அவரது திருவுளம் நம்மில் நிறைவேற அடிபணிவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

19 ஜூன் 2025
பொதுக்காலம் 11 ஆம் வாரம் –வியாழன்
2 கொரி 11: 1-11
மத்தேயு 6: 7-15
அவரது திருவுளம் நம்மில் நிறைவேற அடிபணிவோம்!
முதல் வாசகம்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில், புனித பவுல் கொரிந்து மக்கள் மீது (அவர் சுமார் 1.5 ஆண்டுகள் வாழ்ந்த இடம்) ஏன் அக்கறை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறார். அவர்கள் ஆண்டவராகிய இயேசுவோடு உறவு கொள்ளும்படி அவர்களுக்கு ஊழியம் செய்வதில் அவர் அதிக நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ளார். ஒரு மணமகளின் அன்பான தந்தையாக, அவர் தனது அன்புக்குரிய சபையினரை மணமகனான கிறிஸ்துவின் கைகளில் ஒப்படைத்துள்ளார்.
பவுல் தனது அன்பான கொரிந்தியர்களுக்காக உழைத்து, மற்ற பவுலின் சமூகங்களின், குறிப்பாக மாசிதோனியாவின் பொருளாதார உதவியால் தனது நற்செய்திப்பணியை நிறைவேற்றி வந்தார் எனகிறார். மேலும் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல கொரிந்தியரும் போலி போதகர்களால் ஏமாற்றப்படாமலிருக்கவும் சீரழியாமலிருக்குவம் பவுல் வேண்டுகிறார்.
நிறைவாக, · மாபெரும்’ திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன்’ என்று பவுல் குறிப்பிடுவதில, ‘‘மாபெரும்’ திருத்தூதர்’ என்பது போலி போதகர்களைக் குறித்து பவுல் அடிகள் கிண்டலாக விவரிக்கும் சொற்றொடராகும்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு இறைவேண்டல் குறித்து அறிவுறுத்துகிறார். மற்றும் மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். "மாதிரி இறைவேண்டல் " ஒன்றை தந்து அதில் மன்னிப்பையும் மன்னிப்பு பெறுவதற்கான நிபந்தனையும் இணைக்கிறார். இயேசுவின் தந்தை கடவுளையும் நமக்கும் தந்தையாக அறிமுகப்படுத்துகிறார். இதன்வழி மனுக்குலத்தில் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை விதைக்கச் செய்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள், இறைவேண்டல் செய்ய கற்றுக்கொடுக்கும்படி அவரிடம் கேட்கிறார்கள். அவர் விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற இறைவேண்டல் செய்ய கற்பிப்பதன் மூலம் பதிலளிக்கிறார், இதன் மூலம் ஒர் உறுதியான மாதிரியை அருள்கிறார்.
கடவுளின் பிள்ளையாக இருப்பதன் அர்த்தம் என்ன? முதலாவதாக, ஓர் அன்பான தந்தையாக நான் கடவுளை அழைக்க முடியும் என்பதை உணர்கிறேன். அவர் எங்கோ ஆகாயத்தில் தொலைவில் இருப்பவர் அல்ல. மாறாக, என்னுடன் என் இல்லதில் வாழும் தந்தையாக உள்ளார் என்பதில் மகிழ்கிறேன். நாம் கடவுளைத் தேடி அலைவதில் அர்த்தமில்லை.
கடவுள் நம் தந்தை என்பதால், நாம் என் சகோதரனாகிய இயேசுவோடு நெருங்கிய உறவுமுறை கொண்டு வாழ முடிகிறது. எனவேதான், இயேசுவின் தந்தையாம் கடவுளுடன் நல்லிணக்கத்தை, உறவை வளர்த்துக் கொள்ள, அவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.
இந்த இறைவேண்டலில் இரு முக்கிய பகுதிகளைக் காண்கிறோம். வழக்கமாக, இந்த இறைவேண்டலின் வார்த்தைகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்வதால், அதைப் பற்றி சிந்திக்க பெரும்பாலும் நேரம் ஒதுக்குவதில்லை.
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டலில், ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றுகிறார் ஆண்டவர். ‘எங்கள் தந்தையே!’ ‘எங்களுக்குத் தாரும்!’ ‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்!’ என்று பன்மையில், வேண்ட சொல்கிறார். இது ஒரு பொதுவுடமை இறைவேண்டல். இதை ஒரு ‘கம்னியூட்டு’ இறைவேண்டலாகவும் பொருள் கொள்ளலாம்.
இதில் இயேசு இணைத்த ‘அன்றாட உணவு என்பது ‘எனக்கு’ மட்டும் அல்ல, மாறாக, ‘எங்களுக்கு’ என்று சொல்வதன் வழியாக சமநிலையான பகிர்வுக்கும் வழிவகுக்கிறது. இது சமூகத்தில் பேராசையால் நிலவும் சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் எதிரானது.
இது இயேசு ஏற்றி வைத்த ஓர் அமைதி சமூகப் புரட்சி. "எங்கள் தந்தையே" என்ற தொடங்கும் இந்த இறைவேண்டல் உலக எல்லை வரை வாழும் அனைத்து கிறிஸ்தவர்களையும், ‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லாருக்கும் தந்தை இறைவன் என்ற கொள்கை கொண்ட அனைவரையும் இந்த இறைவேண்டல் ஒன்றிணைக்கிறது என்றால் மிகையாகாது.
நிறைவாக, என்னுடையதல்ல ‘உம்முடைய திருப்பெயர் போற்றப்பெறுக’ என்றும், என்னுடயதல்ல ‘உம்முடைய அரசு’ வர வேண்டும் என்றும், என்னுடையதல்ல, மாறாக உம்முடைய திருவுளம் நிறைவேற வேண்டும் என்றும் தந்தையிடம் மன்றாடவும் கற்பிக்கிறார் ஆண்டவர்.
இறைவேண்டல்.
நல்லதொரு இறைவேண்டலைக் கற்றுத்தந்தை ஆண்டவரே, என் மீது உமது ஆட்சியை நான் நாடுகிறேன், உமது திருவுளப்படி வாழ்ந்து மரிக்க விரும்புகிறேன். எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
