FABC 12-வது நிறைவிறுதிப் பேரவைக்கு தயாராகும் இந்தோனேசிய திருஅவை! | Veritas Tamil
2026 ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவைக்கு முன்னதாக, உரையாடல், பன்முகத்தன்மை மற்றும் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ள தனது தனித்துவமான திருஅவை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள இந்தோனேசிய கத்தோலிக்க திருஅவை தயாராகியுள்ளது.
"நீ இன்னும் பெரியவற்றைக் காண்பாய்" (யோவான் 1:50): ஆயர் மாமன்ற மனமாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் அமைப்பவர்களாகவும் இருக்கும் மறைப்பணியும் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிறைவுறுதிப் பேரவையில், ஆசியா முழுவதிலுமிருந்து ஆயர்கள் ஒன்று கூடி செபம், பகுத்தறிவு மற்றும் மறைப்பணிக்கான அர்ப்பணிப்பை புதுப்பிக்கவுள்ளனர்.
உலகின் மிகுந்த சமய மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில், மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்று விழுக்காடு மட்டுமே கத்தோலிக்கர்கள். சிறுபான்மை சமூகமாக வாழ்ந்துவரும் திருஅவை, வேறுபட்ட மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இன மக்களுடன் உரையாடல், சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழியாக நற்செய்திக்கு சான்று பகர்ந்து வருகிறது. இந்த அனுபவம், 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட FABC-யின் ஆசிய திருஅவை குறித்த பார்வையுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
2022-ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற FABC-யின் 50-வது ஆண்டு பொதுப் பேரவையின் தொடர்ச்சியாக, ஏழைகள், இளைஞர்கள், புலம்பெயர்ந்தோர், பழங்குடியினர் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களைக் கேட்டு, "ஆசிய மக்களாக ஒன்றாகப் பயணிப்போம்" என்ற அழைப்பையும் நிறைவிறுதிப் பேரவை முன்னெடுக்கிறது.
FABC-யின் மேய்ப்புப் பார்வையின்படி, "பாலம் அமைப்பவர்களாக" இருப்பது சமயங்களுக்கிடையேயான உரையாடலை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, திருஅவைக்குள் கேட்டறிதல், பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதோடு, திருஅவைக்கு வெளியே அமைதி, நல்லிணக்கம் மற்றும் உரையாடலின் கருவியாக மாறுவதையும் உள்ளடக்கியதாகும்.
இந்தோனேசியாவில் முஸ்லிம்கள், சீர்திருத்த திருஅவையினர், இந்துக்கள், பௌத்தர்கள், கன்பூசியர்கள் மற்றும் பழங்குடியினருடன் இணைந்து வாழும் அனுபவம், கத்தோலிக்கப் பள்ளிகள், மருத்துவமனைகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் மனிதாபிமான சேவைகள் வழியாக மத வேறுபாடின்றி அனைவருக்கும் சேவை செய்யும் பண்பாட்டை உருவாக்கியுள்ளது.
அதேவேளை, உள்ளூர் மொழிகள், இசை, கலை மற்றும் பாரம்பரியங்களை திருப்பலியில் இணைக்கும் உள்ளூர்மயமாக்கல் (Inculturation) மரபையும் இந்தோனேசிய திருஅவை சிறப்பாக வளர்த்துள்ளது. மனித மாண்பு, தேசிய ஒற்றுமை, சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் பஞ்சசீலா (Pancasila) கொள்கைகளும் சகோதரத்துவத்தை வளர்க்க உதவியுள்ளன.
நாட்டில் செயல்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கப் பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பிறரன்புப்பணி நிறுவனங்கள், நற்செய்தி அறிவிப்பு என்பது வார்த்தைகளால் மட்டுமல்ல, மனித மாண்பை உயர்த்தும் அன்பான சேவையின் வழியாகவும் வெளிப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாகவும், டிஜிட்டல் வளர்ச்சியை வேகமாக எதிர்கொள்ளும் நாடாகவும் உள்ள இந்தோனேசியாவில், இளைஞர்கள் ஆயர் மாமன்றத் திருஅவையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற அழைக்கப்படுகின்றனர். அதேபோல், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நாடாக இருப்பதால், படைப்பைப் பாதுகாப்பதும் திருஅவையின் முக்கிய மறைப்பணியாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், மதச்சார்பின்மை, தனிமனித மனப்பான்மை, செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல் பரவல், சமூகப் பிளவு, வறுமை, புலம்பெயர்வு, மனிதக் கடத்தல் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி போன்ற சவால்களையும் திருஅவை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க பொதுநிலையினர், இளைஞர்கள் மற்றும் பெண்களின் அதிக பங்கேற்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் பல்துறை ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
இந்தோனேசியாவிலிருந்து ஆசியா முழுவதற்கும் விடுக்கப்படும் இந்தச் செய்தி என்னவென்றால், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பில் ஒன்றாகப் பயணிக்கும் திருஅவை, வேகமாக மாறிவரும் உலகில் அமைதி, நீதி மற்றும் ஒருமைப்பாட்டின் நம்பகமான அடையாளமாக மேலும் விளங்க முடியும் என்பதாகும்.
