வானம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.08.2024

வானம்
பலதரப்பட்ட நட்புகள் என்னோடு உள்ளார்கள் அதிலே கவிதையை
ரசிப்பவர்கள் மட்டும் இதை நோக்குக.
கவிக்கோ அப்துல் ரஹுமான் வானத்தோடு பேசுகிறார்.
ஒருநாள் எனக்கும் வானத்துக்கும் போட்டி நடந்தது.
நான் புன்னகையை எடுத்துவைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது.
நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது.
நான் வியர்வை துளிகளை எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது.
நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது.
நான் காதலை எடுத்துவைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது.
நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்
அது மேகங்களை எடுத்து வைத்தது.
நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது.
நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது.
நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது.
நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரகணங்களை எடுத்து வைத்தது.
நான் பெரு மூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது
புதுப்புது இலட்சியங்களை எடுத்து வைக்கும் பாதங்களை எடுத்து வைத்தேன்.
வானம் என்னிடம் தோற்றது .......
( ஆஹா என்ன ஒரு பார்வை இயற்கையை )
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
