“பிறந்த மேனியனாய் யான் வந்தேன்....; பிறந்த மேனியனாய் யான் செல்வேன்” ((யோபு 1:21) | ஆர்கே. சாமி | Veritas Tamil

20 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 11 ஆம் வாரம் –வெள்ளி
2 கொரி 11: 18, 21b-30
மத்தேயு   6: 19-23
 
 
“பிறந்த மேனியனாய் யான் வந்தேன்....; பிறந்த
மேனியனாய் யான் செல்வேன்” ((யோபு 1:21)
 

முதல் வாசகம்.
 
கொரிந்தியர்களுக்கு எழுதுகையில், புனித பவுல் தான் ஏன் இவ்வளவு கடினமாக உழைத்து இவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்பதற்கான காரணங்களை கொரிந்திய கிறிஸ்தவ சமூகத்தினர் அறிய வேண்டும் என்று விரும்புகிறார். 

பல போலி போதகர்கள் அவர்களைப் பற்றி பெருமையாகப் பேசி மக்களை மயக்கும் வேளையில், உண்மையாக நற்செய்தியின் பொருட்டு பல துன்பங்களை அனுபவித்த பவுல் இன்று தன்னை தானே பாராட்டிக்கொள்ளும் வகையிலும், தேற்றிக்கொள்ளும் வகையிலும்  அவர் அனுபவித்த சோதனைகள் மற்றும் இன்னல்களைப் பற்றி அவர் பெருமைபடுகிறார்.  அவர் சந்தித்தி போராட்டங்கள், மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் கடவுளிடம் நெருங்கி வர உதவும் என்றால், அவற்றை  மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்கிறார்.  

நற்செய்தி.

நற்செய்தியில், நம் இதயம் இருக்கும் இடத்தில், நமது செல்மும்  இருக்கும் என்று இயேசு குறிப்பிடுகிறார். நாம் மண்ணுலகிற்கு உரிய உடைமைகளை மட்டுமே குவிக்க முயன்றால், இறுதியில்  ஏமாற்றமடைவோம், ஏனென்றால் பொருள் அதன் காலாவதியை அடையும், மேலும் மரணம் எனப்படும் நமது இறுதி  பயணத்தில் நம்முடன் அவை உடன்  வராது. 

மறுபுறம், நாம் விண்ணக வீட்டில் நமது செல்வங்கைச் சேர்த்து வைத்தோமானால், அவை நமது நிலைவாழ்வுக்கு உறுதிணையாக இருக்கும் என்கிறார் ஆண்டவர்.  

சிந்தனைக்கு.

‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா
வெளுத்த நரம்பும் சதையும் பூட்டிவைத்த கூடடா’
 
என்று ஒரு சித்தர் பாடி வைத்தார். இந்த உலக வாழ்வை மகிழச்சிப்படுத்தும் நோக்கத்தில் அல்லும் பகலுமாக உழைத்து செல்வங்களை சேர்த்துக்கொண்டே போகிறோம்.
ஆனால், உடல் மட்டுமல்ல இவ்வுலகில் எதுமே நமக்கு நிரந்தரம் அல்ல என்ற உண்மையை சித்தர் இப்பாடலில் தெளிவுப்படுத்துகிறார். மனிதன் அறியக்கூடிய அனைத்தும் நிரந்தரம் என்று நினைத்து ஒன்றுக்கு மேல் ஒன்றாக சேர்ப்பதற்கு உழைத்துக்கொண்டே இருக்கிறான்.  கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
பவுல் அடிகள்  கடவுளுடனான உறவை மிகவும் உயர்வாகக் கருதினார்.  அதனால் அவர் துன்பம், வலி, ஏமாற்றம், அவமதிப்பு, மற்றும் கடுமையான துன்புறுத்தலைத் தாங்கிக்கொண்டார். மேலும் அவர் கடவுளுடனான தனது சொந்த தனிப்பட்ட உறவுக்காக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்காகவும், கடவுளுடனான அவர்களின் உறவுக்காகவும் வாழ்நாள்களில் பெரும்பகுதியைச் செலவிட்டார். இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். உலகைவிட்டுப் போன பெரும் பெரும் செலவந்தர்கள் எல்லாம் மறக்கப்பட்டுவிட்டனர்.  

இயேசு உலகில் செல்வம் வேண்டாம் என்று சொல்வில்லை. போதும் என்ற மனதோடு வாழ அழைக்கிறார். இருக்கிற அடிப்படை செலவங்களோடு மேலும் மேலும் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டாம் என்றுதான் அறிவுறுத்துகிறார். தொடர்ந்து சேர்த்துகொண்டிருந்தால் அதனால் நிம்மதி கெடும். உலகப்பற்று அதிகரிக்கும், இறைபற்று தேய்ப்பிறையாகும்.

இயேசுவே நிரந்தரம். அவரோடு நாம் கொண்டிருக்கும் நெருங்கிய உறவே, விண்ணக செல்வம். அது  நீடித்து நிலைத்திருக்கும் செல்வம் என்பதை  ஏற்போர் வாழ்வுப்பெறுவர்.  புனித பவுல் கலாத்தயருக்கு எழுதிய திருமுகத்தில் ‘சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை இவ்வுலகைச் சார்ந்தவை என்றும்,  இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை’ என்றும் உறுதிபட கூறுகிறார் (519-20).
எனவே நிலையில்லாச் செல்வத்தின் மீது பற்று வைக்காமல், அது கைவசம் இருக்கும்போதே பிறர்க்கு வழங்கி உதவவேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். நாம் சேர்த்து வைத்த செல்வங்களால்  நமது வயதை தடுத்து நிறுத்த இயலாது.  எனவே நம்  சேர்த்து வைத்த செல்வம்  நிலைபெற்று நீடித்து நிலைக்காது என்னும் உண்மையை உணர்ந்து, செய்ய முடிந்த தருமச் செயல்களைச் செய்து ஒருநாள் விண்ணக வாழ்வை செல்வமாகப் பெற விழைவோம்.

“என் தாயின் கருப்பையினின்று
பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;
அங்கே திரும்புகையில் பிறந்த
மேனியனாய் யான் செல்வேன்”(யோபு 1:2)


இறைவேண்டல்.

விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் என்றுரைத்த ஆண்டவரே, உம்மில் நான் கொள்ளும் பற்றுறுதியே (trust) எனது மேலான செல்வம் என்று வாழும் வரத்தை எமக்கருளவீராக. ஆமென்.
  

 
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452