நன்றி உணர்வே நம்மை உயர்த்தும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

 பொதுக்காலம்,32 வாரம் புதன்  (15.11.2023) 
மு.வா: சாஞா: 6: 1-11
 ப.பா: திபா 82: 3-4. 6-7
ந.வ: லூக்:  17: 11-19

 நன்றி உணர்வே நம்மை உயர்த்தும்!

நன்றி கூறுதல் என்பது மனிதனிடத்தில் காணப்பட வேண்டிய உன்னதமான பண்பாகும். இப்பண்பு ஒரு மனிதன் பண்பட்டவர் என்பதை எண்பித்துக்காட்டுகின்றது.  நாம் ஒருவருக்கு நன்றி கூறுவதால் அவர் நமக்குச் செய்த நல்ல செயலை நினைவு கூறுகிறோம். அதையும் தாண்டி நமக்கு நன்மை செய்தவரின் நன்மைத்தனத்தை உணர்வுப்பூர்வமாக அறிகிறோம் என்பது தான் நன்றி கூறுதலின் உண்மைப் பொருள். இவ்வாறு நன்றி கூறுவது பிற்காலத்தில் நம்மையும் பிறருக்கு நன்மை செய்யத் தூண்டுகிறது. 

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பத்து தொழுநோயாளர்களை குணமாக்கும் நிகழ்வைத் தியானிக்கிறோம். அவர்களுடைய நம்பிக்கையை இயேசு அறிந்திருந்தார். எங்களுக்கு இரங்கும் என அவர்கள் கூறிய வார்த்தை அவர் மனதைத் தொட்டது. ஏனெனில் அக்காலத்தில் தொழுநோயாளர் பல துன்பங்களுக்கு உள்ளாயிருந்தனர். உடல் உபாதைகள் ஒரு புறமிருக்க, தங்கள் சுற்றத்தாலும்  சமுதாயத்தாலும் முற்றிலும் ஒதுக்கப்பட்டவர்களாய் வாழ்ந்தனர் தொழுநோயாளிகள். அனைவராலும் தீட்டாகக் கருதப்பட்டு மனதால் இறந்தவர்களான அவர்களின் அவல நிலையை இயேசு ஆழமாக உணர்ந்தார். எனவே அவர்களை குணமாக்கினார். 

இயேசு பத்து பேரையும் ஒன்றாகக்  குணமாக்கினார். யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை.  அவர்கள் அனைவரும் இத்தனை நாட்களாக தாங்கள் அனுபவித்து வந்த வேதனையிலிருந்து விடுதலை பெற்றனர். நிச்சயமாக மகிழ்ச்சியால் நிறைந்திருப்பார்கள். தாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெற்றுவிட்ட மகிழ்ச்சி அவர்களை ஆட்கொண்டதால் அதற்கு காரணமாக இருந்த இயேசுவை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே நன்றிசொல்லத் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர். ஆம் யூதர்களால் சிறியோராய் கருதப்பட்டவர். ஆனால் தங்களை பெரியோராய் உயர்த்திக்கொண்ட யூதர்களுக்கு அடிப்படைப் பண்பான நன்றியுணர்வு இல்லாமல் போனதை எண்ணி இயேசு வருந்தினார்.

பல வேளைகளில் நம் வாழ்விலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது. நன்றி சொல்ல மறந்து விடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது. நம்முடைய நல்வாழ்விற்காக நம்முடைய முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை உதவியர்களை நாம் மறந்து விடுகிறோம். பெற்று படிக்க வைத்து வளர்த்தெடுத்து உருவாக்கிய  பெற்றோருடைய அன்பை மறந்து அவர்களை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளின் எண்ணிக்கை இன்று கணக்கில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தேவைக்காக உதவியை நாடுவதும் தேவை முடிந்த உடன் உதறித்தள்ளுவதுமான கலாச்சாரம் இப்போது பரவிவருகின்றது. இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளை நாம் கண் கூடாகக் காண்கிறோம். ஆனால் அவர்களில் ஒருவராக நாம் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. 

இயேசுவின் நன்மைத்தனத்தை உணர்ந்த சமாரியன் நன்றியோடு திரும்பி வந்ததைப் போல, நாம் பெற்ற நன்மைகளுக்குக் காரணமாய் இருந்தவர்களுக்கு நன்றி கூறும் போது நாம் நம் தரத்தில், நம் பண்பாட்டில் உயர்கிறோம். அத்தோடு நம்மிடம் இருக்கும் இந்த நன்றி உணர்வு மற்றவருக்கும் உதவிசெய்ய நம்மைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. 

நம்மைப் படைத்து அன்றாடம் காத்துவரும் நம் இறைவனுக்கும், நாம் இருக்கின்ற நிலைக்குக் காரணமாய் இருக்கும் நம் பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறுவோம். பிறருக்கு நன்மை மட்டுமே செய்ய கற்றுக்கொள்வோம்.  வாழ்வில் உயர முற்படுவோம்.

 இறைவேண்டல்
அன்பே இறைவா! எம் வாழ்வு உயர உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நன்றியுள்ளவர்களாக வாழவும், பிறருக்கு நன்மை செய்து வாழ்வில் உயரவும் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு