கெடுவான் கேடு நினைப்பான்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

29 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 21 ஆம் வாரம் -வியாழன்
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்-நினைவு

 1 கொரி 1: 1-9
 மாற்கு  6: 17-29


கெடுவான் கேடு நினைப்பான்!


இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்துவில் பவுல் அடிகள்  கட்டியெழுப்பிய திருஅவையை,   கடவுளின் திருஅவை என்கிறார். மேலும், தன்னை வெறுமனே ‘பவுல் என்று கூறிக்கொள்ளாமல், ‘இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட’   என்று தன்னை அடையாளம் காட்டுகிறார்.  திருமுழுக்கின் வழியாக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், திருமுழுக்கின் வாயிலாகத் தூயோராக்கப்பட்டுள்ள (புனிதராக்கப்பட்டுள்ள)  இறைமக்களாக உள்ளனர் என்பதையும் உணரச் செய்கிறார்.

தொடர்ந்து, கொரிந்தியர் பல தெய்வ வழிபாடு, நெறிகெட்ட வாழ்வு ஆகியவற்றிலிருந்து கடவுள் அவர்கள் மீட்டுள்ளார் என்பதை பவுல் வலியுறுத்துகிறார்.அத்துடன், ஆண்டவரின் மறுவருகையை எதிர்ப்பார்த்திருக்கும் கொரிந்தியருக்கு  கடவுள் தேவையான அருள்கொடைகளை நிறைவாகவே கொடுத்துள்ளார், ஆதலால் அவரது வருகையின் போது குறையற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

 
நற்செய்தி


இன்று திருஅவை திருமுழுக்கு யோவானின் பாடுகள் குறித்துத் தியானிக்க அழைக்கிறது. திருமுழுக்கு யோவான் மீட்பராகிய இயேசுவின் வருகையை முன்னறிவிக்கவும் அவரது பாதையைச் செம்மைப்படுத்தவும் கடவுளால் அனுப்பப்பட்டவர் (லூக்கா 7:27). இவர் பழைய ஏற்பாட்டில்  காணப்படும் இறைவாக்கினர்கள் அனைவரிலும் மேலான இறைவாக்கினர் (லூக்கா 7:26).
இவர்தான் இயேசுவை கடவுளின் செம்மறி என்று தொடக்கத்தில் எடுத்துரைத்தவர் (யோவான் 1:36), மேலும், இயேசுவுக்கு முன்பாக மனந்திரும்பியோருக்கு நீரால் திருமுழுக்கு அளித்தவர் (யோவான் 1:26).

இயேசுவும் “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” (மத் 11:11) என்று சாட்சியம் பகர்ந்தார். . 

திருமுழுக்கு யோவான் ஒழுக்க நெறியை நிலைநாட்டுவதில் அஞ்சா நெஞ்சம் கொண்டவராக இருந்தார். லேவியர் 18: 16-ல்,  ”உன் சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு” என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால், ஏரோது அரசனோ, இச்சட்டத்தற்குப் புறம்பாக, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான். 


இதை அறிந்த திருமுழுக்கு யோவான், வெளிப்படையாக  ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' என அறிவுறுத்தினார். இதன் வழியாக புனித பவுல், ஏரோதுவை கடவுளுக்கு உகந்த  வாழ்வு வாழ அழைக்கிறார். இதற்காகவே, தன் உயிரையும் தந்தார்.

இறுதியால், உண்மையுரைத்த யோவான் ஏரோதியாவிற்கு   எதிரியானார். அவளும் அவரை பழிவாங்க, தந்திர வலை விரித்தாள். 

  
சிந்தனைக்கு


இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகள் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் கொல்லப்படும் நிலையே அவர் அனுபவித்த பாடுகள் என்பது வெளிளிடைமலை.  இன்றைய நற்செய்தியில் தவறான பிள்ளை வளர்ப்புப் பற்றிய ஒரு செய்தியையும் நாம் காண்கிறோம். ஆம்,  ஏரோதியா  தன் மகளை தனது பழிவாங்கும் செயலுக்குப் பயன்படுத்துகிறாள் அவளது தாய். ஒரு நல்ல தாய் இப்படி செய்வாளா? என்ற கேள்வி தோன்றுகிறது அல்லவா? அந்த பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலந்தாள். கொலை பாதகத்திற்குத் தன் மகளை தூண்டினாள். ஒரு நேர்மையாளரான திருமுழுக்கு யோவானின் தலையைப் பரிசாகக் கேட்க அவளைத் தூண்டுகிறாள். 

நமது நல்ல நடவடிக்கைகள்தான் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கு ஒளியாக விளங்கும். எதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடை செய்வோம். பெற்றோர்களாகிய நாம் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பேணுவதோடு பிள்ளை வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக விளங்க வேண்டும். இல்லையேல் நம் கையைக்கொண்டே நம் கண்களைக் குத்திக்கொண்ட கதையாகிவிடும். 

இயேசு, ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி’ (யோவான் 18:37) என்று அன்று பிலாத்துவிடம் கூறியதற்கொப்ப திருமழுக்கு யோவானும் உண்மைக்குச் சாட்சியம் பகர தன் உயிரைவிட்டார். 

ஏரோது,  எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்பினார். எனவே, திருமுழுக்கு யோவான் கொல்லப்படுவது பற்றி அவன் துயருறவில்லை.  ஆனால் அந்த பழிபாவம் அவனைப் பற்றிக்கொண்டது. சில நேரங்களில் நாமும் இப்படிதான்,  நீதியான முடிவை எடுக்கத் தவறிவிடுகிறோம். பேருக்கும், புகழுக்கும், செல்வத்திற்கும் அடிமைப்பட்டு, ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கிறோம். யார் எப்படி போனால் என்ன? யாருக்கு எது நடந்தால் என்ன? நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம். அதை பெரும் சாதனையாகவும் கருதுகிறோம்.

கெடுவான் கேடு நினைப்பான் என்பதை நினைவில் கொள்வோம் 


இறைவேண்டல்


இரக்கத்தின் ஊற்றாகிய இயேசுவே, என் ஆண்டவரே, புனித திருமுழுக்கு யோவானைப்போல், உண்மைக்குச் சாட்சியம் பகரும் மனோபலத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452