வாய்ப்பேச்சில் அல்ல, செயலில் சூரர்கள் ஆவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

26 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 12 ஆம் வாரம் –வியாழன்
தொடக்க நூல்  16: 1-12, 15-16
மத்தேயு   7: 21-29


வாய்ப்பேச்சில் அல்ல, செயலில் சூரர்கள் ஆவோம்!
 
 
முதல் வாசகம்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் ஆபிராமின் மனைவியான சாராளுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை, எனவே அவள் தன் வேலைக்காரியான ஆகாரை ஆபிராமுக்கு இரண்டாம் மனைவியாகக் கொடுத்து, அவளுக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். 

பின்னர் கடவுளின் வாக்கின்படி  சாரா கர்ப்பமாகிறாள், அவள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டதும், அவள் பெருமைப்பட்டு ஆகாரை வெறுத்ததோடு, ஆகாரை ஏளனமாக நடத்துகிறாள், இதனால் சாரா ஆகாரைக் கொடுமைப்படுத்தத் தொடங்கவே, ஆகார் அங்கிருந்து தப்பித்து பாலைவனத்திற்கு ஓடுகிறார்.
 
நற்செய்தி.

இயேசு மலைமீதமர்ந்துத் தொடங்கிய மலைப்பொழிவை இன்று நிறைவு செய்கிறார்.  

இன்றைய நற்செய்தியில் இயேசு இறுதித் தீர்ப்பில் என்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. இறுதித் தீர்ப்பின்போது ஒருவர் ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொன்னதற்காக மட்டும் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது. என்கிறார். 

கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற  ஒவ்வொருவரும் முயற்சிப்பதோடு, இயன்றதைச் செய்ய வேண்டும்.  இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பலர்  கடவுளின் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டு எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து வந்தார்கள். இத்தகையோர் ஒருபோதும் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது என்பதைத்தான் இயேசு, “என்னை நோக்கி ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை” என்று உறுதிப்படுத்துகின்றார். .

தொடர்ந்து, அவர் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் என்றும், அவர் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார் என்றும் .அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய எனது சிந்தனை, நாம் ஒவ்வொருவரும் கடவுளின் திட்டத்திற்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.  எல்லா மக்களும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, மற்றவர்களை அன்பு செய்து, அவர்களை கடவுளின் அரசுக்குள் கொண்டு வருவதன் மூலம் நற்செய்தியை இவ்வுலகில் நாம்  வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கடவுள் எதிர்ப்பார்க்கிறார். 

முதல் வாசகத்தில் கடவுள் ஆபிரகாமுக்கு ஒரு மகனை அளிப்பார் என்ற வாக்குறுதியில் பொறுமை இழந்த ஆபிராகம், ஊர் வழக்கத்தை ஏற்று மகப் பேறுக்காக மாற்று பெண்ணோடு உறவு வைக்க சம்மதிக்கிறார். அவர் ஆகார் என்ற மணல்மேல் வீடு கட்ட முடிவெடுத்தார்.  ஆனால், கடவுளோ அவரது வாக்குறுதிக்கேற்ப சாராவைக் கொண்டு,  பாறையின் ஆபிரகாம் வீட்டைக்கட்ட ஏற்பாடு செய்தார்.  

ஆம், மனதிற்கு அமைதியையும், வாழ்வுக்கு  மகிழ்ச்சியையும், கிறிஸ்தவர் என்பதற்கு மதிப்பையும்  கொண்டுவருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.  அது கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அதைச் செய்வதாகும். இவ்வாறு செய்வது பாறையின் மீது வீட்டைக் கட்டுவதற்கு சமமாகும். 

திருத்தூதர் யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் இதே கருத்தினைத்தான் இவ்வாறு கூறுகின்றார்: “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்” (யாக் 1: 22) என்கிறார். 

பிரிந்த சபையினரில் பலர் ‘நம்பிக்கை ஒன்றை மீட்புக்குப் போதுமானது’ என்று போதிக்கின்றனர். இது திருஅவைக்குள் முதலில் பிரிவினைக்கு வித்திட்ட மார்த்தின் லூத்தரின்  சித்தாந்தம் ஆகும்.  ‘உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே’ என்கிறார் புனித யாக்கோப்பு (யாக் 2:26).


ஆண்டவராகிய இயேசுவை வெறும் ஆராதனைக்குரியவராக மட்டும் ஏற்பது கிறிஸ்தவம் ஆகாது. “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை” (யோவான் 5:41) என்றுதான் ஆண்டவர் கூறுகிறார். நமது ஓயாத ‘ஆமென், அல்லேலூயா’ வாழ்த்தொலியை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.    எனவே, சுயநலத்திற்காக அல்ல, மாறாக கடவுள் மீதும் நம் அண்டை வீட்டாரின் மீதும் உள்ள அன்பினால் நமது நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவோம்.

இறைவேண்டல்.

‘நாங்கள் எத்தகைய  அடித்தளத்தில் வீடு கட்ட வேண்டும்’ என்று அறிவுறுத்திய ஆண்டவரே,  உமது வார்த்தையில் வாழ்பவராக என்னை வழிநடத்துவீராக ஆமென்.

   

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452