மாற்றுத்திறனாளிகள் உலகை மாற்றும் திறனாளிகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.03.2024

மாற்றுத்திறனாளிகள் உலகை மாற்றும் திறனாளிகள்!

இறையோன் எழுதிய கவிதையிலே
இவனோர் எழுத்துப் பிழை!

என்றே உலகம் நினைக்கயிலே
இவனோர் இரும்பு உலை!

முடங்கின அங்கம்! 
மூடின விழிகள்.
ஆயினும் குறையென ஒன்றுமில்லை!

தடங்களை எல்லாம் 
தகர்த்து எறிய
திலைநிமிர்வான் அவன் இமயமலை!

புதைக்கிற விதைகள்! எழுவதுபோல
முளைத்ததே இவன் பிறப்பு!

சிதைக்கிற போதே சிலையென மாறும்
நெஞ்சுரம் இவன் சிறப்பு!

இருப்பதை வைத்து  இலக்கினை நோக்கும் மாற்றமே 
இவன் உயிர்த் துடிப்பு! 

நெருப்பெனப் பற்றி
தடைகளைத்தாண்டி
களத்திலே தான்  இருப்பு!

வெட்டிய கரும்பு!  
எரிமலைக் குழம்பு! வெடித்துச் சிதறிய மத்தாப்பு!

கட்டினை வெட்டி
மாற்றத் துடிக்கும் பட்டாம் பூச்சியின் பரிதவிப்பு!

ஒட்டிய உறவுகள்
உலகம் வெறுப்பினும் உடைத்துப் புறப்படும் 
அந்த நதி! 

எட்டிய திசைகளை
மாற்றும் திறத்திலே
இவன் பெயர் மாற்றும் திறனாளிகள்!

அடடா.! என்ற அனுதாபங்களை.
அறவே வெறுத்து தலை நிமிர்ந்து.

கொடடா.. வாய்ப்பு! 
மாற்றிக காட்டுவோம்! கொட்டும் முரசு! 
இவன் துடிப்பு!

எடுடா.. மேளம்! 
அடிடா.. தாளம்! 
எழுகவே
மாற்றுத்திறனாளிகள்!

எதிரே தெரியும்
உலகினைப் புதிதாய்
உறுதியால் மாற்றும் திறனாளிகள்!

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி