கவனம் செலுத்த அழைக்கிறது. கடவுளின் நியாயத்தீர்ப்பிலிருந்து எருசலேம் அழிவை மறுசீரமைப்பு மற்றும் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டமாக கடவுள் மாற்ற விரும்புவதை குறிப்பிடுகிறது.
‘மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி’ என்ற வரிகள், இறைவனின் நியாயத்தீர்ப்பு நீக்கப்பட்டதையும் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு, பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று இஸ்ரயேலருக்கு அழைப்பு விடுக்கிறது.
யூதாவும், எருசலேமும் தாங்கள் செய்த தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள், அவர்களை கடவுள் தண்டிக்கவில்லை என்றும், கடவுளைப் புகழ்ந்து போற்றி ஆர்ப்பரிக்க இறைவாக்கினர் செப்பானியா கேட்டுக்கொள்கிறார்.
நற்செய்தி.
வானதூதர் கபிரியேல் கன்னிபெண் மரியாளுக்குத் தோன்றி, மங்கள வார்த்தை சொன்னபோது, அவரது உறவினர் எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் சொல்லிவிட்டுச் சொல்கிறார். எனவே மரியாள் தனது சொந்த ஊரான நாசரேத்திலிருந்து, எலிசபெத்து இருக்கக்கூடிய அயின்கரிம் என்ற மலைநாட்டிற்கு உடனே புறப்பட்டுச் சென்றதை லூக்கா குறிப்பிடுகிறார்.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்' என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
சிந்தனக்கு.
நற்செய்தி இரு உறவினர்களின் சந்திப்பை விவரிக்கிறது. இறைமகனை ஈன்றெடுப்பாய் என்ற செய்தி கபிரியேல் வானதூதரால் எடுத்துரைக்கப்பட்ட போதிலும் தனது உறவினரான எலிசபெத்து கருவுற்றிருப்பது அறிந்து அவரைக் காண அவருக்கு உதவிகள் செய்ய விரைகின்றார் கன்னி மரியா. ‘நான் இறைவனின் தாய்’ என்ற பெருமிதமின்றி தாய்மையுற்று ஆறு மாதம் கர்ப்பினியான வயது முதிர்ந்த உறவினரை தேடி போகிறார்.
ஆம், மரியா தன்னில் கொண்ட அன்பின் ஈர்ப்பை உணர்ந்து, தனது உறவினரான முதிர்வயதுள்ள ஒரு பெண்ணுக்கு உதவச் செல்கிறார். முதிர்வயது பெண்மணியாகிய எலிசபெத் ஒரு நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு, இறைத்திருவுளத்தால் கருத்தரிக்கின்றார். அவரது முதிர்வயதில் கருவுற்றதால் நிச்சயம் உடலளவில் சோர்வுற்றிருப்பார் என்ற இரக்க எண்ணம் இளம் பெண்ணான மரியாவுக்கு இருந்தது. கானா ஊர் திருமணத்திலும் இதே இளகிய மனம் கொண்ட மரியாவை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின் பார்க்கிறோம்.
அருள்மிகப் பெற்றவரே வாழ்க” என்ற வானதூதரின் வாழ்த்தும், வயதான பெண்மணியான எலிசபெத்தின் குரலும் தன் வயிற்றில் சுமக்கும் குழந்தை குறித்த இறைவாக்கை எடுத்துரைக்கின்றன. மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று என்று லூக்கா தமது நற்செய்தியில் பதிவு செய்துள்ளார். எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், ' பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்பதும் நாம் புதிய ஏவாளாகிய மரியாவின் பிள்ளைகள் என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
திருத்தூதர் பவுல் கூறுவது போல், கிறிஸ்துவின் பேரன்பே நம்மை ஆட்கொள்கிறது (2கொரி. 5:14) நம்மை உந்தித்தள்ளுகின்றது, நகர்த்துகிறது. மரியா இத்தகைய அன்பின் ஈர்ப்பை உணர்ந்து, தனது உறவினரான முதிர்வயதுள்ள ஒரு பெண்ணுக்கு உதவச் செல்கிறார்.
மரியாள் எலிசபெத்தைச் சென்று பார்க்கவேண்டும், அவருக்கு உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் மரியாள் விரைந்து சென்று எலிசபெத்துக்கு உதவுகிறார். இதுதான் நாம் மரியாளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஒருவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து, அவர் கேட்பதற்கு முன்பாகவே உதவிசெய்வதுதான் உண்மையான சேவையாக இருக்கும். மரியாள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். ‘என் தாயைப்போன்று பிறர் அன்புப் பணியில் நிலைத்திருங்கள்’ என்று இயேசு சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இன்று நம் மக்களைப் பார்க்கும்போது, மரியா மற்றும் எலிசபெத் வெளிப்படுத்திய அதே பணிவு, தாழ்ச்சி மற்றும் இரக்கம் கொண்ட சிலரை காணமுடிகிறது. ஆனால், பெரும்பாலானோர் சுயமரியாதை மற்றும் சுய முன்னேற்றம் பற்றிய எண்ணத்தில் மூழ்கிவிடுகின்றனர். எந்தவொரு செயலிலும் தங்களுக்குப் பயன் தருவதையே அவர்கள் நாடுகின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்ற எண்ணம் கொண்டவர்களாக, ஆனால் கிறிஸ்தவர்களாக வாழ விரும்புகின்றனர்.
அன்னை மரியாளின் இரக்கம் நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். அன்னையின் வழிகாட்டுதலில் நாம் நடந்தாலே, அது நமக்கு இறைஆசீரைப்பெற்றுத்தரும் என்பதை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்.
புரட்சிமிகு எண்ணமும் செயலும் கொண்ட ஆண்டவரே, உம்மை நம்பி, அன்பு பணி செய்து வாழ்வோருக்கு உயர்நிலை கிட்டும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு வாழும் வரத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
