இறையரசுப் பணிக்கு நமது சொல்லும் செயலும் இணையட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

12 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 27ஆம் வாரம் – சனி

கலா 3: 3: 22-29
லூக்கா 11: 27-28
 
 

இறையரசுப் பணிக்கு நமது சொல்லும் செயலும் இணையட்டும்!


முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தை கூர்ந்து வாசிக்கும்போது, பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட திருச்சடங்களைக் கடைப்பிடித்து வாழ்வதால்  நாம் கடவுளிடம் நெருங்கி வர இயலாது. அவரில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையே நம்மை கடவுளோடு இணைக்கிறது என்று பவுல் அடிகள் உறுதிபட கூறுவதை கேட்கிறோம். இதில்  கடவுளின் வார்த்தையைக் கேட்பதும்  கடைப்பிடிப்பதும் அடங்கும்.  
மேலும், கிறிஸ்துவோடு நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்திருக்கும் இறைமக்களில் எவ்வகைய வேறுபாடும் இல்லை என்பதை கலாத்தியருக்கு தெளிவுப்படுத்தி எழுதுகிறார் பவுல் அடிகள்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசுவை ஈன்றெடுத்த  தாய் இன்று  ஒரு பெண்ணால் போற்றப்படுகிறார். அதைக் கேட்ட இயேசுவோ,  “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்று மறுமொழியாகக் கூறுகிறார். 

சிந்தனைக்கு.

நற்செய்தியில் இரண்டு செயல்களில் ஈடுபடுபவர்களை உண்மையிலேயே பேறுபெற்றவர்களாக இயேசு குறிப்பிடுகிறார்: “கடவுளுடைய வார்த்தையைக் கேட்பவர்கள் ” பின்னர் “அதைக் கடைப்பிடிப்பவர்கள் ” 
ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கான முதல் படி கடவுளின் வார்த்தையைக் கேட்பது. “கேட்பது” என்பது இறைவார்த்தையைச் செவிமடுக்கிறோம் என்பதைவிட அதை உணர்கிறோம், சிந்திக்கிறோம்  என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. அடுத்து வருவது கடைப்பிடித்தலாகும். இது ஒவ்வொரு இறைமக்களுக்கும் இன்றியமையாதது. இறைவார்த்தையைக் கேட்டதோடு, சிந்தித்ததோடு அதைக் கடைப்படித்து வாழ்ந்தோரே இன்று புனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களில் நாம் அறிந்தோர் பலர் அறியாதோர் பலர். நாம் உண்மையிலேயே கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதை நம் வாழ்வில் செயல்படுத்தும்போது, சட்டத்தின் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நாம் நகர்வோம்.  
அன்னை மரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டு இதயத்தில் நிறுத்தி சிந்தித்து வந்தார். அதே வேளையில் சமூகக் கட்டுப்பாடு எனும் எல்லையைக் கடந்து, இயேசுவை ஈன்றெடுத்தார். அவரது நம்பிக்கை செயலில் வெளிப்பட்டது.  'என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்' என்று இயேசு கூறியதை மறக்கலாகாது. இயேசு மீது நாம் கொள்ளும் அன்புக்கும் அவரது வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்கும் தொடர்பு உண்டு. ஒன்றை விட்டு ஒன்றை அடைய முடியாது. 
நாம் கேட்கும் இறைவார்த்தை நமது செயல்களால்தான் நம்மில் பலன் தரும். எனவேதான், புனித யாக்கோப்பு ‘அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினார் (யாக்கோபு 2:20).
ஆகவே, முதல் வாசகத்தில் புனித பவுல் வலியுறுத்துவதைப்போல, சட்டங்களைப் பற்றிக்கொண்டு வாழ்வதால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. மாறாக, இறைவார்த்தையைக் கேட்பதிலும், சிந்திப்பதிலும் அதற்கேற்ப வாழ்வதிலும் நாம் பேறுபெற்றோராகலாம். 

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, உமது வார்த்தையின்படி, இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிக்கும் மனத்திடனை எனக்கு அளிப்பீராக. ஆமென்.

 
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452