புதிய ஆற்றலைப் பெற வேண்டுமா? ஆண்டவரை நம்புவோம்

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், புதன்
I: எசா: 40: 25-31
II:  திபா 103: 1-2. 3-4. 8,10
III: மத்: 11: 28-30

தினமும் தொலைக்காட்சியில் ஆற்றல் பெறுவதற்கான பல விளம்பரங்களை நாம் காண்கிறோம். Horlics,  Boost, Glucon -D என பலவிதமான சத்துப்பான விளம்பரங்கள் என்ன?  பற்கள் வலிமையாய் இருந்தால் உடலும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும் என்ற வாசகங்களுடன்  பற்பசை விளம்பரங்கள் எத்தனை? தலைமுடி வலிமையாக இருக்க ஷாம்பு விளம்பரங்கள் எத்தனை எத்தனை? இன்னும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் இவை அனைத்தையும் நம்பி வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் விளம்பரங்களில் சொல்லப்பட்டது போன்ற ஆற்றலைப் பெறுகிறோமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நம் உடலுக்குத் தேவையான புதிய ஆற்றல்களைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாம், நமது  ஆன்மா புதிய ஆற்றல் பெற முயற்சி எடுக்கிறோமா? 
இன்றைய வாசகங்கள் நம்மை இதைக்குறித்து சிந்திக்க அழைக்கின்றன.

முதல் வாசகத்தில் ஆண்டவரை நம்புவோர் புதிய ஆற்றலைப் பெறுவர் எனக் கூறுகிறது. அந்த ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை இருவாசகங்களும் விளக்குகின்றன. முதல் வாசகமானது ஆண்டவரை வலிமை மிக்கவராக, ஆற்றல் வாய்ந்தவராக, அனைத்தையும் படைத்தவராக, உலகையே இயக்குபவராக, களைப்படையாதவராக, யாரோடும் ஒப்பிடப்பட முடியாத அளவுக்கு தன்னிகரற்றவராக, நீதியுள்ளவராக விளங்குகிறார் என்பதை எடுத்தியம்புகிறது. 

அதே போல நற்செய்தி வாசகம் மனுவுருவான ஆண்டவர் இயேசு  கனிவும் மனத்தாழ்மையும் கொண்டு சுமைகளால் சோர்ந்தவரை இளைப்பாற்றுபவராக இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய ஆண்டவரை நம்பி அவரை நம் உள்ளத்தில் ஏற்றால் நாம் புதிய ஆற்றல் பெறாமல் போகமுடியுமா? அழிந்து போகும் பொருட்கள் மேலும் மனிதர்கள் மேலும் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை ஆற்றல் இழக்கச் செய்யும். ஆனால் ஆற்றல் மிக்க ஆண்டவரோ நாம் ஆற்றலுடன் வாழ வழிவகுப்பார்.

நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீதும் அழியக்கூடியவை மீதும்  நம்முடைய ஆற்றல் இருக்கின்றது என நம்பாமல்,  உடலுக்கும் ஆன்மாவிற்கும் வலுவை வழங்கும் ஆண்டவரின் வார்த்தையில் ஆற்றல் உள்ளது என முழுமையாக நம்புவோம் . திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின்  இரண்டாம் வருகைக்காகவும் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவதற்காகவும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில்,  கடவுள் தரும் ஆற்றலை முழுமையாக நம்பி அனைத்து சவால்களையும் முறியடித்து ஆண்டவர் இயேசுவில் அகமகிழ முயற்சி செய்வோம். இறைவன் காட்டும் வழியில் ஆண்டவரின் பதம் நடந்து ஆண்டவர் வருகைக்காக எந்நாளும் நம்மை முழுமையாக ஆயத்தப்படுத்துவோம். அப்பொழுது நாம் கடவுளின் பார்வையில் ஆசீர் பெற்ற மக்களாக  மாறுகிறோம்.

 இறைவேண்டல்
ஆற்றலும் வல்லமையும் நிறைந்த இறைவா! எமது ஆற்றல் உம்மிடமே உள்ளது  என்பதை முழுமையாக உணர்ந்து,  சாட்சியமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட இந்த திருவருகை தயாரிப்பு காலத்திலே எங்களை வழிநடத்துவீராக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்