வாழ்க்கைப் புயல்களில் இயேசுவே நம் நம்பிக்கை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
எரேமியா 28: 1-17
மத்தேயு 14: 22-36
வாழ்க்கைப் புயல்களில் இயேசுவே நம் நம்பிக்கை!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், பொய் இறைவாக்கின்னான அனனியா மக்களிடம், "இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் பாபிலோனின் நுகம் முறியடிக்கப்படும்; சிறைபிடிக்கப்பட்டவர்கள் திரும்பிவருவார்கள்" என்று பொய்யான நம்பிக்கையை அறிவிக்கிறார். இதைக் கேட்ட எரேமியா, அது உண்மையாக இருந்தால் நன்றே எனினும், ஓர் இறைவாக்கினரின் வார்த்தை நிறைவேறினால்தான் அவர் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது தெரியவரும் என்று கூறுகிறார்.
அனனியா, எரேமியாவின் கழுத்திலிருந்த மர நுகத்தை உடைத்தபோது, ஆண்டவர் எரேமியாவின் மூலம், "மர நுகத்திற்குப் பதிலாக இரும்பு நுகத்தை வைத்திருக்கிறேன்" என்று அறிவிக்கிறார். மேலும், ஆண்டவர் அனுப்பாதபோதும் பொய்யாக மக்களை நம்ப வைத்ததால், அனனியா அதே ஆண்டில் இறப்பார் என்று இறைவாக்குக் கூறப்படுகிறது. ஆண்டவரின் வார்த்தையின்படியே, அனனியா இரண்டு மாதங்களுக்குள் இறந்துவிட்டதை இன்று நினைவூட்டப்படுகிறோம்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை படகில் அனுப்பிவிட்டு, தனிமையில் மலைக்குச் சென்று இறைவேண்டலில் ஈடுபடுகிறார். இரவில், அலைகளால் படகு கடலில் அலைகழிக்கப்படுகிறது. சீடர்கள் அஞ்சி நடுங்கும் வேளை,இஇயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். சீடர்கள் அவரைக் கண்டு பயப்படும்போது, "தைரியமாயிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்" என்று ஆறுதல் கூறுகிறார்.
பேதுரு ஆண்டவரின் வார்த்தையை நம்பி நீரின் மேல் நடக்கத் தொடங்குகிறார். ஆனால் காற்றைக் கண்டு பயந்ததால் மூழ்க ஆரம்பிக்கிறார். உடனே இயேசு அவரைக் காப்பாற்றி, "குறைந்த நம்பிக்கையுள்ளவனே, ஏன் ஐயப்பட்டாய்?" என்று கேட்கிறார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்குகிறது. அப்போது சீடர்கள், "மெய்யாகவே நீர் இறைமகன்" என்று இயேசுவை வணங்குகிறார்கள்.
பின்னர் அவர்கள் கெனசரேத்து பகுதியில் வந்தபோது, மக்கள் இயேசுவை அடையாளம் கண்டு நோயாளிகளை அவரிடம் கொண்டு வருகிறார்கள். அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்ட அனைவரும் குணமடைகிறார்கள்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையும் ஆழந்து தியானிக்குப்போது, இறைவார்த்தை மீது நிலைத்திருக்கும் துணிவையும், ஆண்டவர் மீது முழு நம்பிக்கை வைப்பதின் அவசியத்தையும் நமக்கு கடவுள் எடுத்துரைக்கிறார்.
முதல் வாசகத்தில், அனனியா மக்களுக்கு இனிமையாகக் கேட்கும் பொய்யான நம்பிக்கையை அறிவிக்கிறார். ஆனால் எரேமியா, மக்களுக்கு பிடிக்காவிட்டாலும், இறைவன் கொடுத்த உண்மையான செய்தியைத் துணிவுடன் அறிவிக்கிறார். இறைவனின் வார்த்தை எப்போதும் உண்மையானது; அது நமக்குப் பிடித்ததாக இல்லாவிட்டாலும், நம்மை வாழ்வின் சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பது திண்ணம்.
