நாம் எந்த வகை? | அருட்சகோதரி பிரைடா SSAM | VeritasTamil

நாம் எந்த வகை?

                      நாம் எந்த வகை?


வகைகள் பல உண்டு. தாவரங்கள், விலங்குகள், பறவைகள்,  யுகங்கள், காலங்கள் என அனைத்திலும் வகைகளையே கண்டு பழகிபோன நமக்கு மனிதர்களையும் வகைப்படுத்தி பார்க்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். எந்த மனிதர்களை பார்த்தாலும் அவர்கள் யார்? என்ன? எப்படிப்பட்டவர்? எங்கிருந்து வருகிறார்? என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறோம். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பங்களிலும், இந்த மாதிரியாக வகைபடுத்திப் பார்க்கும் கலாச்சாரம் எங்கும் பரவிக்கிடக்கிறது. 

நாம் விளையாட்டாக சிலரை இவ்வாறு விமர்சிப்போம். எங்க குடும்பத்திலே இவர் வித்தியாசமானவர் என நல்லவிதமாக பாரட்டியும்; மற்றும் சற்று அவர் மனம் நோகும்படியும் கூட சொல்வது நம் பழக்கம். 
உடன் வாழ்பவர் யார் என்பதை கூட அறியாது, காற்றின் வேகத்தில் பயணிக்கும் மனிதர்களை நாம் மூன்று வகைகளில் தரம்பிரித்துப் பார்க்க முடியும். 

  • முதல் வகை – எல்லோரும் செய்வதை போன்று தானும் செய்து வாழ்வில் தடம் பதிக்க மறுப்பவர்கள்.
  • இரண்டாம் வகை – எவரும் செய்யாததை சிறப்பாக செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்
  • மூன்றாம் வகை – எவராலும் செய்ய முடியாத ஒன்றை செய்து உலகையே உசுப்பிவிடும் கிரியா ஊக்கிகள்.

இவர்களில் நாம் எந்த வகையை சார்ந்தவர்கள்? நாம் படைக்கப்பட்டதே ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தான். அந்த நோக்கம் நிறைவேறும் வரை நாம் ஒடிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் ஓட மறுத்தால் நாம் ஓரங்கட்டப்படுவோம். 

                                       அறம், பொருள், இன்பம்….
              என மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கிறது திருக்குறள்
                                      அறிவு, ஆசை,  நம்பிக்கை……
என மூன்று விதமாக மனிதர்களை பிரித்துக் காட்டுகிறது புத்தரின் போதனை
                                     கொடுப்பவர், பெறுபவர் சமநிலைவாதி…..
             என மனிதர்களை மூன்று நிலைகளில் பிரிக்கிறது உளவியல்.


அடுத்தவரிடமிருந்து வித்தியாசங்களையும் சாதனைகளையும் பார்த்து பழகிப் போன நமக்கு, நம்முள் புதைந்திருக்கும் ஆற்றலை  தோண்டி எடுக்கவோ, தூசி தட்டி பார்க்கவோ நேரம் இல்லை. இன்று நாம்; விழிக்க மறுத்தால், எல்லோரும் ஓடும் பாதையில் நாமும் பயணித்து நமக்கான பாதையை கண்டுபிடிக்காமலே மறைந்து போவோம்.

புதுபாதைகளை, நமக்கான பாதைகளை தேடுவோம், கண்டுபிடிக்கும் வரை முயற்ச்சியைக் கைவிடாது, சவால்களை எதிர்கொண்டு புதுசாகப்தம் படைப்போம். எனவே நண்பா நாளை என்கின்ற எதிர்காலத்தை மறந்து விடு, இப்பொழுது என்னும் நிகழ்காலத்தை அனுபவித்து உலகை உசுப்பி விடு. 

                        புதுவகை மனிதராக சரித்திரத்தில் இடம்பிடிப்போம்!

                                                

 எழுத்து
ஜோஸ்பின் பிரைடா SSAM