பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
28 பிப்ரவரி 2026
தவக்காலம் முதல் வாரம் – சனி
இ.சட்டம் 26: 16-19
மத்தேயு 5: 43-48
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்!
முதல் வாசகம்.
நமது முதல் வாசகம், கடவுளின் சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கிறது. கடவுளின் திருவுளப்படி வாழ முயற்சிப்பவர்களையும், கடவுள் கொடுத்த கட்டளைகளின்படி வாழ்பவர்களையும் கடவுள் அரவணைப்பார். நாம் கடவுளோடு கைக்கோர்க்க வேண்டும்.
நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நம் கைகள் கடவுளுடனும், கடவுளின் கைகள் நம்முடைய கைகளுடனும் இணைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள இவ்வாசகம் நினைவூட்டுகிறது.
‘நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்’ என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார் என்று வாசிக்கிறோம்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக வருகிறது. ஆண்டவர் இயேசு புதிய ஒரு கட்டளையைத் தருகிறார் அதுதான் பகைவருக்கு அன்பு என்னும் கட்டளை. வழக்கமாக யூதருடைய சட்டம் ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக; பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ என்றுதான் இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசுவோ, “பகைவரிடம் அன்பு செலுத்துங்கள், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுங்கள்” என்னும் புதிய கட்டளையைத் தருகிறார்.
சிந்தனைக்கு.
இயேசு, நற்செய்தியில் பழைய கட்டளைகளுக்கு புதிய வடிவம் கொடுக்கின்றார். அவற்றை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறார். நமது சொந்த குடும்பம், நம்பிக்கை மற்றும் நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் அன்பு செய்வதற்குப் பதிலாக நம் எதிரிகளை அன்பு செய்யவும், நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக இறைவேண்டல் செய்யவும் நமக்குச் சவால் விடுகிறார். ஏனென்றால், நம்மை அன்பு செய்பவர்களை மட்டுமே நாம் அன்பு செய்பவர்களாக இருந்தால், நாம் எந்த வகையிலும் உலக மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.
நமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்ய நம்மால் இயலாது. “உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்பது நமக்கான போதனையாக உள்ளது.
மனிதருக்கு எதிரான காரியங்களைச் செய்துகொண்டே இறைவனுகு நெருக்கமாக இருக்க முடியும் என்று நினைபோர் இயேசுவின் சீடர்களாக ஒருபோதும் இருக்க முடியாது. மனித நலனில் சிறிதும் அக்கறையின்றி வாழந்துகொண்டே இறைவனின் அன்பையும் அருளையும் பெற முடியும் என்பது முற்றிலும் பகல் கனவு.
அக்காலத்தில் யூதர்களைப் பொறுத்தமட்டில் அடுத்திருப்பவர் என்றால், அவர்களுடைய சொந்த மக்களினத்தார் என்றுதான் பொருள் கொண்டனர். ஆனால், இயேசு உலக மக்களை மனதில் கொண்டு பேசுகிறார். இனம், மொழி, சமயம் என எந்த வேறுபாட்டையும் மனதில் கொள்ளாமல் தேவையில் இருப்போர் அனைவருமே அடுத்திருப்பவர்தான் என்கிறார். இதை உணர்த்தவே நல்ல சமாரியன் உவமையைப் பயன்படுத்தினார்.
பகை எங்கே தொடங்குகிறது என்று சிந்தித்தால், அதன் பிறப்பிடம் நமது உள்ளமாகத் தான் இருக்கும். பகைக்கொண்ட உள்ளம் துயருத்தின் இல்லம் என்பதை கருத்தில் கொண்டால், நாமும் புனிதராகலாம். பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. அன்பு மட்டுமே பகமையை வெல்லும் ஆயுதம்.
மேலும், நாம் விண்ணகத் தந்தையாம் கடவுளை அன்புசெய்து, இயேசுவின் குடும்பத்தில் (திருஅவையில்) உறுப்பினராக இருப்பதால், நாம் கடவுளின் ஆன்மீக வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும், அவருடைய பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நாம் நம் விண்ணகத் தந்தையின் குழந்தைகள் அல்ல, இயேசு கிறிஸ்துவின் சகோதர சகோதரிகள் அல்ல என்பதை மனதில் கொள்வோம்.
நிறைவாக கோபம் மறையாமல் வெகு காலம் உள்ளதில் தங்கிவிட்டால், அது நாளடைவில் பழிவாங்கும் உணர்வைத் தூண்டிவிடும். நமது உடல்நலமும் நிம்மதியும் கெடும். நாம் பகைவர்களாகக் கருதி வெறுப்போரை மனதார மன்னிக்கும்போது, நம்மில் அமைதி நிலவும், நமது வழிபாடு நிறைவுள்ளதாக மாறும்.
பகைவர் மீது அன்பு செலுத்துவதுதான் நமது இயல்பாக இருக்க வேண்டும். ஆகவே, நாம் பகைவர்மீது அன்புகூர்வதன் வழியாக மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர் ஆகிறோம் என்பதை மனிதல் கொள்வோம், உயர்வடைவோம்.
இறைவேண்டல்
இரக்கத்தின் ஊற்றாகிய ஆண்டவரே, நான் பகைவர்மீது அன்புகூரும், தீமை செய்தவருக்கு நன்மை செய்யும் உள்ளத்தைக் கொண்டிருக்க உதவியருளும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452