எது உண்மையான நம்பிக்கை? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 13 வாரம் வியாழன் 
I: தொநூ: 22: 1-19
II: திபா: 116: 1-2. 3-4. 5-6. 8-9
III: மத்: 9: 1-8

ஒருவர் கடவுளிடம் கோவிலில் இறைவேண்டல் செய்யச்  சென்றார். அவருக்கு நீண்ட நாள் ஒரு ஆசை. எப்படியாவது புதிய வீடு கட்டி விட வேண்டும் என்று. எனவே வீடு கட்ட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் செபித்துக் கொண்டே வந்தார்.  ஆனால் வீடு கட்டதேவையான பொருளாதாரத்தை ஈட்ட ,உழைக்க அவர் மனம் சோம்பேறித்தனமாக இருந்தது.எனவே  கடவுள் அவருடைய குரலைக் கேட்கவில்லை. ஏனெனில் அவரின் நம்பிக்கை முதிர்ச்சியற்ற நம்பிக்கை. பலமுறை கடவுளிடம் நம்முடைய ஆசைகளை வெளிப்படுத்துகிறோம்.ஆனால் அது உண்மையான நம்பிக்கை அல்ல. நம்முடைய விண்ணப்பங்களை கடவுளிடம் எடுத்துரைத்தாலும் அது நேர்த்திக்கடன் என்ற முறையில் பண்டமாற்று முறை போல இருக்க கூடாது. ஏனெனில் கடவுள் நம் தேவைகள் ஒவ்வொன்றையும் அறிந்திருக்கின்றார். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கையோடு நாம் முயற்சி செய்து கடவுளிடம் வரும்பொழுது வாழ்வில் வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.

பல நேரங்களில் நம்முடைய அன்றாட வாழ்வில் உண்மையான நம்பிக்கை எது என்பதைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் இருக்கின்றோம். வேண்டுதல் செய்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் மட்டும்தான் உண்மையான இறைநம்பிக்கை என்று நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையான இறைநம்பிக்கை என்பது நம்மையே முழுமையாகத் தியாக உள்ளத்தோடு அர்ப்பணிப்பது.

அர்ப்பணிப்பு நிறைந்த தியாகம் உள்ளம் உண்மையான இறைநம்பிக்கைக்கு  வழிவகுக்கின்றது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைய முதல் வாசகத்தில் நாம்  வாசித்த   ஆபிரகாமின் ஆழமான நம்பிக்கை. ஆபிரகாம் ஈசாக்கை வயது முதிர்ந்த காலத்தில் கொடையாகப் பெற்றார். கடவுளின் ஆசீர்வாதத்தால் ஈசாக்கு ஆபிரகாமுக்கு மகனாகப் பிறந்தார். இப்படி தவமாய் தவமிருந்து பெற்ற தன் மகனையே பலியாகக் கடவுள் கேட்டபொழுது, அவர் தியாகம் நிறைந்த அர்ப்பணிப்பு உள்ளதோடு தன் மகனைப் பலி கொடுக்க முன் வந்தார். ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்ட கடவுள் அவரின்  மகனைகௌ    காப்பாற்றி,  ஆட்டைப் பலியிட கடவுள்  அறிவுறுத்தினார். எனவே கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையின் பொருட்டு அவரின் வழிமரபு  முழுவதையும் நிறைவாக ஆசிர்வதித்தார்.

நம்முடைய வாழ்வில் கடவுளின் ஆசீர்வாதத்தை நிறைவாகப் பெற அர்பணிப்பு உள்ளத்தோடு இறைநம்பிக்கையில் சிறந்து விளங்க முயற்சி  செய்வோம். நம்முடைய நம்பிக்கை செயலாக்கம் பெற்ற நம்பிக்கையாக இருக்க வேண்டும். செயல் இல்லாத நம்பிக்கை முழுமையான கடவுளின் அருளைப் பெற்றுத் தராது.

இன்றைய நற்செய்தியில் முடக்குவாதமுற்றவரின்     நம்பிக்கையை பற்றியும் அவருக்கு உதவி செய்த நண்பர்களின் உதவி பற்றியும் நாம் காண்கிறோம். முடக்குவாத முற்றவரின் நண்பர்கள் மேலோட்டமான நம்பிக்கை மட்டும் கொண்டிருந்தால் அங்கு வல்லச்செயல்கள் நடந்திருக்காது. ஆனால் அவர்களின் செயல்பாடுகளோடு கூடிய இறை நம்பிக்கைதான் முடக்குவாதமுற்றவருக்கு நலம் அளித்தது.

நமது அன்றாட வாழ்விலும் நம்முடைய நம்பிக்கையை மேலோட்டமாக கடவுளிடம் வைத்துக்கொள்ளாமல், தொடக்ககால கிறிஸ்தவர்களைப் போல உயிர்த்துடிப்புள்ள நம்பிக்கையாளர்களாக மாற முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக கடவுளுடைய அன்பையும் அருளையும் நிறைவாகப் பெறமுடியும். நாம் ஆலயத்திற்கு செல்வது கடவுளுடைய அன்பில் நிலைத்திருந்து தியாக உள்ளத்தோடு கடவுளை நம்புவதற்காக இருக்க வேண்டும். ஆலயத்திற்கு செல்லுகின்ற நேரமெல்லாம் நாம் கடவுளோடு இணைந்திருந்து நம்பிக்கை வாழ்வுக்குச் சான்று பகர முயற்சி செய்வோம். ஆபிரகாம் கொண்டிருந்த  நம்பிக்கை நிறைந்த மனநிலையையும், முடக்குவாத முற்றவரின் நம்பிக்கை நிறைந்த மனநிலையையும், முடக்குவாதமுற்றவருக்கு உதவி செய்த  நண்பர்களின் நம்பிக்கை மனநிலையும் நம் வாழ்வில் பிரதிபலிக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இந்த புதிய மாதத்தில் கடவுளின் அருளையும் ஆசியையும் நாமும் நம் குடும்பமும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெறுவர். எனவே நம்பிக்கை நிறைந்த தூய உள்ளத்தோடு இறைவனை முழுமையாக நம்புவோம்.

 இறைவேண்டல் :
இறைவா எங்கள் வாழ்வில் உண்மையான இறைநம்பிக்கை எது என்பதைத் தெளிவாகப் பகுத்தறிந்து செயல்படத் தேவையான ஞானத்தைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்