கடவுள் கற்றுத்தருவதை கற்றுக்கொள்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

18 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 3ஆம் வாரம் -  வியாழன்

தி. பணிகள்   8: 26-40                                    

யோவான்  6: 44-51

முதல் வாசகம்.

ஒரு நாள், எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர் அவரது,  தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலை சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது இயேசு கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்களில் ஒருவரான பிலிப்புவை  ஆண்டவரின் தூதர் அந்த அமைச்சரிடம் அனுப்பினார்.

பிலிப்பு அமைச்சரை அணுகி,  அவர் என்ன படிக்கிறார் என்பது அவருக்குப் புரிகிறதா என்று கேட்டார். அதற்கு,   அமைச்சரோ,  “யாராவது விளக்கிக் கூறாவிட்டால் எவ்வாறு புரிந்து  கொள்ள முடியும்?” என்று மறுமொழியாகக் கூறினார். 

பிலிப்பு அவருடன் சேர்ந்து தேரில் அவர் படித்துக்கொண்டிருந்தபு பகுதியை விளக்கினார்.  ஏசாயா நூலில்  துன்பப்படும் ஊழியரைப் பற்றிய பகுதியிலிருந்து தொடங்கி, இயேசு கிறிஸ்துவின் செய்தியை அவருக்குக் புரிய வைக்க பிலிப்பு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.  

அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடரும்போது, ஓரிடத்தில்  கொஞ்சம் தண்ணீரைக் கண்டார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்க,  அதற்குப் பிலிப்புவோ,  “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றுரைத்தார்.  உடனே,  அவருக்கு திருமுழுக்கு அளிக்க, பிலிப்பு ஒப்புக்கொண்டு, அமைச்சருக்குத் திருமுழுக்கு அளித்தார்.

திருமுழுக்கிற்குப்  பிறகு, ஆண்டவருடைய  ஆவியாரால்  திடீரென்று பிலிப்பு மறைக்கப்பட்டார்.  புதிய கிறிஸ்தவரான அமைச்சர் மகிழ்ச்சியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தார். 

பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.


நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், கடவுள் யாரை அழைத்துள்ளாரோ,  அவர்களால் மட்டுமே    தன்னிடம்  வர முடியும் என்பதை இயேசு யூதர்களுக்கு விளக்குகிறார். மேலும், பழைய ஏற்பாட்டின் இறைவாக்குப் பகுதியை (எசா 54:13; எரே 31:33,34) இயேசு மேற்கோள்காட்டி, கடவுள் தம் மக்களுக்கு நேரடியாகக் கற்பிக்கிறார் என்பது பற்றியும்  எடுத்துரைக்கிறார்.  இதன் வழி, கடவுளின் படிப்பினையைக்  கேட்டு, அவரிடம் கற்றுக்கொள்பவர்கள்  அவரோடு உறவு கொள்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று இயேசு தெளிவுப்படுதுகின்றார். இயேசு  தந்தையைப் பார்த்தவர் என்ற முறையில் கடவுளுடனான அவரது  சிறப்பு உறவை விவரிக்கிறார். தொடர்ந்து நிலைவாழ்வைப் பற்றி  உரைக்கும்போது,  அவரில் நம்பிக்கைகு கொள்பவர்களுக்கு  அது கிட்டும் என்றும்,  ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்றும் உறுதிப்பட கூறுகிறார்.  

நிறைவாக, அவர் உலக வாழ்க்கைக்காகத் தனது சதையைக் கொடுப்பதைப் பற்றி உருவகமாகக் கூறி, ‘எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்’ என்று முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் தூய ஆவியாரின் பணியைப் பார்க்கிறோம். அவரே முன்னின்று சீடர்களை வழிநடத்துகிறார்.   எங்கெல்லாம்   தூய ஆவியார்   அழைத்துச் செல்கிறாரோ, அங்கெல்லாம், பிலிப்பு  மறுக்காமல் சென்றதையும், தூய ஆவியார் பணித்தப்படியே பிலிப்பு செயல்பட்டதையும் நூலின் ஆசிரியர் லூக்கா விவரிக்கிறார். இறைவார்த்தை மீது தாகம் கொள்பவர்களைத் தூய ஆவியார் வெறுமனே விட்டுவிடுவதில்லை. அத்தாகத்திற்கான தண்ணீரை அவர் பருகக் கொடுக்கிறார். 

