உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்வோரே கிறிஸ்தவர்கள் | ஆர்.கே. சாமி | VeritasTamil

10 ஜூன் 2025
பொதுக்காலம் 10 ஆம் வாரம் –செவ்வாய்
2 கொரி 1: 18-22
மத்தேயு 5: 13-16
உலகிற்கு உப்பும் ஒளியுமாக வாழ்வோரே கிறிஸ்தவர்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகர மக்களிடம், “கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே” என்கின்றார். அவர் கொரிந்து நகர மக்களிடம் கட்டுக்கதைகளையோ அல்லது பொய்யான தகவல்களையோ எடுத்துச் சொல்லவில்லை. மாறாக வழியும் உண்மையும் வாழ்வுமாய் இருக்கின்றவரும் சொன்னபடியே உயிர்த்தெழுந்தவருமான இயேசு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டு எழுதுகிறார். உண்மைக்கு (இயேசுவுக்கு) சாட்சியம் அளிப்பதாக அவரது படிப்பினை அமைகிறது.
நற்செய்தி.
இன்றைய வாசகம் இயேசு ஆற்றிய மலைப்பொழிவின் ஒரு பகுதியாகத் தரப்பட்டுள்ளது. இயேசு, மக்களைப் பார்த்து, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்கிறார். இது "மண்ணுலகின் உப்பு" மற்றும் "உலகின் ஒளி" என்ற கருத்தை மையமாகக் கொண்டு, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி கடவுளின் ஞானத்தால் ஒளிர வேண்டும் என்ற சீடர்களின் பணியையும் வாழ்வையும் எடுத்துக்காட்டுகிறது.
சிந்தனைக்கு.
"நீங்கள் மண்ணலுகின் உப்பு"
(மத் 5:13): சீடர்களின் பணிவாழ்வை விவரிக்க இயேசு இரு உருவகங்களைப் பயன்படுத்துகிறார். அவை உப்பு மற்றும் ஒளி ஆகியவை ஆகும். உப்பு பொருள்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது மற்றும் சுவை சேர்க்கிறது, சீடர்கள் உலகத்தை ஊழலிலிருந்து பாதுகாத்து நேர்மறையான வளமான வாழ்வை மக்கள் பெற்றிட பணியாற்றவும் குரல் கொடுக்கவும் வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
* "நீங்கள் உலகத்தின் ஒளி"
(மத் 5:14): இயேசு சீடர்களை ஒளியுடன் ஒப்பிடுகிறார். ஒரு மலையின் மீது கட்டப்பட்ட ஒரு நகரம் அனைவருக்கும் தெரியும், இது சீடர்களின் செயல்களும் வாழ்க்கையும் நம்பிக்கை மற்றும் நன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* "உங்கள் ஒளி மற்றவர்கள் முன் ஒளிரட்டும்"
(மத் 5:16): இந்தப் பகுதி சீடர்கள் தங்கள் நற்செயல்களை மற்றவர்கள் காண அனுமதிக்க ஊக்குவிக்கிறது, கடவுளுக்கு மாட்சி சேர்க்க அவர்களைத் தூண்டுகிறது என பொருள் கொள்ளலாம்.
உலகில் நமது கிறிஸ்தவ வாழ்வை பிறருக்குச் பயன்தரும் மற்றும் உணவை அழுகாமல் பாதுகாக்கும் உப்புடன் ஒப்பிடலாம். ஏனென்றால், நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால், மற்றவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றத் தூண்டும் திறன் கொண்ட சிறந்த வெளிப்பாடு நாமே, ஆனால் உணவில் உப்பு அதிகமாக இருந்தால், அதன் சுவை பயங்கரமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நமது நோக்கங்கள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை மிகைப்படுத்தாமல் அடக்தோடும், தாழ்ச்சியோடும் செய்து முடிக்க வேண்டும்.
உப்பு தன் உருவத்தை வெளிப்படுத்துவதில்லை. அது உணவில் கலந்திருக்கும், ஆனால், அது இருப்பது கணகளுக்குத் தெரிவதில்லை. கிறிஸ்தவர்கள் தற்புகழ்ச்சிக்கு அடிமையாகக் கூடாது. மேலும், உப்பு உணவில் உள்ள அனைத்து உணவு பொருள்களோடும் சமமாக இருக்கும். அவ்வாறே நாமும் அனைவரோடும் சமமாகவே பழக வேண்டும். வேற்றுமை பாராட்டக் கூடாது.
ஒளி எப்போதும் நேர் கோட்டில்தான் பயணிக்கும். அதற்கு சூழலுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து செல்லத் தெரியாது. அதுபோல இயேசுவின் சீடர்கள் அனைவரும் எப்போதும் நேர்மையாகவும் நீதியோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கூறுவதைப்போல் நமது நடத்தையில் ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் துணிவுடன் கூறும் பண்பு மேலிட வேண்டும்.
இறைவேண்டல்
உலகிற்கு ஒளியாக வந்த ஆண்டவரே, நீர் விரும்பியப்படி நான் வாழும் பகுதியில் ஒளியாகவும் உப்பாகவும் திகழ்ந்திட அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
