இயேசு எவ்வாறு, தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்பு செய்தாரோ, நாமும் இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வம் காட்டுவோம். நிலைவாழ்வு நமதாகும்.
உலகில் அல்ல மாறாக, அவரில் அமைதியை நாடுவோம். அமைதி கிட்டும். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ எனும் வரிகளுக்கு ஏற்ப உண்மை அமைதிக்கு ஊற்றாக இருப்பவர் ஆண்டவர் இயேசு. அவரை விடுத்து உலக இன்பங்களில் அமைதியைத் தேடினால், தேடும் அமைதி கிடைக்கப்போவதில்லை.
ஒரு காலத்தில் தூய ஆவியை கத்தோலிக்கத் திருஅவையில் மறக்கப்பட்ட கடவுளாகத்தான் இருந்தார். ஆனாலும், அவர் உறங்கவில்லை. உலகைப் புதுப்பிக்கும் பணி தூய ஆவியாரின் செயல்பாடாக இருந்து வருவதை நாம் மனதில் கொண்டு அவரைப் போற்றி வழிபடுவதோடு, அவரில் இணைந்து வாழ நம்மை கையளிப்போம்.
இயேசுவின் வழியாகவே நாம் மீட்பையும் விண்ணக வாழ்வைப் பெறவும் முடியும். ஆகவே, நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் வாழ்வும் வழியுமாக இருக்கும் இயேசுவை உலகிற்குத் துணிவோடு வெளிப்படுத்தும் வாழ்வை எப்படி வாழ்வோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். இயேசுவைப் பிறரோடு பகிராத வாழ்வு, பயனற்ற சாட்சிய வாழ்வு.
மாற்கு திருமுழுக்கு யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ விவரிப்பதால் இவரது நற்செய்திக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம்.