உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு! | Veritas Tamil

16 ஜூன் 2025
பொதுக்காலம் 11 ஆம் வாரம் –திங்கள்
2 கொரி 6: 1-10
மத்தேயு 5: 38-42
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு!
முதல் வாசகம்.
இன்றைய முதல்வாசகத்தில், “அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகின்றோம்” என்று குறிப்பிட்டு கொரிந்தியருக்கு எழுதுகிறார் புனித பவுல் அடிகள். புனித பவுல் தமது படிப்பினையை வெறுமனே போதித்துக்கொண்டிருக்காமல், தன் நடத்தையால், செயலால் நிரூபித்துக் காட்டினார் என்பதை வாசகம் உணர்த்துகிறது.
‘நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம்’ என்று வேண்டுகிறார். ·அதாவது கடவுளின் மீட்பின் நாள் இப்போது வந்துள்ளது என்று கடிதத்தில் குறிப்பிடும் பவுல். கடவுள் அவர்களுக்கு வழங்கும் அருளை வரவேற்பதன் மூலம் கடவுளோடு ஒத்துழைக்குமாறு அவர் கொரிந்தியர்களிடம் விண்ணப்பிக்கிறார்.
தொடர்ந்து, கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களைப் பவுல் எச்சரிக்கவும் செய்கிறார். கடவுளின் அருள் என்பது ஒரு இலவச கொடை. மீட்படைய அக்கொடையை பயன்படுத்த வேண்டும் என்கிறார். ‘கடவுளின் மீட்பின் நாள் இப்போது வந்துள்ளது’ என்பதன் வழி, மற்றொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே, நற்செய்தியை ஏற்று அதன்படி வாழ காலம் தாழ்த்த வேண்டாம் என்று பவுல் அடிகள் மீண்டும் வலியுறுத்தி எழுதிகிறார்
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தனது மலைப்பொழிவைத் தொடர்கையில், மோசேயின் போதனைகளை மேன்மைப்படுத்தி, அவற்றை உயர் நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு தம்முடைய சீடர்களை நீதியாகவும் நியாயமாகவும் செயல்பட மட்டுமல்ல, இரக்கத்துடனும் அன்புடனும் செயல்பட அழைக்கிறார்.
தவறாக தண்டிக்கப்படால், பழிவாங்கலைக் கோருவதற்குப் பதிலாக, ஒருவர் தவறாக நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஒரு பொருளைக் கொடுக்க சவால் விட்டால், ஒருவர் கேட்கப்படுவதை மட்டுமல்ல, அதிகமாகவும் கொடுக்க வேண்டும் என்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களை வாசிக்கும்போது, இயேசுவின் சீடராக இருப்பதன் "ஞானம்" குறித்து நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அறிவுரை இக்காலத்து மக்களுக்கு மடமையாகத் தோன்றக்கூடும். ‘உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்’ என்பன நடக்கக்கூடியதா?
இயேசு இந்த பழிக்குப்பழி என்ற கர்வத்தை சமூகத்திலிருந்து தகர்க்கிறார். தீமையை எதிர்கொள்ள ஒரு புதிய வழியை அவர் அறிமுகப்படுத்துகிறார் - பழிவாங்குவதன் மூலம் அல்ல, மாறாக இரக்கம், பொறுமை மற்றும் தாராள மனப்பான்மையுடன். மன்னிப்பு, அமைதி மற்றும் எதிரிகள் மீதான அன்பு மூலம் அவர் சட்டத்தை நிறைவேற்றுகிறார்.
‘மதியாதார் வாசல் மிதியாதே’ என்ற ஔவையின் கூற்றைக் கடைப்பிடிப்பவர்களாகத்தான் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறாக, “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்” ( குறள் 314)
எனும் வள்ளுவரின் படிப்பினை ஏற்பது மேன்மைக்குரியது.
கடவுள் நம்மில் அவரது கொடைகளை அருளியிருப்பது மனிதநேயம் வளம்பெறவேண்டும் என்பதற்காகவே. அவர் தாம் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை (உரோ 11: 29). அவர் கொடுத்தது கொடுத்தத்தான். ஆனால், பெற்றுக்கொண்ட நாம் இரக்கமற்ற கருமிகளாக வாழ்கிறோம். துன்புறுவோருக்கு உதவும் நல்லுள்ளங்களைக் கடவுள் ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார் என்பது திண்ணம். கொடுங்கள்.
நம்மை அறைபவர்களுக்கு மறு கன்னத்தைக் காட்டும்போது, நாம் நமது கண்ணியத்தையும் கிறிஸ்துவின் அன்பையும் பறைசாற்றுகிறோம். நாம் மற்றவர்களுக்கு உதவியதனால் சிறிது துன்புறக்கூடும். ஆனால் நாம் நிவைவாழ்வைக் பரிசாகப் பெறுவோம். நமது செல்வத்தில் சிலவற்றை நாம் இழக்க வேண்டியிருக்கலாம், ஆனால் நாம் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட செல்வத்தைப் பெறுவோம். இது ஆண்டவரின் வாக்குறுதி.
நம் வீடுகளிலும், பணியிடங்களிலும், சமூகங்களிலும், நமக்குத் தீங்கு ஏற்படும்போது, உணர்ச்சிவசப்பட்டு எதிர்க்காமல் இருந்தாலே நாம் உலகிற்கு ஒளியாவோம்.
உண்மையில், மன்னிப்பு பழிவாங்குவதை விட சிறந்தது, ஏனென்றால் மன்னிப்பு என்பது மென்மையான இயல்பின் அடையாளம், ஆனால் பழிவாங்குவது காட்டுமிராண்டி இயல்பின் அடையாளம். இந்த இரண்டு இயல்புகளில் நமக்குரியதை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்.
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஆண்டவரே, தீமை செய்வோர்க்கும் நன்மை செய்யும் வரத்தால் என்னை நிரப்புவீராக. ஆமென்
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
