செபமாலையின் வல்லமையும் அன்பின் வழியிலான உலக அமைதியும் ! | Veritas Tamil

உலகியல் அதிகாரங்களோ அல்லது ஆயுதங்களோ உண்மையான அமைதியைத் தந்துவிட முடியாது. இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய தெய்வீக அன்பினால் மட்டுமே உலகில் நிலவும் போர் மற்றும் வெறுப்புக்குத் தீர்வு காண முடியும்.

மே 08, வெள்ளியன்று, பொம்பெயி நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி  பயணத்தின்போது அங்குள்ள செபமாலை அன்னை பேராலயத்தின் (Shrine of the Virgin of the Rosary of Pompei) முகப்பில் அமைந்துள்ள சதுக்கத்தில் (Piazza Bartolo Longo) திருத்தந்தை லியோ அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். இலட்சக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்ற சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தை அவர்கள் ஆற்றிய மறையுரை. 

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

இன்று இந்தப் புனித பூமியில், அன்னை மரியாவின் நிழலில் நாம் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பது இறைவனின் பெரும் அருட்கொடை. 150 ஆண்டுகளுக்கு முன்பு, புனிதர் பார்டோலோ லோங்கோ இந்த இடத்தில் ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டத் தொடங்கியபோது, அது இன்று உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அன்னை மரியாவின் புகழ்ப்பாடலை (Magnificat) நினைவூட்டுகிறது: 'எனது ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது.' இது வெறும் வார்த்தைகள் அல்ல; இது ஒரு வாழ்க்கை முறை. மரியா தனது வாழ்வை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்ததால், இறைவனின் இரக்கம் அவர் வழியாக உலகிற்கு வந்தது.

ஓராண்டிற்கு முன்பு, பொம்பெயி நகரின் செபமாலை அன்னைக்கான 'வேண்டுதல் செபம்' (Supplication) நிகழ்ந்த இதே நாளில், பேதுருவின் வாரிசாக எனது திருத்தந்தை பணியைத் தொடங்கினேன். இதன் காரணமாகவே, எனது பணியை அன்னை மரியாவின் பாதுகாப்பின் கீழ் அர்ப்பணிப்பதற்காக இங்கு வர விரும்பினேன். திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ மற்றும் புனிதர் பார்டோலோ லோங்கோ ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்றி, புனித செபமாலை பக்தியை மீண்டும் ஒருமுறை ஊக்குவிக்க நான் விழைகிறேன்.”

செபமாலை என்பது வெறும் மணிகளை உருட்டுவது மட்டுமல்ல. அது மரியாவின் கண்களின் வழியாக இயேசுவின் முகத்தைப் பார்ப்பது. 'அருள் நிறைந்த மரியே' என்று நாம் சொல்லும் ஒவ்வொரு முறையும், வானதூதர் கபிரியேல் கொடுத்த அதே நம்பிக்கையை நாம் மீண்டும் உலகிற்குப் பறைசாற்றுகிறோம். இந்தச் செபம் எளிமையானது, ஆனால் இது வன்முறை நிறைந்த உலகை மாற்றும் வல்லமை கொண்டது.

இன்று உலகம் பல இடங்களிலும் போரினாலும் வெறுப்பினாலும் காயப்பட்டுக் கிடக்கிறது. நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்: எந்த ஒரு உலகியல் அதிகாரமும் உலகை மீட்க முடியாது. ஆயுதங்களோ, பொருளாதார ஒப்பந்தங்களோ நிரந்தர அமைதியைத் தராது. நாம் அமைதிக்காகச் செபிப்பதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது; வன்முறைச் செய்திகளைக் கண்டு நம் இதயங்கள் மரத்துப் போய்விடக் கூடாது.

புனிதர் பார்டோலோ லோங்கோ நமக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் இதுதான்: உண்மையான செபம் எப்போதும் பிறரன்புப்பணிக்கே வழிநடத்த வேண்டும். செபமாலை ஏந்திய கைகள், ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவி செய்ய நீள வேண்டும். இந்தப் பொம்பெயி திருத்தலம் ஒரு வெறும் கல் கட்டிடம் அல்ல; இது அன்பின் நகர், நற்செய்தி அறிவிப்பின் மையம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, உலகியல் சார்ந்த எந்த ஒரு அதிகாரத்தாலும் (Earthly power) உலகை மீட்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் அன்பென்னும் தெய்வீக வல்லமையால் மட்டுமே உண்மையான நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டு வர முடியும். எனவே நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்வோம், அவரை முழுமையாக நம்புவோம், எப்போதும் அவரைப் பின்பற்றி நடப்போம்.

நன்றி வத்திக்கான் செய்தி 
 

Tamil Survey Popup Image