ஆண்டவரைக் காண வேண்டுமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-முதல் வாரம் செவ்வாய்
I: திப :2:36-41
II: திபா :33:4-5. 18-19, 20, 22
III:யோவா:20: 11-18

ஆண்டவரைக் காணும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் ஆண்டவரை நம் அனைவராலும் உணரமுடியும். அவ்வாறு நாம் உணரும் போது ஆண்டவரை பிறரில் நம்மால் காணமுடியும். " தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் " என இயேசு மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் மலைப்பொழிவில் கூறியுள்ளார். நாமும் ஆண்டவரைக் காண வேண்டுமா நமக்கு தூய உள்ளம் வேண்டும். தூய உள்ளமே மனமாற்றத்தையும் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஆவலையும் தாகத்தையும் நமக்குத் தரும் என்ற கருத்தை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "நான் ஆண்டவரைக் கண்டேன் " என மகதலா மரியா அறிக்கையிடுவதைக் காண்கிறோம். அவருடைய உண்மையான மனமாற்ற வாழ்வு கல்வாரி பயணத்தின் இறுதி நொடி வரை இயேசுவை பின்பற்ற செய்தது. அவருடைய இறப்பின் துக்கம் மரியாவை பெரிதும் பாதித்தது. துயரம் மிகுந்தவராய் இயேசுவின் கல்லறைக்கு சென்றாள். இயேசுவை விட்டு நீங்கக்கூடாது எனுமளவிற்கு ஆழமாய் அன்பு கூர்ந்தார். எனவேதான் அவருடைய உடலைக் காணாத போது பதறிப் போனார்.யாராவது அவரைத் தூக்கிச் சென்றுவிட்டார்களா என ஏங்கித் தேடினாள். அந்த ஏக்கம் அந்த தாகம் " மரியா " என இயேசு அழைத்தவுடன் " ரபூனி" என இயேசுவை அடையாளம் காணச் செய்தது. 

இன்று மரியாவின் இந்த அற்புதமான அனுபவம் இயேசுவின் மேல் நமக்குள்ள தாகத்தின் அளவை அறியத் தூண்டுகிறது. நம்முடைய மனமாற்றம் நீடித்ததா?  மகதலா மரியாவைப் போல இறுதிவரை இருக்கக்கூடியதா?  ஒவ்வொரு நாளும் நம்மை பெயர் சொல்லி அழைக்கும் இறைவனின் குரலை உணரச் செய்கிறதா? என நம்மையே நாம் ஆழமாக சோதித்தறிய வேண்டும். அவ்வாறு நம் மனக்கண்ணால் இயேசுவைக் காண இயலுமானால் நிச்சயம் நம் புறக் கண்ணாலும் இயேசுவைக் காண இயலும். 

இன்றைய முதல் வாசகத்திலும் புனித பேதுரு மனமாற்றத்தின் தூண்டுகோலாய் இருந்து இயேசுவை யூதர்கள் பலர் மனதால் உணரும்படி செய்கிறார். திருமுழுக்கு பெற்று ஆண்டவருடைய மக்களாகும்படிச் செய்கிறார். ஆம் நாம் ஆண்டவரைக் கண்டால் பிறரும் ஆண்டவரைக் காண நம்மால் வழிகாட்ட முடியும்.

ஆண்டவரை தூய உள்ளத்தோடும் உண்மையான மனமாற்றத்தோடும் ஏக்கத்தோடும் காண ஆசிக்கும் போது, நம் கண்முன் நிற்கும் சகோதரர்களின் வாயிலாக நாம் ஆண்டவரைக் காணலாம். நம்முடைய கனிவான பார்வை என்றும் ஆண்டவரை நம் கண்முன் கொண்டுவரும். ஆண்டவரைக் காணத் தயாரா?

இறைவேண்டல் 
அன்பு இறைவா!  மகதலா மரியாவைப் போல உம்மை நாடித் தேடவும், உம்மை பிறரில் கண்டு " நான் ஆண்டவரைக் கண்டேன் " என அறிக்கையிடவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்