இறைத் திருவுளத்தை அறிந்து நிறைவேற்றுவோம் ! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
இன்றைய இறை உணவு
02 மே 2026,
பாஸ்கா4-ம் வாரம் – சனி
தி.பணிகள் 13: 44-52
யோவான் 14: 7-14
இறைத் திருவுளத்தை அறிந்து நிறைவேற்றுவோம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பவுலும் பர்னபாவும் ஆசியா மைனருக்கு (நவீன துருக்கி) தங்கள் மறைத்தூதுப் பயணத்தைத் தொடர்கிறார்கள். அந்தியோகியாவில் உள்ள யூத தொழுகைக்கூடத்தில் மறையுரை ஆற்றிய பிறகு, அவர்கள் யூதர்களால் வெளியேற்றப்படுகிறார்கள். இயேசுவில் கடவுளின் மீட்புச் செயல் வெளிப்படுத்தப்பட்டதை யூதர்களால் அறிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
இருண்ட அவர்களது உள்ளம் ஒளியை ஏற்க மறுக்கிறது. ஆதலால், யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிடுகிறார்கள்.
ஆனால், பவுலும் பர்னபாவும் கொண்டு வந்த மீட்புக்குரிய நற்செய்தியில் புறவினத்தாரோ மகிழ்ச்சியடைகிறார்கள். தூய ஆவியின் உடனிருப்பை சீடர்கள் உணர்கிறார்கள். கடவுளின் மீட்பு செயல்கள் அதிக தொலைதூர இடங்களிலும் யூதரல்லாத மக்களாலும் உணரப்பட்டதை லூக்கா எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி இயேசுவின் பிரியாவிடை உரையைத் தொடர்கிறது. வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என்று அறிவித்தவர் இன்று தந்தையுடனான தனது உறவைப் பற்றி மேலும் தனிப்பட்ட முறையில் பேசுகிறார். இத்தருணத்தில் பிலிப்பு எளியதொரு வேண்டுகோளை முன்வைக்கிறார். ஆம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். ஒரு மறைபொருளை விவரிக்கக் கேட்கிறார்.
கண்ணால் காண முடியாத கடவுளை எப்படி காட்டுவது. ஆனால், இயேசு மட்டுமே கடவுளை அறிவார் என்பதானால், இயேசு அவரிடம் “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்’ என்கிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று, “நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள், என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்” என்று உறுதிபட கூறுகிறார். நிறைவாக, நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் இரு நிலையிலான மக்களைப் பார்க்கிறோம். யூதர்கள் பொறாமையுடனும், கர்வமுடனும் பவுலுக்கும் பர்னாவுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். புறவினத்தரோ திறந்த மனப்பான்மையுடனும் மகிழ்ச்சியுடனும் பவுலையும் பர்னாவையும் ஏற்றுக்கொண்டர்கள். இருவரும் யூதர்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும், பின்வாங்கவில்லை. கடல் அலைகளுக்குப் பயந்தால் கடலில் பயணிக்க இயலாது. கிறிஸ்துவில் சீடத்துவம் என்பது அஞ்சாமைக்குரியது.
இயேசுவின் வாழ்க்கையையும் செயல்களையும் நாம் ஆழ்ந்துணர்ந்தால்தான் ஓரளவு தந்தையாகிய கடவுளை புரிந்துகொள்ள முடியும். இயேசுவையே நாம் அறிய முற்படாதபோது தந்தை கடவுளைப்பற்றி சிந்திப்பது பொருளற்றது. ஆரம்பகால திருஅவை தந்தையர்கள் இயேசுவை "ஓர் அருளடையாளமாகப் பார்த்தனர். இயேசு மண்ணகத்தில் தந்தை கடவுளை வெளிப்படுத்தும் அருளடையாளமாக உள்ளார்.
யூத மதத்திலிருந்தும் பிற உலக மதங்களிலிருந்தும் கிறிஸ்துவத்தை வேறுபடுத்துவது கடவுளை நாம், நமது தந்தையாகப் பார்ப்பதுதான். நமக்கு உண்மையிலேயே நம்பிக்கை கண்கள் இருந்தால், இயேசுவின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும், வாரத்தையிலும் கடவுளின் திட்டத்தைக் காண முடியும்.
இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் அனைத்தும் தந்தையுடன் அவர் கொண்ட ஒன்றிப்பிலிருந்தே வருகிறது. அவர் தனியாக எதையும் செய்வதில்லை; தந்தையில் விருப்பத்தையே நிறைவேற்றுபவராக செயல்பட்டார். ஆகவே, “நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்பது வெறும் இயேசுவின் பெயரைச் சொல்லி வேண்டுவது மட்டும் அல்ல. அது, நம் விண்ணப்பமானது கடவுளின் விருப்பதுடன் ஒன்றித்துள்ளதா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
• நிறைவாக, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது என்பது நம் அன்றாட வாழ்வில் இறைவனின் வார்த்தைகளைச் செயலாக மாற்றுவதாகப் பொருள்படுகிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என் தாயும், சகோதரியும், சகோதரரும் ஆவார் என்று இயேசு சொல்கிறார். ‘ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துக்கொள்ளுங்கள்’ என பவுல் அடிகள் கூறுகிறார். (எபே 5:17)
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் பின்பற்றுபவர்களுக்கு நீர் யார் என்பதை வெளிப்படுத்தினீர். நான் நாளுக்கு நாள் உம்மை நெருங்கி வரவும் உம்மை அறியவும் எனது இதயத்தைத் திறக்க உதவியருளும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452