சமயம் சாந்தம் பெறட்டும் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

சமயம் என்றால் சாந்தம், ஏனென்றால் அன்பையும் அமைதியையும் போதிப்பதே சமயம்.

உண்மை நிலவரத்தை அறியாமல் உணர்ச்சி வேகத்தில் செயல்படும் கும்பல்களால் பல உயிர்கள் அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

பர்குந்தா என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலைச் சார்ந்த 27 வயது பெண் ஆவார். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள் ஷா டோ ஷாம்சிரா மசூதிக்குள் தொழுகைக்குச் சென்றபோது, குரானை எரித்துவிட்டதாகத் தவறாக அப்பெண்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் கல்லால் எறிந்து, தடியால் தாக்கிக் கொல்லப்பட்டார். அதிலும் ஆத்திரம் அடங்காத மதவாதக் கும்பல் அப்பெண்ணை எரித்துச் சாம்பலாக்கியது அந்தக் காணொளியைப் பார்க்கின்றபோது கல்மனம் படைத்தவர்களின் இதயத்திலிருந்தும் நிச்சயம் இரக்கம் கசிந்திருக்கும்.

அப்பெண்ணின் இறப்பிற்குப் பிறகு நடந்த விசாரணையில் பர்குந்தா ஒரு நிரபராதி என்று தெரிய வந்தது. பல பெண்களின் குரல் அந்த அக்கிரமச் செயலுக்கு எதிராக ஒங்கி ஒலித்தது. அந்நாட்டுப் பெண்கள் பலரும் தங்கள் நாட்டு மரபுக்கு எதிராக இறந்த உடலைத் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

அமைதியின் வழியில் ஒரு மனிதரை அழைத்துச் செல்லாத சமயம் உண்மையான சமயமாக இருக்க முடியாது.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.