உள்ளம் எனும் அழகான வீட்டைக் கட்டிக்காப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

11 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 27ஆம் வாரம் – வெள்ளி

கலா 3: 7-17
லூக்கா 11: 15-26
 
 
உள்ளம் எனும் அழகான வீட்டைக் கட்டிக்காப்போம்!


முதல் வாசகம்.

 முதல் வாசகத்தில் பவுல அடியார், ஒரு நம்பிக்கையாளரின்  வாழ்க்கை அவன்/அவள் செய்யும் மனித செயல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும்,   அழைக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்வானது  கடவுளின் தேர்வும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வுமாக உள்ளது என்கிறார்.   புனித பவுல், கலாத்தியா மக்களுக்கு எழுதுகையில், அவர்கள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கண்டிப்பாக வாழ்வதை விடுத்து,  அவர்கள் கடவுளிடமிருந்து பெற்ற நம்பிக்கை கொடையை உணர்ந்து அதன்படி வாழ  வேண்டும் என்று கூறுகிறார், அதுவே அவர்களை  ஆபிரகாமின் சந்ததியாக்குகிறது என்று வலியுறுத்துகிறார்.
பவுல் அடிகள் மேலும்,  தனது பொதுவான கருப்பொருள்களில் ஒன்றை மீண்டும் வலியுறுத்துகிறார்: சட்டத்தை கடைபிடிப்பது மனிதர்களுக்கு மீட்பைக் கொண்டுவராது என்பதும், ஆனால் மீட்புக்கு ஆழ்ந்த நம்பிக்கை இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறார்.   கடவுளின் மீட்பை அறிந்துணர  ஒருவருக்கு உதவுவது நம்பிக்கைதான் சட்டங்கள் அல்ல.   நம்பிக்கை என்பது  கடவுளின் கொடை. அக்கொடையே   பின்னர்  நம் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில்   பிரதிபலிக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.  நிறைவாக நம்பிக்கை வாழ்வைச் செயலில் வெளிப்படுத்த அழைப்புவிடுக்கிறார்.

நற்செய்தி.

 நற்செய்தி வாசகத்தில் மக்களுள் சிலர் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து, “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்று விமர்சனம் செய்த லூக்கா குறிப்பிட்டு எழுதுகிறார்.   அதற்கு ஆண்டவர் இயேசுவோ, “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?” என்று அவர்களிடம் மறுகேள்வி கேட்டு, தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராகச் சவால்விடுகிறார்.  

மேலும் ஆண்டவராகிய இயேசு, அவரோடு  இராதவர் அவருக்கு எதிராக இருக்கிறார்; என்றும் அவரோடு  இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார் என்றும் எச்சரிக்கிறார். 
அடுத்து, தீய ஆவியைக் குறித்துக் கருத்துரைக்கும் ஆண்டவர், ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும் என்றும் பின்னர் யாரிடமிருந்து வெளியேறியதோ அவரிடமே வந்து குடிகொள்ளும் என்றும் கூறுகிறார். அப்படி திரும்பி வரும்போது  அவரில் அது குடிகொள்ள இயலாதபோது, அது மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும் என்கிறார் ஆண்டவர்.

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் நல்லதொரு செய்தியை நம்மில் பதிய வைக்கிறார். தீய ஆவியின் சூழ்ச்சியையும்  தந்திரத்தையும்  நமக்கு வெளிப்படுத்துகிறார். ஒருவரை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட   தீய ஆவி செழிப்பற்ற இடங்களில் அலைந்து திரியும் என்பது இயல்பு. இது யூதர்கின் எண்ணமுமாகும். ஏனெனில்,  யூதர்கள் தீய ஆவி வறண்ட பாலைநிலத்தில் இருப்பதாக நம்பினர். 
இளைப்பாற இடம் கிடைக்காத ஆவி திரும்பியபோது யாரைவிட்டு ஓடியதோ அவர் மனமாறி கடவுன் பிள்ளையாக இருப்பதைப் பார்க்கிறது. அதை தீய ஆவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல, தங்கி வாழவும் இயலாத நிலை. தீய ஆவிக்கு இப்போது வாழ்வா, சாவா என்ற ஒரு நிலை ஏற்படுகிறது.  ஆக, அது வேறொரு அணுகுமுறையை அல்லது யுக்தியைக் கையாளுகின்றது. போய் தன்னைவிட பொல்லாத, ஆற்றல் மிகுந்த  தீய, கொடூர ஆவிகளைக் கூட்டி வருகிறது. இப்போது அந்த மனிதன் மீண்டும் வீழ்த்தப்பட்டு, அவற்றுக்கு அடிமையாவான்.
தீய ஆவிக் குறித்த இயேசுவின் செய்தி இவ்வாறு இருக்க, “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளால் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகின்றன. இயேசுவைப் பற்றியும் அவர் நமக்குக் கற்பித்த அனைத்தையும் பற்றி நாம் நடுநிலை வகிக்க முடியாது. உலகத்திற்கும் ஆண்டவருக்கும் உரியவர்களாக நாம் இரட்டை வேடம் கொள்ள இயலாது. ஒன்று ஆண்டவரைச் சார்ந்து இருக்க வேண்டும் இல்லையேல் உலகைச் சார்ந்து வாழ வேண்டும். எல்லாருக்கும் ‘நல்ல பிள்ளையாக’ வாழ இயலாது.
தொடர்ந்து, ‘என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்’ என்று ஆண்டவர் கூறுகிறார். ஆம், திருஅவையில் ஆண்டவரோடு இணைந்து இறைமக்களைக் கட்டி எழுப்ப வேண்டும். இல்லையேல் இருப்பவர்களும் கவனிப்பாரற்று தொலைந்துபோய்விடுவர். 
ஆகவே,  தீய ஆவி விடாமுயற்சியுடன் போய் தன்னைவிட பொல்லாத  ஆவிகளைக் கூட்டி வருவதைப் போல நாமும் விடாமுயற்சியுடன் இறைவேண்டலிலும் நோன்பு இருத்தலிலும் நிலைத்து தீயவியின் செயல்பபாடுகளை வெல்ல வேண்டும் என உணர்த்தப்படுகிறோம்.  நாம் ஆபிரகாமின் சந்ததியாக உள்ளோம் என்பதால், நம்பிக்கை நமது நிலையான சொத்தாகட்டும். 

இறைவேண்டல்.

‘என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்’ என்றுணர்த்திய ஆண்டவரே, உமது மந்தையைக் கூட்டிச் சேர்க்கும் பணியில் நானும் உம்மோடு இணைந்திருக்க என்னை திடப்படுத்துவீராக. ஆமென்

 
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452