நம்மில் நாம் சொந்தம் கொண்டாடுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

4 ஜூன் 2025
பாஸ்கா 7-ம் வாரம் – புதன்
தி.பணி 20: 28-38
யோவான் 17: 11b-19
நம்மில் நாம் சொந்தம் கொண்டாடுவோம்!
முதல் வாசகம்.
நேற்றைய வாசகங்களின் தொடர்ச்சியாக, இன்றும், நமது வாசகங்களில் இருவரை சந்திக்கிறோம், இருவரும் தங்கள் சீடர்களிடமிருந்து விடைபெற வேண்டியக் கட்டாய சூழலில் உள்ளனர்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் எபேசு மற்றும் மிலேத்து மக்களிடமிருந்து உரோமைக்கு விடைபெறுகிறார். தங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட மந்தையைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ளுமாறு அவர் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
புனித பவுல் தான் சென்றவுடன், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் அவர்களைச் சீர்குலையச் செய்யவல்ல கொடிய ஓநாய்களிடம் கவனமாக இருக்கும்படி வேண்டி கேட்டுக்கொள்கின்றார். அவர் அவர்களுடன் இறைவேண்டல் செய்து, நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! என்று வாழ்த்துக்கூறி அவர்களிடமிருந்து விடைபெறுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் இராவுணவுப் பகுதியின் ஒரு பகுதியாக, இயேசு தம்முடைய மரணத்திற்கு முன் தம்முடைய சீடர்களுக்குத் தனது இறுதி வார்த்தைகளைத் தொடர்கிறார். புனித யோவான் நற்செய்தியின் பதினேழாம் அதிகாரம் முழுவதும் இயேசு தம்முடைய சீடர்களுக்காக செய்யும் இறைவேண்டலாகும்.
இயேசுவின் திருப்பெயரில் அழைக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளும்படி இயேசு தம்முடைய தந்தையிடம் வானத்தை அண்ணாந்து பார்த்து மன்றாடுகிறார் என்று யோவான் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, தந்தையை நோக்கி, ‘நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனாலும், அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்’ என்று தந்தையிடம் இறைஞ்சுகிறார்.
நிறைவாக, முக்கியமான மற்றொரு மன்றாட்டை அவர் இறைவேண்டலில் முன்வைக்கிறார். அது யாதெனில், தந்தை எவ்வாறு இயேசுவை உலகிற்கு அனுப்பினாரோ, அதுபோலவே அவரும் தம் சீடர்களை உலகிற்கு அனுப்புவதாகவும் தந்தையிடம் சீடர்களைக் காத்தருள வேண்டுகிறார்.
சிந்தனைக்கு.
நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாடல், ‘நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்’ இப்படாலின் வரிகளை சற்று ஆழ்ந்து சிந்திப்போமானால், நமக்கு இவ்வுலகம் ஒரு மாயை என்பது புலப்படும். மூன்றாவது சரணத்தில்,
‘செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்’ என்ற வரிகள் அற்புதம்.
புனித புவுல் உரோமையருக்கு எழுதும்போது, ‘கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? ((8:35) என்ற ஆணித்தரமான நம்பிக்கையை பகிர்வார். ஏனெனில் இயேசுவே நிரந்தரம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பரிந்துரை இறைவேண்டலில் நான்கு கூறுகளைக் காண்கிறோம்.
முதலாவது, இந்த பொல்லாத உலகில் தம்முடைய சீடர்களைப் பாதுகாக்க இயேசு மன்றாடுகிறார்.
அடுத்து, உலகில் உலாவும் ஒரு வகையான 'சாத்தான்', இயேசுவின் நற்செய்திக்கு எதிரானது என்பதை தம் சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
மூன்றாவதாக, இயேசுவின் மகிழ்ச்சி. நாம் எந்த துன்பங்களால் பாதிக்கப்பட்டாலும், இயேசுவின் மகிழ்ச்சி நிலையானது என்றும், அது நம்மில் என்றும் குடிகொண்டிருக்கும் என்பதையும் விவரிக்கிறார்.
நான்காவது உண்மை. இது சீடர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். இயேசு நம்மை உண்மைக்கான சாட்சிய வாழ்வுக்கு உட்படுத்துகிறார். உண்மை என்றும் அழியாது. உண்மையே நற்செய்தி, நற்சகய்தியே இயேசு, இயேசுவே நிரந்தரம்.
இந்த நான்கு அமுசங்களையும் மனதில் கொண்டு உழைத்தவர் பவுல் அடிகள். நிறைவாக, மேலும் துன்பங்களை, மரணத்தை எதிர்கொள்ள உரோமைக்கும் செல்கிறார்.
ஆம், புனித பவுல் போன்று, திருவையைக் கட்டியெழுப்புவதில் நமக்குப் பெரும் பங்கு உண்டு. திருஅவையின் ஒற்றுமைக்காகவும் அதன் அனைத்து உறுப்பினர்களின் தூய வாழ்வுக்காக நாம் மன்றாட வேண்டும். கிறிஸ்துவின் விருப்பங்களுக்கு ஏற்ப கற்பிப்பதிலும் செயல்படுவதிலும் கடவுளின் ஒளியால் வழிநடத்தப்படும்படி நமது ஆயர்களுக்காகவும் அருள்பணியாளர்களுக்காகவும் இயேசுவோடு, அவர் வழியாக மன்றாடுவோம்.
திருஅவையில் பிரிவினை என்பது சாத்தானின் சூழ்ச்சி. இயேசு, இன்றும் “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக”என்று இறைஞ்சுகிறார். திருஅவை எனும் ‘குடும்ப உறவில்’ இருந்து பிரிவது தூய ஆவிக்கு எதிரான பாவம்.
இறைவேண்டல்.
அன்பின் ஊற்றாகிய ஆண்டவரே, என் வாழ்க்கையில் உமது வார்த்தைளால் என்னைத் தொட்ட சிலரால் நான் உம்மில் வாழ்கிறேன். இவர்களின் ஆன்மா உம்மில் இளைப்பாரச்செய்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