நற்செய்தியில், சீடர்கள் படகில் புயலை எதிர்கொள்கின்றனர். அச்சத்தின் மத்தியில் இயேசு கடல்மேல் நடந்து வந்து, "துணிவாயிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்" என்று கூறுகிறார். படகில் இருந்த பன்னிரு சீடர்களில் பேதுரு மட்டுமே இயேசுவைப் பற்றிக்கொள்ள கடலில் குதிக்கிறார். மற்றவர் உயிரைக் காப்பாறிக்கொள்ள படகைப் பற்றிக்கொண்டனர்.
பேதுரு ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் நடந்தாலும், காற்றையும் அலைகளையும் பார்த்தபோது பயந்து மூழ்கத் தொடங்குகிறார். உடனே இயேசு அவரதுகரம் பிடித்து தூக்குகிறார்.
உடனே இயேசு அவரைக் காப்பாற்றி, "குறைந்த நம்பிக்கையுள்ளவனே, ஏன் ஐயப்பட்டாய்?" என்று கேட்கிறார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்குகிறது. அப்போது சீடர்கள், "மெய்யாகவே நீர் இறைமகன்" என்று இயேசுவை வணங்குகிறார்கள்.
இந்த நற்செய்தி ஒரு அற்புத நிகழ்ச்சியை மட்டும் பதிவு செய்யவில்லை. நம் ஆன்மீக வாழ்வின் ஆழமான உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. சீடர்கள் படகில் இருந்தனர்; ஆனால் எதிர்க்காற்றால் துன்பப்பட்டனர். படகு என்பது திருஅவையையும் நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிக்கிறது.
வாழ்க்கையில் சோதனைகள், நோய்கள், பொருளாதார நெருக்கடிகள், குடும்பப் பிரச்சினைகள், மரணங்கள் போன்ற "எதிர்க்காற்றுகள்" வீசக்கூடும். அத்தருணங்களில் இறைவன் நம்மை மறந்துவிட்டார் என்று சில நேரங்களில் தோன்றலாம். ஆனால் அவர் நம்மைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார்; சரியான நேரத்தில் நம்மிடம் வருகிறார்.
யூதர்களின் சிந்தனையில் கடல் என்பது தீமை, பயம், அசுத்த ஆவிகளின் வசிப்பிடம் என்பதாகும். ஆனால், குழப்பத்தின் மீது அவருக்கு முழு அதிகாரம் இருப்பதையும், நம் வாழ்க்கையின் பிரச்சினைகள் அவருக்கு தடையல்ல என்பதையும்,ரஎந்த இருளும், எந்தப் புயலும் அவரை வெல்ல முடியாது என்பதைக் காட்டுகிறது நற்செய்தி நமக்கு விவரிக்கிறது.
அடுத்து, நான்தான்; அஞ்சாதீர்கள்" என்ற இயேசுவின் வார்த்தை (I AM) என்பது பழைய ஏற்பாட்டில் கடவுள் தம்மை வெளிப்படுத்திய பெயரை நினைவூட்டுகிறது (விப 3:14).
நிறைவாக, "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!" என்பது பேதுருவின் மிகச் சிறிய ஆனால் மிக வல்லமையான இறைவேண்டலாக உள்ளது. நாம், உண்மையான மனதுடன் இறைவனை அழைத்தால் போதும். இயேசு உடனே கையை நீட்டி நம்மை அச்சத்திலிருந்து விடுவிப்பார்.
இறைவேண்டல்.
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவராகிய இயேசுவே, வாழ்க்கையின் புயல்களும் சோதனைகளும் என்னை அச்சுறுத்தும் வேளைகளில், உம்மீது என் பார்வையை நிலைநிறுத்தும் அருளைத் தாரும். ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம்
+60122285452
