திருஅவையின் ஒன்றிப்புக்காக இறைவேண்டல் செய்ய திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு.. | Veritas News

அருள்பணியாளர்களின் யூபிலி விழாவை முன்னிட்டு பிரான்சின் பாரிஸ் நகரிலுள்ள Notre-Dame பேராலயத்தில் கூடியுள்ள ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு ஜூன் 6, இவ்வியாழனன்று அனுப்பியுள்ள செய்தியொன்றில் திருத்தந்தை  பதினான்காம் லியோ “உங்களிடையே அருள்பணித்துவ சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் ஆயர்களுடனான நெருங்கிய அன்பின் பிணைப்பைப் பராமரிக்கவும், திருஅவையின் ஒன்றிப்புக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்யவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

“உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களுக்குரியப் பணியில் உங்கள் ஊழியத்தைத் தொடரும் இவ்வேளையில், தந்தைக்குரிய எனது பாசத்தைத் தெரிவிப்பதிலும், மனமகிழ்ந்து உங்களை ஊக்குவிப்பதிலும் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன்” என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.“நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சவாலான மற்றும் கடினமான திருஅவை மற்றும் சமூக சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தப் பணியை நிறைவேற்ற, உங்களைத் தம்முடைய நண்பர்கள் என்று அழைத்து, என்றென்றைக்கும் தம்முடன் ஒன்றிணைத்த இயேசுவின் மீது ஆழமான, தனிப்பட்ட மற்றும் உண்மையான அன்பில் உங்கள் வாழ்க்கையையும் பணியையும் நிலைநிறுத்த நான் உங்களை ஊக்குவிக்கிறேன்” என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

“மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி மற்றும் நெகிழ்ச்சியுடன் வலியுறுத்தியது போல, நெருக்கம், இரக்கம், மென்மை, பணிவு மற்றும் எளிமை வழியாக வெளிப்படுத்தப்படும் உங்கள் சமூகங்களுக்கான தாராளமான மற்றும் நிபந்தனையற்ற பக்தியால் இந்த அன்பு பொருந்தட்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

“இந்த வழியில், நீங்கள் இன்னும் புனிதர்களாக இல்லாவிட்டாலும், நம்பகத்தன்மைகொண்ட சாட்சிகளாக இருப்பீர்கள், தொலைவில் இருப்பவர்களின் இதயங்களைத் தொடுவீர்கள், அவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள், மேலும் அவர்களை இயேசுவுடனான சந்திப்பிற்கு இட்டுச் செல்வீர்கள்” என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.Presbyterorum Ordinis எனப்படும் அருள்பணியாளர்களின் ஊழியம் மற்றும் வாழ்க்கை குறித்த ஆணையின் 60-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதுகுறித்து பிரான்சின் எட்டு மறைமாவட்டங்களின் அருள்பணியாளர்கள் இக்கூட்டத்தில் சிந்தித்து வருகின்றனர்.