ஆண்டவரோடு நாம் இருந்தால்

உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார் - செப்பனியா 3:17. ஆண்டவரை அதிகாலையில் தேடுவோம். அவரை அன்பு செய்வோம். அவருக்கு விருப்பமான வாழ்வு வாழ்வோம். அப்படி நாம் செய்தால்... 

1. ஆண்டவர் நம்மோடு  இருந்தால், நம் நடுவில் இருந்தால், நாம் பாவம் செய்யமாட்டோம். ஆண்டவர் யோசேப்போடே இருந்தபடியினால் அவர் பாவம் செய்யவில்லை பாவத்துக்கு விலகி ஓடினார்.

2. ஆண்டவர் நம்மோடு இருந்தால் அங்கு பயத்திற்கு இடமில்லை. ஆண்டவர் மோயிசனோடு இருந்தபடியினால் பார்வோனுக்கு எதிராக பயப்படவில்லை. பயமின்றி பேசினார். ஆண்டவர்  எலியாவோடு  இருந்தபடியினால் எலியா ஆகாப் அரசனுக்கு  பயப்படவில்லை. ஆண்டவர் பவுலுடன்  இருந்தபடியினால் அகிரிப்பாவுக்கு அவர் பயப்படவில்லை.

3. ஆண்டவர் நம்மோடு இருந்தால் அங்கு வேதனைகளுக்கு இடமில்லை. பெரும்பாடுள்ள பெண் இயேசுவுக்கு அருகில் வந்த படியினால் அவள் வேதனை அவளை விட்டு நீங்கியது. 

4. ஆண்டவர் நம்மோடு இருந்தால் தடைகளுக்கு இடமில்லை. ஆண்டவர் இஸ்ரேல் மக்களுக்கு  நடுவில் இருந்த படியினால் செங்கடலில் அவர்களுக்கு பாதை கிடைத்தது. அவர்களுக்கு  யோர்தான் நதியில் வழி கிடைத்தது. தடையாயிருந்த  எரிகோ  கோட்டையின் மதில்கள் உடைந்து அவர்களுக்கு வழி கிடைத்தது. ஆண்டவரை ஒவ்வொரு நாளும் தேடுவோம். அவர் நம் நடுவில் இருந்தால் எல்லா தடைகளும் பயங்களும், பாவங்களும், வேதனைகளும் நீங்கி மகிழ்வோடு வாழுவோம்.

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. ஆண்டவரே எங்களோடு வந்து தங்கும். இந்த இருள் சூழ்ந்த உலகில், பாவமின்றி நாங்கள் வாழ எங்களோடு தங்கும் ஆண்டவரே. பயமின்றி எங்கள் உரிமைகளை பெற எங்களோடு தங்கும் ஆண்டவரே. எங்கள் வேதனைகளில் இருந்து நாங்கள் மீண்டு வர எங்களோடு தங்கும் ஆண்டவரே. எங்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்து முன் செல்ல எங்களோடு தங்கும் ஆண்டவரே.   ஆமென்.