சொல் மனதை வெல்லும் | Veritas Tamil

சொல் மனதை வெல்லும் 

பெரிய ஞானி ஒருவர் ஒரு கூட்டத்தில் மக்களோடு உரையாடிக்கொண்டிருந்தார்.

"நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும்  வல்லமை இருக்கிறது. சொற்கள்  மற்றவர்களிடம் தாக்கத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்  பெற்றவை" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது  கூட்டத்தின் நடுவே இருந்த ஒருவர் "நீங்கள் கூறுகின்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வார்த்தைகளுக்கு வல்லமையில்லை என்று எனக்குத் தெரியும். எங்களை  ஏமாற்ற முடியாது" என்று எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்.  அதைக் கேட்ட ஞானி

“முட்டாளே! கூட்டத்தில் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் எதையாவது உளறாதே உட்கார். புரிந்து பேசு' என்று கூறினார்.

இப்படி ஞானி பேசிய பிறகு கேட்டவரின் முகம் சுருங்கிப் போனது. அதிக ஆத்திரமும், எரிச்சலும்இ கோபமும் அடைந்தார். மக்கள் ஏளனமாகப் பார்த்துச் சிரித்து விட்டார்களே என்ற வருத்தமும் அவர் மனத்தில் ஏற்பட்டது. பிறகு, "ஞானியான நீங்கள் இப்படி மரியாதை இல்லாமல் பேசக்கூடாது" என்று மிகுந்த வேதனையோடும் கோபத்தோடும் கூறினார். இதைக் கவனமாகக் கேட்ட ஞானி மென்மையாக

"என்னை மன்னித்து விடுங்கள்". ஏதோ ஒரு வேகத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். நான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. மிகவும் வருந்துகிறேன்" என்று கூறினார். இதைக் கேட்டவுடன் கேள்வி கேட்டவர் முகமலர்ச்சி அடைந்தார்.

மீண்டும் ஞானி பேச ஆரம்பித்தார்: “நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை இப்பொழுதே நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நான் 'முட்டாளே' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது நீங்கள் கோபம் அடைந்தீர்கள். ''மன்னித்துக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது உங்கள் கோபம் தணிந்ததும், வார்த்தைக்கு வல்லமை உண்டு என்பதை எடுத்துக் காட்டுகின்றன. உண்மைதானே" என்றார்
வார்த்தைக்கு வல்லமையுண்டு. நாம் பேசும் சொல் உள்ளார்ந்த பொருள் நிறைந்ததாக, பிறர் மனம் வருத்தாத தாக, சிறந்த வெளிப்பாடாக அமைந்தால் அதுவே பிறர் மனத்தை வெல்லும் சொல்லாக அமையும்.

"பேச்சுக்குப் பேராற்றல் உண்டு. அந்த ஆற்றலால் அகிலத்தையே தன் பக்கம் ஈர்க்க முடியும். பேச்சினால் சமுதாய மாற்றத்தை உண்டுபண்ண முடியும் என்பது வரலாறு கண்ட உண்மை." 


பேசுவோம், உள்ளதை உள்ளவாறு பேசுவோம். நம் பேச்சால் பிறர் ஆளுமையும் அறிவும் பெற்றிட பேசுவோம். ஓரு கருத்தை குறித்து மனம் திறந்து பேசும் போது தான், நமது புரிதலும், அறிவும் விசாலமாகும். பேச வாய்ப்பு கிடைத்து விட்டது என்பதற்காக எதையும் பேசக் கூடாது. வாழ்வாக்கும் வார்த்தைகளை பிறரை வாழ்விக்கும் வார்த்தைகளை நமதாக்க வேண்டும். எனவே பேசுவோம் பேச்சால் நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் ஞானியாக்குவோம்.

வார்த்தையாலும், வாழ்வாழும் வெல்வோம் மனித இதயங்களை.