கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளபட தயாரா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 22 திங்கள்
I: 1 தெச:  4: 13-17
II: திபா: 96: 1,3. 4-5. 11-12. 13
III: லூக்: 4: 16-30

தூய ஆவியாரின் உடனிருப்பு நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாகவும் ஆணிவேராகவும்  இருக்கிறது. தூய ஆவியாரின்  வல்லமையும் ஆற்றலும் நம்முடைய அன்றாட வாழ்வில் இருக்கும்பொழுது நம் வாழ்வில் இறைவன் வகுத்த திட்டங்களை நம்மால் நிறைவேற்ற   முடியும். தூய ஆவியால் தான் இந்தத் திருஅவை பிறந்தது. தூய ஆவியார் படைப்பின் தொடக்கத்திலேயே தண்ணீரில் அசைவாடினார் என்று வாசிக்கிறோம். அந்த ஆவிதான் இவ்வுலகம் உருவாவதற்கு ஆற்றலாய் இருந்தது. அந்த ஆவிதான் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதனுக்கு உயிர்மூச்சாகச் சென்று உயிர் கொடுத்தது. சீனாய் மலையில் இறங்கி வந்து இஸ்ரயேல் மக்களை உடன் படிக்கை மக்களாக மாற்றியதும் இந்த தூய ஆவி தான். இஸ்ரேல் மக்கள் தங்களுக்கு அரசர் வேண்டும் என்று கடவுளிடம் முறையிட்டபோது முதல் அரசர் சவுல் மற்றும் இரண்டாம் அரசர் தாவீது போன்றவர்களை அருள்பொழிவு செய்ததும் தூய ஆவியார். 

தூய ஆவியார் ஆற்றலையும் வல்லமையையும் ஞானத்தையும் விவேகத்தையும்  கொடுக்கின்றார். இதே தூய ஆவியார்தான் ஆண்டவர் இயேசு இந்த மண்ணில் பிறக்க அன்னை மரியாவின் கருவில் இயேசுவை கருவுற வைத்தார். அதே தூய ஆவி தான் 30 ஆண்டுகளாக தன்னை ஆயத்தப்படுத்தி தன்னுடைய இறையாட்சி பணியைத் தொடங்குவதற்கு முன்பாக இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வெண்புறா போல இறங்கி வந்து திடப்படுத்தினார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பிறகு யூதர்களுக்கு அஞ்சி நடுங்கிய இயேசுவின் சீடர்களை அன்னை மரியாள் ஒன்றாக அழைத்து ஜெபிக்க வழிகாட்டினார். அப்பொழுது தூய ஆவியின் வல்லமை நிறைவாக இவர்களுக்குப் பொழியப்பட்டது. தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு எந்த யூதர்களுக்கு அஞ்சி பயந்து நடுங்கினார்களோ, அதை யூதர்களுக்கு முன்பாக வல்லமையோடு நற்செய்தியைப் பறைசாற்றி பணி செய்தனர். இவ்வாறாக தூய ஆவியார் நம் வாழ்வை திடப்படுத்தும் வல்லமையுள்ள   இறைவனாக இருக்கின்றார். 

இன்றைய நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரால் நிரம்ப்பெற்றவராய் தான் பூமிக்கு வந்ததற்கான நோக்கத்தை உரக்கக் கூறிய பகுதி ததரப்பட்டுள்ளது. தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட இயேசு  இலக்குத் தெளிவைப் பெற்றார்.இறையாட்சியை அமைப்பதற்கான  தன் நோக்கத்தை நோக்கி பயணத்தைத் துணிவுடன் தொடங்கினார்.

அன்புக்குரியவர்களே! கடவுளின் ஆவி நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் தூய ஆவியால் வழிநடத்தப்பட தூய ஆவியின் தூண்டுதலை ஆண்டவர் இயேசு உணர்ந்ததைப் போல நாமும்   உணரவேண்டும். தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இயேசு திருமுழுக்கின் வழியாக யோர்தான் ஆற்றங்கரையில் ஆவியின் அருள்பொழிவினை  பெற்று, தன்னுடைய  இறையாட்சிப் பணியை மிகுந்த ஆற்றலோடு செய்தார். அதே போல் நம்முடைய அன்றாட வாழ்விலும் தூய ஆவியார் நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக நம்மை அருள்பொழிவு செய்துள்ளார். 

இயேசு தூய ஆவியின்  வழியாக அருள்பொழிவு பெற்ற பிறகு "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்"  என்று தன்னுடைய இறையாட்சி பணியை தொடங்கியது போல, நாமும் இயேசுவைப் போல இறையாட்சி பணியை நற்செய்திப் பணியாகச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். வல்லமையோடு நற்செய்தி   பணியை செய்திட  தூய ஆவியின் தூண்டுதலை உணர்ந்து தூய உள்ளத்தோடு நம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் : 
வல்லமையுள்ள ஆண்டவரே இயேசுவே! தூய ஆவியாரின் தூண்டுதலை  எங்கள் வாழ்வில் உணர்ந்து, உம்மை போல நாங்களும் தூயவாழ்வுக்குச் சான்று பகர எங்களை அருள்பொழிவு செய்யும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்