இறை நம்பிக்கைக்கு அடித்தளமிட்ட முடியப்பர் சுவாமி அவர்களின் நினைவு நாளை கொண்டாடிய கிராம மக்கள் ! | Veritas Tamil
திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 20 ஆண்டுகள் பணி செய்து திரு இருதய ஆண்டவருக்கென ஒரு ஆலயம் கட்டி இந்த கிராமத்தை உருவாக்கியவரான ஸ்டீபன் லெபோர்த் என்ற இயற்பெயர் கொண்ட முடியப்பர் சுவாமி அவர்களின் நினைவு நாளை பங்கு இறை மக்கள் நன்றி உணர்வோடு கொண்டாடினர்.
தங்கள் கிராம வளர்ச்சிக்கும் இறை நம்பிக்கைக்கும் அடித்தளமிட்ட பிரான்ஸ் நாட்டில் பிறந்து இயேசு சபை உருவாக இம்மண்ணிற்கு வந்து இறைப்பணி செய்த முடியப்பர் சுவாமி அவர்களின் மீது கொண்ட நன்றி உணர்வால் ஒவ்வொரு ஆண்டும் இறந்த அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாள் அன்று அவரது கல்லறை முன் கூடி செபிக்கின்றனர். மேலும் தங்களின் குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் முதல் பேயராக முடியப்பர் சுவாமி அவர்களின் பெயர் இடம் பெறுகிறது.
பங்கு மக்களின் முன்னெடுப்பினாலும் பங்குத் தந்தை அவர்களின் வழிகாட்டுதலிலும் முடியப்பர் சுவாமியின் நினைவகத்திற்கு 28 ஜூலை 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 25ஆம் நாள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கடந்த புதன்கிழமையன்று இந்த விழாவினை இரண்டாவது ஆண்டாக கிராம மக்கள் கொண்டாடினர்.
இந்நிகழ்வு பற்றி பங்குத் தந்தை கூறுகையில் ,புளிப்பற்ற அப்ப விழா பற்றி மோசே ஆரோனுக்கு ஆண்டவராகிய கடவுள் எடுத்துரைத்த போது "இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும்.
மேலும் ,இந்த நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் முடியை சுவாமியின் நினைவகத்தின் முன்பு கூடி நிற்க திருவரங்கம் பங்கின் மூத்த அருள்பணியாளரான அருள்பணி I. அருள் SJ அவர்கள் திருவரங்கம் கிராம மக்கள் முடியப்பர் சுவாமியின் மீது கொண்டிருக்கும் அன்பையும் நன்றி உணர்வையும் நினைவுகூர்ந்து தொடக்க செபம் செபித்தார். பிறகு பங்குத் தந்தை அருள்பணி. M.R. ஜேசு, திரு இருதய மேல்நிலைப் பள்ளி தாளாளரும் முடியப்பர் மாணவர் இல்லத்தின் இயக்குநருமான அருள்பணி. சகாயம், உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. பிரான்சிஸ் பால் MIC, பங்கின் மூத்த குரு அருள்பணி. I. அருள் SJ, அருள்பணி. ஆரோக்கியசாமி ஆகிய அருள்பணியாளர்கள் அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு அருள்பணி. ஆரோக்கியசாமி அவர்கள் நிறைவேற்றிய திருப்பலி மறையுறையின்போது முடியப்பர் சுவாமி அவர்கள் இந்த கிராமத்தை உருவாக்க தானே வரைபடம் வரைந்து மிக நேர்த்தியாக கிராமத்தின் தெருக்களை வடிவமைத்தது குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து திருப்பலியில் திருவரங்கம் பங்கில் பணி செய்யும் அமலவை அருள் சகோதரிகளும் லெயூகா அருள்சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
திருப்பலிக்கு பிறகு மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பாக முடியப்பர் சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைங்கும் கும்மி பாடலுக்கு பெண்களின் கும்மியடித்து ஆடினர். பங்கின் செசிலி பாடல் குழுவை வழிநடத்தும் செல்வன் சாமு எழுதி இசையமைத்து பாடகர் குழு உறுப்பினர்களால் உருவான இந்தப் பாடல் பலரின் பாராட்டைப் பெற்றது. நிறைவாக உறவின் விருந்தோடு இந்த விழா நிறைவுற்றது.
இறுதியாக ,விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப விதைத்தவர் விண்ணடி சேர்ந்தாலும் அவர் விதைத்த விதைகள் விண்ணை நோக்கி இன்று விருட்சங்களாக உயர்ந்து நிற்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.