ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் அருட்தந்தையர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - கிறிஸ்தவ தலைவர்கள் கண்டனம்.

ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அருட்தந்தையர்கள் மீது அதிகரித்துவரும் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் சீரற்ற குற்றச்செயல்கள் அல்ல; இதுவே தேவாலயத்தின் பணியை தடுக்க திட்டமிட்ட முயற்சி என கிறிஸ்தவ தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஜூன் 9ஆம் தேதி ஜார்கண்டின் சம்சேரா கிராமத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தில் அதிகாலை நேரத்தில் ஐந்து முகமூடி அணிந்த நபர்கள் பங்குத் தந்தையின் இல்லத்தில் புகுந்து, பங்குத் தந்தை மற்றும் உதவி பங்குத் தந்தையைக் கொடூரமாக தாக்கினர். பின்னர், பாதுகாப்பாக வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றனர். இந்தச் சம்பவத்தின் போது பங்குடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளியின் தலைவரும் தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதல்கள் தனிப்பட்ட குற்றச்செயல்கள் அல்ல கிறிஸ்தவ சமூகத்தை அச்சுறுத்தி, அவர்களின் பணிகளை முடங்கச்செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு நடக்கின்றன என்று தேவாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

"இந்த கொள்ளைகள் ஒரே மாதிரியான முறையில் நடைபெறுகின்றன; அருட்தந்தையர்களை தாக்கும் விதமும் ஒரே மாதிரியானது," என்று ஆயர் மாஸ்கரெனாஸ் கூறினார். "கொள்ளையர்கள் நள்ளிரவில் வந்து, அருட்தந்தையர்களை தாக்கி, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருடிச் செல்கிறார்கள். இந்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. இதற்குப் பின்னால் ஒரு மறைந்த உள்நோக்கம் உள்ளது என்றும் குற்றம்சாட்டினார். 

ஒடிசாவின் கட்டக்-புவனேஷ்வர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த சமூக பணியாளர் பிதா அஜய் குமார் சிங் கூறியதாவது:  2024 ஆம் ஆண்டு ஜூனில் இருந்து குறைந்தது எட்டு சம்பவங்களில் இதே மாதிரியான கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. பெரும்பாலான வழக்குகளில் காவல் துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை; குற்றவாளிகளை பிடிக்கவும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இது மேலதிகாரிகள் இந்த வழக்குகளை தீர்க்க விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது," என்று அவர் குற்றம்சாட்டினார்.

ஜார்கண்ட் மாநிலம் அகில இந்திய கிறிஸ்தவ சிறுபான்மை முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் பிரவீன் கச்சாப்ப், கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ந்து வரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். "மீண்டும் மீண்டும் நடைபெறும் இந்த தாக்குதல்களால் நாங்கள் ஆழமாக பாதிக்கப்படுகிறோம் என்று அவர் கூறினார்.

அரசின் செயல்பாடின்மையை அவர் கடுமையாக விமர்சித்தார் மற்றும் இத்தகைய குற்றங்களைத் தடுக்க காவல் துறையை உடனடியாகவும், பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.