நம் நல்லாயனொடு

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் - யோவான் 10:14. நல்ல ஆயன் என்று இயேசு சொல்வதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். ‘உங்களைக் கைவிடும் கூலிக்காரன் நான் அல்ல’. எந்நேரமும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்கிறார்.

ஆட்டு இடையர்களை பாருங்கள். ஆடுகளை காலையில் எழுந்ததும் பட்டியில் இருந்து கூட்டமாக ஓட்டிச் செல்வார். அவரது கண் காது மனம் முழுவதும் ஆடுகள் மட்டுமே இருக்கும். புல் உள்ள இடங்களைத் தேடிச் செல்வார்; அங்கு அவைகளை மேய விடுவார். தண்ணீர் உள்ள இடங்களை தேடி சென்று ஆடுகள் தாகம் தீர்க்க செய்வார். பின் அருகே இளைப்பாற செய்வார். மாலை நேரம் வந்ததும் மீண்டும் ஆடுகளை பட்டியில் கொண்டு போய் அடைப்பார். அதற்கு முன் ஆடுகளை எண்ணுவார். ஏதாவது ஒன்று குறைந்தால் அதை தேடி செல்வார். தன் குரலை எழுப்பி கூபிடுவார்.. ஆயனின் ஒலியைக் கேட்ட ஆடு, தன் குரலை மறுமொழியாகக் கொடுக்கும். பிறகு ஆட்டைக் கண்டுபிடித்து பட்டியில் சேர்ப்பார். மகிழ்ச்சி அடைவார். இதைப்போலத்தான் இயேசுவின் வாழ்க்கையும் இவ்வுலகில் அமைந்திருந்தது.

‘‘நல்ல ஆயன், தன் மக்களுக்காக உயிரைக் கொடுப்பான்’’ என்கிறார். ‘‘கூலிக்கு ஆடுகளை மேய்ப்பவன், ஓநாய் வருகின்றபொழுது, உயிருக்கு பயந்து ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு ஓடி விடுவான்’’ என்கிறார். ‘‘இந்தக் கொட்டிலைச் சேராத ஆடுகளும் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்து வழி நடத்த வேண்டும்’’ என்கிறார். மக்களை நல்வழிப்படுத்த விரும்புகிறார். தன் உயிரைக் கொடுத்தாவது இடையூறைக் களைந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறார். ஆயனுடைய குரலுக்கு ஆடுகள்  செவி மடுக்கும்.  அதுபோல இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் செவி மடுக்க வேண்டும்.

இயேசுவைப் பின்பற்றுவது என்பது கடினமானது அல்ல. தூய்மையான எண்ணம், அடுத்தவரை  அன்பு செய்யும் குணம், சுயநலமில்லாத மனம், எளிமை, உண்மை இருந்தால் இயேசுவை  பின்பற்றலாம். நாமும் இயேசுவின் மீது கண்களை பதிய வைப்போம்.  அவர் வழி நடப்போம்,  தெளிவடைவோம். அப்போது எந்த துன்பமும் நம்மை அச்சுறுத்தாது.

ஜெபம்: நல்ல ஆயனாகிய இயேசுவே உமக்கு நன்றி, நாங்கள் உம் குரலுக்கு செவி கொடுக்க விரும்புகிறோம்.  உம் குரலை கேட்க எங்கள் காதுகளை திறந்தருளும் ஆண்டவரே. உம் மந்தையிலிருந்து எங்களை பிரிக்க தூண்டும் அனைத்து பாவங்களையும் மேற்கொண்டு உம் பிள்ளைகளாக வாழ தூய ஆவியின் துணைதாரும். ஆமென்.