நல்ல இதயம் கொண்டோர் நன்மக்களாவர்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

27 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 12 ஆம் வாரம் – வெள்ளி
இயேசுவின் திருஇதயம்-பெருவிழா
எசேக்கியேல்  34: 11-16
உரோமையர் 5: 5b-11
லூக்கா 15: 3-7


நல்ல இதயம் கொண்டோர் நன்மக்களாவர்!


முதல் வாசகம்.

இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் (எசே 34:1–10), இஸ்ரயேலின் தலைவர்கள் ("மேய்ப்பர்கள் அல்லது ஆயர்கள்") சுயநலவாதிகளாகவும் மக்களைப் புறக்கணித்ததற்காகவும் கடவுள் அவர்களைக் கண்டனம் செய்தார். அவர்கள் மந்தையைப் பராமரிப்பதற்குப் பதிலாக அவற்றைச் சுரண்டினர். இன்றைய வாசகப் பகுதியில், 11–16 வசனங்களில், காணாமல் போன ஆடுகளைத் தேடும் அக்கறையுள்ள மேய்ப்பனைப் போல, தம்முடைய மக்களைத் தேடி சேர்க்க, அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பார் என்று கடவுள் அறிவிக்கிறார்.

மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன் என்றும், பலவீனமானவர்களுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் அவர் விடுதலைநும் குணமளிப்பும்   கொண்டு வருவார், அதே நேரத்தில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க தங்கள் பலத்தைப் பயன்படுத்திய தீய மேய்ப்பர்களுக்குத் தீர்ப்பு வழங்குவார் என்றும் இன்றைய வாசகப் பகுதி  விவரிக்கிறார்.

இரண்டாம் வாசகம்.

இவ்வாசகத்தில் புனித பவுல், கடவுளின் அன்பு எங்கோ தொலைவில் இருப்பது  அல்லது நமத் கணகளுக்குப் புலப்படாதது அல்ல என்பதை   வலியுறுத்துகிறார். அது "நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது" – என்கிறார். ஒரு நபர் இன்னொருவருக்காக தனது உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதற்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்குமாறு புனித பவுல் உரோமர்களைக் கேட்கிறார்.

ஒருவர் இன்னொருவருக்காக தனது உயிரைப் பணயம் வைப்பது என்றாலும், நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார் என்றும்,  கடவுள் நம்மீது வைத்திருக்கும் மிகுந்த அன்பை நாம் உணரும் பொருட்டு, இயேசு நமக்காகவும் நம் பாவங்களுக்காகவும் மரித்தார் என்றும் பவுல் எடுத்துரைக்கிறார். அவர், தியாக அன்பு எவ்வளவு அரிதானது என்பதை  சுட்டிக்காட்டுகிறார்.

நாம் இன்னும் பாவிகளாக இருந்தபோது - தகுதியற்றவர்களாக, கலகக்காரர்களாக, தொலைந்து போனவர்களாக வாழ்ந்தபோதே  - கிறிஸ்து நமக்காக மரித்தார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.  

நற்செய்தி.

காணாமல் போனதைத் தேடி, மந்தையின் பாதுகாப்பிற்குள் கொண்டு வரத் தயாராக இருக்கும் மேய்ப்பராக இயேசுவைப் பற்றிய லூக்காவின் விளக்கத்திலிருந்து நற்செய்தி வருகிறது. மந்தையிலிருந்து விலகிச் செல்பவர்களை மீட்பதற்காக இந்த ஆயர் எல்லாவற்றையும் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார் என்பது இந்த உவமையின் பொருளாக உள்ளது.   வழிதவறிய ஆடுகள் திரும்பக் கொண்டுவரப்படும்போது நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதையும்  நற்செய்தி  நமக்கு நினைவூட்டுகிறது.

சிந்தனைக்கு.

இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழாவிற்குப் பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் திருஅவை ஆண்டவரின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடப் பணிக்கிறது.

இயேசுவையும் இன்றைய அவரது திரு இருதய விழாவையும் பற்றி நாம் சிந்திக்கும்போது, கொடுக்கப்பட்ட வாசகங்கள் மூலம், இயேசுவும் அவரது தந்தையாம் கடவுளும் தம் மக்களை எவ்வளவு அன்பு செய்கிறார்கள் என்பதை அறிய வாய்ப்புப் பெறுகிறோம்.  பல கலாச்சாரங்களில் இதயம் அன்பின் சின்னமாகவும், காதலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

கடவுள் நம்மை மீட்டதில்  நாம் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், ஆண்டவராகிய இயேசு வழிதவறிச் செல்லும் அனைத்து ஆடுகளையும் தொடர்ந்து தேடி வருவதைக் கண்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.  மற்றொரு விடயம் என்னவென்றால், வழிதவறிச் சென்ற அனைவரும் திரும்பி வருவதில் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், இறை மந்தையிலிருந்து விலகி இருப்பவர்களைத் தேடும் பணியில் ஈடுபடவும் ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.  

இதயம் அன்பின் அடையாளம். எனவேதான், இயேசுவும் தமது இதயத்தை அவரது அன்பின் அடையாளமாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். உடல் உறுப்புகளில், இதயத்தை உணர்வுத்  தளமாகக் கடவுள் படைத்துள்ளார்.   குறிப்பாக, உறவுகளில் நாம் காட்ட வேண்டிய பரிவு, கனிவு, நட்பு, தியாகம் போன்றவற்றின் அடையாளமாக இதயம் இருக்கின்றது. 

இதயம் ஒரு கோயில் என்பார்கள். கோயிலில் எப்படி நல்லதையே மக்கள் எதிர்ப்பார்ப்பார்களோ, அவ்வாறே நமது இதயமும் நல்லதை, அன்பானதை வெளிப்படுத்தும் ஆலயமாக இருக்க வேண்டும். அதே வேளையில் இயேசுவின் திரு இதயம், அது எதையும் தாங்கும் இதயமாக இருப்பதைப்போல, இவ்வுலக வாழ்வில் எதையும்  தாங்கும் இதயம் கொண்டோராகவும் நாம் பயணிக்க வேண்டும். கோழைத்தனம் நமக்கு ஆகாது. 

இன்று, இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், இயேசுவின்திரு இதயம், சோர்ந்து மனம் உடைந்து தன்னிடம் தஞ்சம் அடையும் அனைவருக்கும் புகலிடமாக உள்ளது என்பதை மனதில் கொண்டு, அவர் முன் மண்டியிட்டால், சூரியனைக் கண்ட பனிபோல நமது துன்பங்கள் மறையும்.

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே,   என்மீது கொண்ட பேரன்பால், உமது இதயம் பற்றி எரியச் செய்தீரே. நன்றி. நானும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக கனிவு, இரக்கம், அன்பை வெளிப்படுத்தும் இதயத்துடன் வாழ ஆசீர்வதிப்பீராக ஆமென்.

   

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452