ஏந்திழை - ஆத்மார்த்தி | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review

Enthilai

கதையின் நாயகன் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் விரும்புகிறான். அவள் பெயர் ஏந்திழை. அவளுக்காக அனைத்தும் செய்கிறான். அவளோ இவனைப் பெரிதாக எண்ணவே இல்லை. அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள். இருந்தும் இவன் அவளை விடவில்லை.  ஏந்திழையின் காதலன் விபத்தில் இறந்தவுடன் அவள் துறவறம் செல்கிறாள். இவனோ அவளை மறக்க முடியாமல் பழகும் பெண்கள் அனைவரிடமும் ஏந்திழையை காண்கிறான்.

முத்தத்தின் ஆகாச் சிறந்த தருணம் அதை யார் முதலில் கைவிடத் தொடங்குவது எனத் தீர்மானிப்பதுதான்.

ஏந்திழையும் அவனும் ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த புத்தகத்தைப் படிக்கிறாள் அவள். அது சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் நடக்கும் கதை அந்த கதையின் நாயகியின் பெயரும்  ஏந்திழை தான்.அக்கதையில் வரும்  ஏந்திழை மீது பெரும் காதல் கொள்கிறான் ஆங்கிலேய அதிகாரி/துரை  ஒருவன். இவளோ பாரம்பரிய பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள். எப்படியோ இருவருக்கும் திருமணம் நிச்சியக்கப் படுகிறது. அவளுக்கு பரிசாகக் கொடுக்க ஒரு மாளிகை காட்டுகிறான். கட்டுமான பணி துயரத்தில் முடிகிறது. 

தனக்கு வழங்கப்படுவதைக் கடனென்று உணர்கிற தருணங்களில் ஆடவன் நெகிழ்கிறான் என்ன செய்தாவது அந்தக் கடனைத் தீர்க்க முனைகிறான். அப்படியான  சந்தர்ப்பங்களில் அளவற்ற பேரன்பு ஒன்றைத் தருவதற்குத் சம்மதிக்கிறான். காமம் நேரடியாக அன்பை விளைவிக்காது.

ஒரு விபத்தில் ஒரு பெண்ணைக்  காப்பாற்றுகிறான் நாயகன் . அவள் இவனை விரும்ப ஆரம்பிகிறாள். இவனும் அவளை நேசிக்க ஆரம்பிக்கிறான். அவள் அவன் பணிபுரியும் பெரும் நிறுவனத்தின் முதன்மை பொறுப்பில் உள்ளவள்.இவன் ஒரே நாளில் அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் அமர்கிறான். அவள்தான் இதைச் செய்தது. 

தோல்வியை விடக் குரூரமானது ஆட்டத்தை மறுபடி ஆட நிர்ப்பந்தித்து.

அந்த புத்தகத்தின் கதையில் வரும் துரைக்கும் இந்த நாவலின் நாயகனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதை போலத்தான் அந்த  ஏந்திழைக்கும் இந்த  ஏந்திழைக்கும்.பல கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது.ஒரு பெரும் நிறுவனத்தின் உள் அரசியலை கண்முன் கொண்டுவந்துள்ளார் ஆத்மார்த்தி. அதைவிட ஒரு மனிதனின் காதல் வலியையும் அதன் விளைவையும் மிக எதார்த்தமாக சொல்லியுள்ளார்.  ஆத்மார்த்தி ஒரு கவிஞர் என்பதை இதிலும் பார்க்க முடிகிறது. ஒரு வித்யாசமான வாசிப்பு அனுபவம்.

இந்த புத்தக விமர்சனத்தைப் படித்தவுடன் புத்தகமே படித்த ஒரு உணர்வு என்று சொல்லும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவர் சசிதரன். இவர் எளிமையாகவும் ஆழமுடனும் அர்த்ததோடும் பாங்குடனும் எடுத்துக்கூறும் உணர்திறன் கொண்டவர்.

எழுத்தாளர் சசிதரன்

(www.sasitharan.blogspot.com)