கிறிஸ்துவின் திரு உடலாய் நாம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Veritas Tamil

இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா 22.06.2025
மு.வா: தொநூ: 14: 18-20
ப.பா:திபா: 110: 1. 2. 3. 4
இ.வா: 1 கொரி: 11: 23-26
ந.வா: லூக்: 9: 11b-17
கிறிஸ்துவின் திரு உடலாய் நாம்!
இன்று நம் தாய் திருஅவை கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. திருஅவையின் ஊற்றும் நங்கூரமுமாக இருப்பது இந்த நற்கருணையே. நமது தேவாலயங்கள் ஆற்றலும் அற்புதங்களும் நிறைந்த இடமாக இருக்க காரணம் இந்த நற்கருணைதான். எனவே தான் திருஅவை நற்கருணைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. நமது முன்னோர்கள் கோவிலுக்குள் நுழைந்த உடனேயே முழந்தாள்படியிட்டு தலைவணங்கி நற்கருணை பிரசன்னத்திற்கு மரியாதை செலுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களிடமிருந்தே நாமும் கற்றிருக்கிறோம். இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதென்ன? கிறிஸ்துவின் திருஉடலாம் நற்கருணையின் அப்பழுக்கற்ற ஒப்பிட முடியாத ஆற்றலையும் புனிதத்தையுமே.
இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்ன தன் வார்த்தையை இந்த நற்கருணை வழியாக இயேசு ஒவ்வொருநாளும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். இது என் உடல் உங்கள் உணவாகட்டும் என் இரத்தம் பானமாகட்டும் என்று சொல்லி அன்பிற்கு இதைவிட உச்சம் இல்லை என உணர்த்தியிருக்கிறார். ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு நமக்காகப் பிறந்து பலியாகி உயிர்த்து இந்த அன்பின் உச்சகட்டத்தையும் அதன் வெளிப்பாடாம் தன் உடனிருப்பையும் மெய்ப்பிக்கிறார். இந்த உண்மையை நாம் உணர்ந்து நன்றி கூறவே இவ்விழா நம்மை அழைக்கிறது.
திருப்பாடல் 8 லே கடவுள் வானதூதர்களை விட சற்றே குறைவாக மனிதர்களைப் படைத்துள்ளார் என வாசிக்கிறோம். ஆனால் ஆன்ம உணவாம் கிறிஸ்துவின் உடலையும் பாவம் போக்கும் பானமாம் அவரின் இரத்தத்தையும் பெறும் பேறு அந்த வானதூதர்களுக்கு கூட கிடைக்கவில்லை. அப்படியென்றால் நாம் வானதூதர்களைவிடவும் பேறுபெற்றவர்களாகிறோம் அல்லவா. இதை உணரத்தவறினால் நாமெல்லாம் அறிவிலிகளே.
இத்தகைய கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பெறும்போது நாம் எவ்வாறு இருக்கவேண்டும்?
முதலாவதாக ஆன்ம பசியுடையவர்களாய் இயேசுவை ஏற்க ஆவல் உள்ளவர்களாய் திருப்பலியின் மீது ஆர்வம் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்.
இரண்டாவதாக தகுதியான தயாரிப்போடு இறைஉடலை பெற வேண்டும். அதற்குதான் திருஅவை தன் கட்டளைகளில் கூறுகிறது "வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல ஒப்புரவு அருட்சாதனம் செய்து நற்கருணை உட்கொள்ள வேண்டும் " என்று. நம் பாவநிலையை உணர்ந்து அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு பெற்ற நல்ல மனநிலையோடு நாம் நற்கருணை உட்கொள்ள வேண்டும். இல்லாவிடில் நாம் நற்கருணையை அவசங்கை படுத்துவதற்கு சமமாகும்.
மூன்றாவதாக கிறிஸ்துவின் திருஉடலை உண்டு அவர் இரத்தத்தை பருகிய நாம் அவரின் மறையுடலாய் திகழ முயல வேண்டும். நம் அன்றாட வாழ்வில் அன்பை, மன்னிப்பை, பாவ நாட்டமில்லா வாழ்வை பிறருக்கு வெளிக்காட்ட வேண்டும். இல்லாவிடில் நற்கருணை நம்மில் நிறைவு பெறாது. நாம் நற்கருணை பெறுவதே வீண்.
கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்தப்பெருழாவிலே அவரை உண்டு அவராக வாழ அவராக மாற உறுதியெடுக்க வேண்டியது அவசியம். இயேசு என் நினைவாகச் செய்யுங்கள் என தன்னைக் கையளித்தார். நாமும் இவ்வழைப்பை ஏற்று அவரின் திருஉடலாக திரு இரத்தமாக மாறி நம் சக சகோதரிகளிடம் அன்பை நல்லுணர்வை நல்லுறவை பகிர்வை விதைத்து கிறிஸ்துவின் மறையுடலாய் வாழ முயற்சிப்போமா!
இறைவேண்டல் !
கிறிஸ்துவே எம்முள் வாரும். எம்மை உம்மைபோல மாற்றும். ஆமென்!
Daily Program
