அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ்வோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

30 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 13 ஆம் வாரம் – திங்கள்
தொடக்க நூல் 18: 16-33
மத்தேயு 8: 18-22

அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ்வோம்!
 
முதல் வாசகம்.

இந்த வாசகப் பகுதியானது,  ஆபிரகாமுக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலை விவரிக்கிறது. ஆபிரகாம் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில்   மூன்று மனிதர் (வானதூதர்கள்) காணப்பட்டனர் என்று கடந்த சனிக்கிழமை வாசகத்தில் அறிந்தோம். ஆபிராகமும் சாராவும்  அவர்களுக்கு உணவளித்துப் பணிவிடை புரிகிறார்கள். அவர்களோ, முதிர்ந்த வயதிலும் சாராவுக்கு மகன் பிறப்பான என்று முன்னுரைக்கிறார்கள்.
இன்று அவர்கள் சோதோமுக்குப் புறப்படத் தயாராகும்போது, கடவுள் தனது திட்டத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார்: அவர் அந்த சோதோமை  பெரும் தீய செயல்கள் பொருட்டு அதை அழிக்க விரும்புவதாகக் கூறுகிறார். 

ஆபிரகாம் கடவுளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததால்  "பாவமுள்ள" சோதோம் மற்றும் கொமோராவை அழிக்கும்  திட்டத்தை கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார். தனது சகோதரனின் மகன் லோத்து மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி கவலைப்பட்ட ஆபிரகாம், நகரத்தில் போதுமான நல்ல மக்கள் இருந்தால் இரண்டு நகரங்களின் மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கடவுளிடம் விண்ணப்பிக்கிறார். சில பரிந்துரைகளுக்குப் பிறகு இறுதியாக அங்கு பத்து நேர்மையாளர்கள் இருந்தால்  சோதோம் மற்றும் கொமோராவை அழிக்க வேண்டாம் என்று மன்றாடுகிறார்.  ஆபிரகாம் கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது வெளிப்படுகிறது.

நற்செய்தி.

நற்செய்தியில், இருவர் இவர்களில் ஒருவர் மறைநூல் அறிஞர், இயேசுவை அணுகி, இயேசுவைப் பின்பற்ற விரும்புவதாகக் கூறுகிறார்கள்.   இயேசுவோ,  “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று உண்மை சூழலை எடுத்துரைக்கிறார். 

 இயேசுவின் பதிலைக் கேட்டதும், இயேசுவைப் பின்பற்ற மனம் இல்லாதவர்களாக  சாக்குப்போக்கு கூறுகிறார்கள். தனக்குச் சொந்தமானது என்று அழைக்க எந்த இடமும் இல்லை என்று இயேசு தெரிவிக்கிறார். அவர்களும் வந்த வழி திரும்புகிறார்கள்.

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களையும் கூர்ந்து வாசித்தால், பழய ஏற்பாட்டில் கடவுளின் இரக்கம் மற்றும் மன்னிப்புப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், மேலும் நற்செய்தியில், இயேசுவின் சீடராக இருப்பதற்கான இன்றியமையா நிபந்தனையொட்டி அறிவுறுத்தப்படுகிறோம்.

நற்செய்தியில் ‘இயேசுவைப் பின்தொடர்ந்தால், தனக்கும் மக்கள் மத்தியில்  அவருக்குக் கிடைக்கும் பேரும் புகழும் கிடைக்கும்’ என்ற சுயநலத்தில், இயேசுவைப் பார்த்து  “நீர், எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதுபோல் இயேசுவுக்குச் சீடராகவும் இருப்பதோடு பேருக்கும் புகழுக்கும் ஆளாகலாம் என்பது அந்த மறைநூல் அறிஞரின் எண்ணமாக இருந்திருக்கலாம். 

‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல (எசாயா 55:8) என்பதுதான் கடவுளின் திருவுளம். இயேசுவின் அறிவுத்தலை இருவராலும் ஏற்க முடியவில்லை. ஆம்,  சுயநலவாதிகளாகப் பேரும் புகலோடும் வாழ்வதற்கு  ஏற்ற இடமல்ல திருஅவை.  

அவரைப் பின்பற்றுவது எளிதான ஒன்றல்ல, ஏனென்றால் நம் சொந்த விருப்பங்களுக்கு மேலாக அவரது விருப்பத்தை நாடவும் பின்பற்றவும்  நிபந்தனையின்றி நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ‘இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்க மாட்டேன்’ என்பது வெறும் பாடல் வரியல்ல. அது நமது அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் உண்மை வரிகள்.

 

கடவுளுடைய அரசுக்காக இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், கீழ்ப்படியவும், தியாகம் செய்யவும் விழைவது சிறந்த சீடத்துவத்திற்கான பண்புகளாகும். கிறிஸ்தவ சீடத்துவத்தின் ஆரம்பம் ‘இயேசுக் கிறிஸ்துவை பின்பற்றுவேன்’ எனத் தீர்மானிப்பதாகும். எனவேதான், இயேசு, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத்.16:24) என்று வலியுறுத்தி கூறினார். அத்தோடு, ‘தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்ய (மத் 18:38) என்கிறார்.

இயேசுவின் சீடராக இருப்பது மதிப்புக்குரியது.  இயேசுவை நம் தலைவராகவும்  ஆண்டவராகவும் பின்பற்றுவதற்கு நாம் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அவருக்காக நம் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்யக்கூட தயாராக இருக்க வேண்டும்.  அடுத்து,  அவரைப் பின்பற்றுவதில் நமக்குத் தடையாக இருக்கும் எதிலிருந்தும் நம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்று வாழ்தல் சீடத்துவத்திற்குப் பொருந்தாது.  "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"  என்பது இயேசுவின் சீடத்துவத்தில் இடமில்லை. 


இறைவேண்டல்.

 உமது சீடராக என்னைத் தேர்ந்துகொண்ட ஆண்டவரே, உம்மில் நான் கற்றுக்கொள்ளவும், கீழ்ப்படியவும், தியாகம் செய்யவும் தொடர்ந்து என்னை வழிநடத்துவீராக. ஆமென்.


இறைவேண்டல்.


அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில்,  அன்னை மரியாவைப் போல நானும் என்னில் மாசற்ற இதயம் கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452