மேலும், “யாராவது விளக்காவிட்டால் எவ்வாறு கடவுளின் வார்த்தையை என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்ற எத்தியோப்பிய  நிதியமைச்சரின் கேள்வி நமக்கு நல்ல பாடமாக அமைகிறது. விவலியம் தூய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட மறைநூல். எனவே, அதனை விளக்குவதற்கும் தூய ஆவியாரின் துணை தேவை என்பதை மறுக்க இயலாது. இறைவாரத்தையை இன்று திரித்துக் கூறுவோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நாங்கள் கூறுவதுதான் ‘சரி’ என்று வாதிடுவோர் ஆயரமாயிரம். புனித பவுல் அடிகள் அவரது திருமுகங்களில் போலி போதகர்கள் பற்றியும் இறைமக்கள் மத்தியில் அவர்கள் விதைத்து வரும் குழப்பங்கள் பற்றியும் பல இடங்களில் எச்சரித்துள்ளார். இன்று நம்மில் பலரும் இப்படிப்பட்ட பொலி போதகர்களின் படிப்பினைக்குச் செவிசாய்ப்பதைக் காண்கிறோம். போலி போதகர்கள் சாத்தானின் கருவிகள்.

இதற்கிடையில் நற்செய்தியில் ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்றதொரு அழுத்தமான போதனையை இயேசு அளிக்கிறார். இயேசு மனுவுருவானது, இறைவாக்கினர்களைப் போல்   போதனைக்கானதும் மக்களை நல்வழி படுத்துவதற்கானது மட்டுமல்ல. அவர்  மனுக்குலத்திற்கு 
வாழ்வு தருவதற்காக மனுவுருவானார்.   அந்த வாழ்வையும் நிறைவாகத் தருவதற்காக வந்தார்.   அந்த வாழ்வை நமக்கு அருள அவர் தயங்குவதில்லை. 

ஆனாலும், “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது” “ என்னும் இறைமகன் இயேசுவின் கூற்றை நாம் மறந்துவிட முடியாது. தந்தையின் திருவுளத்தினால் நாம் இயேசுவை அறிந்துள்ளோம். ஆகவே, பிலிப்புவைப்போல் நம்மை வழிநடத்தும் தூய ஆவியாரையும், தம் மகனாகிய கிறிஸ்துவில் நம்மை இணைத்திருக்கும் தந்தோயோடும், தம் உடலையே நமக்கு உணவாக அளித்துவரும் மகனாகிய இயேசுவோடும் ஒன்றிருத்திருப்பதுவே முதன்மையான கிறிஸ்தவ வாழ்வு.

நிறைவாக, ‘கடவுள்தாமே கற்றுத்தருவார்’ என்று இயேசு அறிவுறுத்தியதை நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம்,கடவுளைச் சார்ந்து வாழ்வோருக்குக் கடவுளே சிறந்த ஆசான். அவரது பிள்ளைகளாகிய நாம் நடக்க வேண்டிய பாதையைக்  காட்டுவதோடு,  வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளையும் அவரே நமக்குக் கற்றுத் தருகிறார் என்பதில் ஐயமில்லை. யோசேப்புக்கும், மரியாவுக்கும், பவுல் அடியார், மற்றும் அனைத்து இறைவாக்கினர்களுக்கும் அவரே வழிகாட்டினார். நமக்கும் அவ்வாறே செய்வார் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம்.

இறைவேண்டல்.

“கடவுள்தானே அனைவருக்கும் கற்றுத்தருவார்” என்றுரைத்த ஆண்டவரே, உமது படிப்பினைக்கு ஏற்ப, கடவுள் சார்பாக இருந்து, அவரது திருவுளப்படி வாழும் வரத்தை நல்க உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்
 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452