மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தான்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

30 மே 2025
பாஸ்கா 6-ம் வாரம் – வெள்ளி
தி.பணிகள் 18: 9-18
யோவான் 16: 20-23a
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தான்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், புனித பவுல் கொரிந்துவில் குறைந்தது ஒன்றரை வருடங்கள் தங்கியிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். கொரிந்துவில் உள்ள பெரும்பாலான மனமாறிய புறஇன மக்களிடமிருந்து, அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனாலும், யூதர்கள் சிலரிடமிருந்து அவர் எதிர்ப்பைச் சந்திக்கிறார். இறுதியில் தனது மறைபரப்பு பயணங்களைத் தொடர வேண்டும் என்பதை பவுல் உணர்ந்தார். ஆதலால், அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இயேசு தனது கடைசி இராவுணவு உரையின் தொடர்ச்சியை இன்றும் கேட்கிறோம். ஒரு தாய் பிரசவிக்கும் அனுபவத்தைப் போன்ற அனுபவத்தை தம் சீடர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார். பிரசவ வேதனை கடினமானது, ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் அவள் தம் வேதனையை அவர் மறந்துவிடுவதைப்போல் இயேசுவின் சீடர்களும் துன்பப்பட்டு இறக்கும் போது அடையும் வேதனை அவரது உயிர்ப்பில் அவர்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்றும், அவர்களது மகிழ்ச்சியை யாரும் அவர்களிடமிருந்து நீக்கிவிட முடியாது என்றும் உறுதிபடுத்துகின்றார்.
சிந்தனைக்கு.
ஆண்டவரால் அழைக்ககப்பட்ட பவுல் அடிகள், நற்செய்தி அறிவித்துப் பிறவினத்தாருக்கு ஒளியாக வாழ்ந்த காலத்தில் பலவிதமான துன்பங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். இந்நிலையில் பவுலுக்கு ஆண்டவர் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு. நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன்” என்று ஊக்கமூட்டியதை முதல் வாசகத்தில் அறிந்தோம்.
அவ்வாறே, நற்செய்தியிலும், இயேசு, “உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார். எனவே, நமது துன்பம் எல்லாம் சிறிது காலத்திற்குத்தான் என்பதால், ஆண்டவரது உடனிருப்பு எப்போதும் நம்மோடு உண்டு என்ற நம்பிக்கையில் அவரது பணியைத் தொடர வேண்டும். ‘அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன்; கலங்காதே நான் உன் கடவுள்’ (எசா 41: 10) என்பதுதான் கடவுளின் வாக்குறுதி. அவர் வாக்குறுதி மாறாதவர். எனவே, கலக்கமும், அச்சமும் நமக்கானது அல்ல. நம் வாழ்க்கை சோகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுள்ளது, இயேசு இதை ஏற்கிறார்.
பவுல் அடிகள், பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், ‘எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்” (4:12) என்பார். இந்த வார்த்தைகள் நமக்கும் பொருந்தும். நமக்கு என்ன சோதனைகள் வந்தாலும், நமக்கான மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. ஆதலால், உறுதியாக நம்பிக்கையில் வாழ முற்பட வேண்டும். யோபு நூலில், ‘மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?’ (7:1) என்று யோபு கூறுவதைக் கேட்டிருப்போம்.
நம் வாழ்வில் பல சமயங்களில், இந்த உலகக் காரியங்களில் மூழ்கிடும்போது, நாம் ஆண்டவருடைய திடப்படுத்தும் வார்த்தைகளை மறந்துவிடுகிறோம். அதன் விளைவாக குழப்பத்தில் சிக்கி நம்பிக்கையை இழக்கிறோம்.
ஆகவே, நமது வாழ்வும் தாழ்வும் நமது நம்பிக்கையில் அடங்கியுள்ளது. துன்புறும் வேளையில், சோர்வுற்று முடங்காமல், ‘ஆண்டவரே நீரே, என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.’ (திபா 59:9) என்று கூவி அழைத்தால் நாம் மகிழ்வுறுவோம்.
பாவேந்தர் பாரதிதாசனாரின் வரிகளான,
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா?
என்பதற்கிணங்க, துன்புறும் வேளையில் ஆண்டவரின் துணைகொண்டு, மகிழ்ந்திருக்க முற்படுவோர் சீடத்துவத்தில் சிறந்தோங்குவர்.
இறைவேண்டல்.
ஆண்டவரே. நான் துன்புறும் மக்களுக்கு உமது ஆறுதல் செய்தியைக் கொண்டு செல்லும் கருவியாகச் செயல்பட என்னை தொடர்ந்து ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
