புனித பவுல் இறையியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற இறையியல் புலமாக உயர்வு | Veritas Tamil

கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறை (Dicastery for Culture and Education), திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித பவுல் கத்தோலிக்க இறையியல் கல்லூரிக்கு தன்னாட்சி பெற்ற திருச்சபை இறையியல் பீடம் (autonomous ecclesiastical Faculty of Theology) அந்தஸ்தை வழங்கியதன் மூலம், இந்நிறுவனம் அருள்பணித்துவ மற்றும் இறையியல் உருவாக்கத்தில் தனது நூற்றாண்டு கால வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளது.

ஜூன் 29, 2026 தேதியிட்ட இந்த ஆணை, பெங்களூருவில் உள்ள புனித பேதுரு பாப்பிறை நிறுவனத்திடமிருந்து (St. Peter’s Pontifical Institute) இந்நிறுவனத்தைப் பிரித்து, இதனை புனித பவுல் இறையியல் புலமாக (St. Paul’s Faculty of Theology) நிறுவுகிறது. மேலும், இது இறையியலில் இளங்கலை, உரிமைப்பட்டம் (Licentiate) மற்றும் முனைவர் ஆகிய திருஅவைப் பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரத்தையும் பெறுகிறது. புதிய இறையியல் புலமானது மற்ற இறையியல் நிறுவனங்களை தன்னுடன் இணைத்துக்கொள்ளவும், அவற்றின் கல்வி உருவாக்கத்தை மேற்பார்வையிடவும் அதிகாரம் பெற்றுள்ளது.

வத்திக்கானின் இந்த முடிவு இந்நிறுவனத்தின் கல்விப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதோடு, திருஅவையின் இறையியல் கல்விக்கான இதன் பங்களிப்பையும் வலுப்படுத்துகிறது.

புனித பவுல் நிறுவனத்தின் வரலாறு ஜூன் 8, 1921 அன்று துவங்கியது. அப்போது திருச்சிராப்பள்ளி ஆயர் அகஸ்டின் பைசாண்டியர், மதுரை மறைப்பணியின் இயேசு சபையினரின் பராமரிப்பின் கீழ் 24 குருமாணவர்களுடன் பண்டமங்கலத்தில் புனித பவுல் குருத்துவ பயிற்சி இல்லத்தை  நிறுவினார். இந்த குருத்துவ பயிற்சி இல்லம் அதே ஆண்டு இறுதியில் திருச்சிராப்பள்ளியில் உள்ள அதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது மற்றும் 1922 இல் திருஅவையின் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றது.

இவ்வில்லம் அருள்பணியாளர்களின் உருவாக்கத்தில் தனது பங்கை படிப்படியாக விரிவுபடுத்தியது. 1938 ஆம் ஆண்டில், இது மதுரை திருஅவை மாநிலம் மற்றும் அதன் மறைமாவட்டங்களுக்கான மாநில குருத்துவ பயிற்சி இல்லமாக (Provincial Seminary) மாறியது. பல ஆண்டுகளாக, இது இந்தியா முழுவதும் உள்ள மறைமாவட்டங்களில் இருந்தும், இலங்கை மற்றும் பல துறவற சபைகளிலிருந்தும் வரும் குருமாணவர்களுக்காக தனது கதவுகளைத் திறந்துள்ளது.

இறையியல் உருவாக்கத்தில் தனது பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், 1991 முதல் இந்தக் குருத்துவ பயிற்சி இல்லம் அருள்சகோதரிகளையும் பொதுநிலை மாணவர்களையும் முழுநேர மாணவர்களாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.

திருஅவையின் அங்கீகாரத்தின் பல நிலைகள் வழியாக இந்நிறுவனத்தின் கல்வி வளர்ச்சி முன்னேறியது. 1975 ஆம் ஆண்டில், இதன் இறையியல் பிரிவு உரோமில் உள்ள பாப்பிறை அர்பன் பல்கலைக்கழகத்துடன் (Pontifical Urban University) இணைக்கப்பட்டது, இது மாணவர்கள் இறையியலில் இளங்கலை பட்டம் பெற வழிவகுத்தது. 1978 ஆம் ஆண்டில் குருத்துவ பயிற்சி இல்லத்தின் நிர்வாகம் மதுரை திருஅவை மாநில ஆயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம் 1995 ஆம் ஆண்டில் தொகுப்பு  இறையியலில் (Systematic Theology) நிபுணத்துவம் பெற்ற இறையியல் உரிமைப் (Licentiate in Theology) பட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1997 ஆம் ஆண்டில், அப்போதைய கத்தோலிக்கக் கல்விக்கான திருப்பீடத் துறை (Congregation for Catholic Education) அதன் கல்விப் பிரிவை அதன் சொந்த சட்டதிட்டங்களுடன் கூடிய இறையியல் கல்வி நிறுவனமாக உயர்த்தியதுடன், அதனை பாப்பிறை அர்பன் பல்கலைக்கழகத்துடன் இணைத்து அங்கீகாரம் வழங்கியது.

2009 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் பெங்களூருவில் உள்ள புனித பேதுரு பாப்பிறை நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. தற்போதைய அண்மைய ஆணை, புனித பவுல் நிறுவனத்திற்கு திருஅவையின் தன்னாட்சி பெற்ற  இறையியல் புலம் என்ற அந்தஸ்தை வழங்குகிறது, இது அதன் கல்வி மற்றும் திருஅவை வளர்ச்சியில் ஒரு மேலதிக படியைக் குறிக்கிறது.

மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து, புதிதாக நிறுவப்பட்ட இந்த இறையியல் புலத்தின் முதல் வேந்தராக (Chancellor) நியமிக்கப்பட்டுள்ளார்.

2025-2026 கல்வியாண்டின் முடிவில், புனித பவுல் இறையியல் கல்லூரி மற்றும் நிறுவனம் 2,101 அருள்பணியாளர்களின் உருவாக்கத்திற்குப் பங்களித்துள்ளது என்றும், இவர்களில் 28 பேர் பின்னர் ஆயர்களாகியுள்ளனர் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொகுப்பு  இறையியலில் இதன் உரிமைப்பட்டத்திற்கான திட்டத்தில் இதுவரை 91 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் புனித பவுல் குருத்துவ பயிற்சி இல்லம் / நிறுவனம் தனது நூற்றாண்டை நிறைவு செய்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய இறையியல் புலம் உருவாகியுள்ளது. தனது நூற்றாண்டை எட்டியுள்ள தூய பவுல் இறையியல் புலம், தற்போது ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. இந்தியா மற்றும் அதற்கு அப்பாலும் திருஅவைக்கு சேவை செய்வதற்காக அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோரைத் தயார்படுத்தும் தனது பணியைத் தொடரும் அதே வேளையில், இறையியல் ஆராய்ச்சி, கல்விச் சிறப்பு மற்றும் திருஅவைப் பணி ஆகியவற்றில் தனது பங்கை இது மேலும் வலுப்படுத்துகிறது.

தன்னாட்சி பெற்ற இறையியல் புலமாக உயர்த்தப்பட்டதன் மூலம், புனித பவுல் இறையியல் நிறுவனம் இப்போது இறையியல் உருவாக்கம் மற்றும் திருஅவைக்கான சேவையின் நூற்றாண்டு காலப் பணியில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறது.

Tamil Survey Popup Image